சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Sunday, July 31, 2005

கதை எண் 23 - பீர்பால் - ஏமாற்றாதே, ஏமாறாதே

Image hosted by Photobucket.com


கபாலிபுரம் என்ற மாநகரில் கபிலன் என்ற ஓவியன் இருந்தான். ஓவியம் வரைவதில் மிகுந்த திறமை உடையவன். யாரைப் பார்த்தாலும் அவர்களை அப்படியே ஓவியம் வரைந்து விடுவான். ஓவியத்திற்கும் அந்த ஆளுக்கும் சிறு வேறுபாடு கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு பொருத்தமாக ஓவியம் வரைவான்.

பணக்காரர்களை ஓவியமாக வரைந்து கொடுப்பான். அந்த ஓவியத்தை நல்ல விலை கொடுத்து வாங்குவர். அதைத் தங்கள் வீட்டில் அழகாக மாட்டி வைப்பர்.

அந்த ஊரில் ராஜன் என்ற செல்வன் இருந்தான். யாருக்கும் எதையும் தராத கருமி அவன். அவனுடைய பிறந்த நாள் விழா வந்தது. நிறைய உறவினர்கள் விழாவிற்கு வந்திருந்தனர்.


ராஜனின் இயல்பை அறியாத கபிலன் அந்த விழாவிற்குச் சென்றான். ராஜனை வணங்கிய அவன், ""ஐயா! நான் சிறந்த ஓவியன். உங்களை அப்படியே ஓவியமாக வரைந்து தருகிறேன். உங்களையே நேரில் பார்ப்பது போல இருக்கும். அதை வரவேற்பு அறையில் அழகாக மாட்டி வைக்கலாம். அந்த ஓவியத்திற்கு எவ்வளவு பணம் தருவீர்கள்?'' என்று கேட்டான்.

"உறவினர்கள் தன்னைப் பெருமையாக நினைக்க வேண்டும். பிறகு பணம் தராமல் இவனை ஏமாற்றலாம்' என்று நினைத்தான் ராஜன்.

""நீ வரையும் ஓவியம் என்னைப் போலவே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் ஆயிரம் பணம் தருகிறேன். இல்லாவிட்டால் பணம் எதுவும் தரமாட்டேன்,'' என்றான்.

""உங்களைப் போலவே ஓவியம் வரைந்து ஒரு வாரத்தில் தருகிறேன். குறை ஏதும் இருந்தால் பணம் தர வேண்டாம்,'' என்றான் ஓவியன்.

ராஜனைப் போலவே ஓவியம் வரைந்து எடுத்து வந்தான். அந்த ஓவியத்தை மேலும் கீழும் பார்த்தான் ராஜன்.

""இந்த ஓவியம் என்னைப் போலவா இருக்கிறது? நீயே பார். இவ்வளவு நரையா என் தலையில் உள்ளது? என்னைக் கிழவனாக்கிவிட்டாயே... நான் இருப்பது போல இளமையாக ஓவியத்தை வரைந்து கொண்டு வா,'' என்றான்.

அந்த ஓவியத்தை எடுத்துச் சென்றான் கபிலன். அதில் சில மாற்றங்கள் செய்தான். அந்த ஓவியத்தை மீண்டும் ராஜனிடம் கொண்டு வந்தான்.

""என்னைத் தானே ஓவியம் வரையச் சொன்னேன். நீ எவனோ ஓர் இளைஞனை வரைந்து உள்ளாயே... இளமையும் முதுமையும் கலந்தது போல உன்னால் வரைய முடியாதா?'' என்று கேட்டான்.

அந்த ஓவியத்தில் மேலும் சில மாற்றங்களைச் செய்தான் கபிலன்.

""இந்த ஓவிய மும் என்னைப் போல இல்லை. வேறு ஓவியம் வரைந்து கொண்டு வா,'' என்றான் ராஜன்.

"எப்படி வரைந்தாலும் இவன் ஓவியத்தை வாங்கப் போவது இல்லை. ஏதேனும் குறை சொல்லித் திருப்பி அனுப்பப் போகிறான். என்ன செய்வது?' என்று சிந்தித்தான் கபிலன்.

பீர்பாலிடம் வந்து நடந்ததை சொன்னான், ""அந்தச் செல்வன் ஓவியம் வாங்காமல் என்னை ஏமாற்றுகிறான். என் உழைப்பிற்கு நீங்கள்தான் ஊதியம் வாங்கித் தர வேண்டும்,'' என்று வேண்டினான்.

ராஜனை வரவழைத்தார் பீர்பால்.

""ஏன் இந்த ஓவியனை ஏமாற்ற நினைக்கிறீர். பலமுறை திருத்தம் செய்தும் ஓவியத்தை வாங்க மறுக்கிறீராமே?'' என்று கேட்டார்.

""அமைச்சரே! நான் யாரையும் ஏமாற்றவில்லை. என்னைப் போல ஓவியம் வரைந்து தா. ஆயிரம் பணம் தருகிறேன் என்று இவனிடம் சொன்னேன். இவன் வரைந்த ஓவியம் என்னைப் போல இல்லை. அதனால்தான் பணம் தரவில்லை. என்னைப் போலவே ஓவியம் வரைந்து தரச் சொல்லுங்கள். ஆயிரம் பணத்திற்குப் பதில் இரண்டாயிரமே தருகிறேன்,'' என்றான் ராஜன்.

""ஓவியம் என்றாலே சிறு சிறு குறைகள் இருக்கத்தானே செய்யும். இது உங்களுக்குத் தெரியாதா?'' என்று கேட்டார் பீர்பால்.

""அதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னைப் போலவே ஓவியம் வரைந்து தரச் சொல்லுங்கள். இரண்டு பங்கு பணம் தருகிறேன். குறை இருந்தால் ஒரு பணமும் தரமாட்டேன்,'' என்று அடாவடியாகப் பேசினான் அவன்.

""ஒரு வாரம் சென்று வாருங்கள். உங்களைப் போலவே ஓவியம் இங்கு இருக்கும். அதில் குறை இருந்தால் பணம் தரவேண்டாம்,'' என்றார் பீர்பால்.

"அந்த ஓவியத்திலும் எப்படியும் குறை கண்டுபிடித்து பணம் தராமல் தப்பிக்கலாம்' என்று புறப்பட்டான் ராஜன்.

""நீ ஓவியம் ஏதும் வரைய வேண்டாம். அடுத்த வாரம் இங்கு வா. பணத்துடன் செல்லலாம்,'' என்றார்.

ஒரு வாரம் சென்றது.

பீர்பாலின் மாளிகைக்கு ஓவியன் முதலில் வந்தான். பிறகு ராஜன் வந்தான்.

""உங்களைப் போலவே வரையப்பட்ட ஓவியம் இது. திரைச் சீலையால் மூடப்பட்டுள்ளது. சீலையை விலக்கிப் பாருங்கள். சிறு குறையும் உங்களால் கண்டுபிடிக்க முடியாது,'' என்றார்.

"எப்படியும் வரைந்து இருக்கட்டும். குறை கண்டுபிடித்து விடலாம்' என்று திரையை விலக்கினான் அவன்.

அங்கே அவனைப் போலவே ஓவியம் இருந்தது. ஆனால், அந்த ஓவியம் அசைந்தது; கண்களை இமைத்தது.

"அது ஓவியம் அல்ல. எதிரே உள்ளவர் வடிவத்தை அப்படியே காட்டும் நிலைக்கண்ணாடி. அதில் தன் வடிவம் தெரிகிறது' என்பது அவனுக்குப் புரிந்தது.

""அமைச்சரே! இது ஓவியம் அல்ல. முகம் பார்க்கும் கண்ணாடி,'' என்றான் அவன்.

""கண்ணாடியில்தான் நம் வடிவம் அப்படியே தெரியும். குறை எதுவும் காணமுடியாது. ஓவியம் என்றால் குறைகள் இருக்கத்தான் செய்யும். இந்தக் கண்ணாடியை எடுத்துச் செல்லுங்கள். ஓவியனுக்கு இரண்டாயிரம் பணம் தாருங்கள்,'' என்றார் பீர்பால்.

""அமைச்சரே! இது நியாயம் அல்ல!'' என்றான் அவன்.

""நியாயத்தைப் பற்றி நீங்கள் பேசாதீர்கள். குறையே இல்லாமல் யாராலும் ஓவியம் வரைய முடியாது. இதை அறிந்த நீங்கள் என்ன செய்தீர்கள்? இந்த ஓவியங்களை எத்தனை முறை வரையச் சொன்னீர்கள்?

""நம் வடிவம் கண்ணாடியில்தான் குறை இன்றித் தெரியும். இரண்டாயிரம் பணம் தந்து இதை வாங்கிச் செல்லுங்கள். இல்லையேல் ஏமாற்ற முயன்றதற்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்,'' என்றார் பீர்பால்.

"ஆயிரம் பணம் கொடுத்து அந்த ஓவியத்தையே வாங்கி இருக்கலாம். வீட்டில் அழகாக மாட்டி வைத்து இருக்கலாம். எல்லாரும் பார்த்து மகிழ்ந்து இருப்பர். பத்துப் பணம் பெறாத கண்ணாடி இது. இதற்கு இரண்டாயிரம் பணம் தர வேண்டி வந்ததே' என்று தன்னையே நொந்து கொண்டான் அவன். ஓவியனிடம் இரண்டாயிரம் பணம் தந்தான். அந்தக் கண்ணாடியை எடுத்துக் கொண்டு வருத்தத்துடன் சென்றான் பணக்காரன்.

Saturday, July 30, 2005

கதை எண் 22 - சீலனின் தந்திரம்!

Image hosted by Photobucket.com

வைரபுரி என்ற நாட்டில் பல கோடிகளுக்கு அதிபனான சீலன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் தயாளகுணம் கொண்டவன். அந்நாட்டு மன்னன் பர்வதனனின் ஆருயிர் நண்பன். பொக்கிஷத்தில் பணக்குறைவு ஏற்பட்ட போதெல்லாம் மன்னனுக்குத் தேவைப்பட்ட பணத்தைக் கொடுத்து பிறகு வாங்கிக் கொள்வான் சீலன். அப்படி கிடைத்த வட்டிப் பணத்தை ஏழை எளியவர்களுக்கு கொடுத்து உதவி வந்தான் சீலன்.

ஓவியக் கலையில் கைதேர்ந்தவன் சீலன். மற்ற கலைகளிலும் அவனுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அழகான சிற்பங்கள், வண்ண ஓவியங்கள், வேலைப்பாடுடன் கூடிய கைவினைப் பொருள்கள் என்றால் என்ன விலை கொடுத்தாவது வாங்கி விடுவான். ஆனால், அப்படி வாங்கும் பொருள்களை யார் கேட்டாலும் கொடுக்கவும் மாட்டான்.

மன்னன் பர்வதனுக்கு, சீலனின் இந்தப் பிடிவாதக் குணம் ஒன்றுதான் பிடிக்காமல் இருந்தது. அதனால் சீலனிடமிருந்த அழகிய பொருள்களில் ஒன்றைக் கூடப் பெறமுடியாமல் போனது.


ஒரு நாள் சீலனைக் காண வாலிபன் ஒருவன் வந்தான். கிழிந்த ஆடைகளை அணிந்து தாடி வளர்த்துக் கொண்டிருந்த போதிலும் அவன் உயர் குடியில் பிறந்தவன் என்று சீலனுக்கு தெரிந்துவிட்டது. அவன் அந்த இளைஞனை வரவேற்று உட்காரும் படி சொன்னான்.

""ஐயா! என்னை இந்தக் கோலத்தில் கண்டவர்கள் எல்லாரும் விரட்டினார்களே ஒழிய என்னை "உட்கார்' என்று இதுவரை யாரும் சொல்லியதில்லை. மிக்க நன்றி. நீங்கள் கலை அம்சம் கொண்ட பொருள்களை விலைக்கு வாங்கிக் கொள்வதாகக் கேள்விப்பட்டேன்.

""என் பெயர் சக்தி. என் முன்னோர்கள் ஜமீன்தாரர்கள். எங்களுக்குச் சொந்தமான அபூர்வ ஓவியம் ஒன்றைத் தங்களுக்கு விற்க எடுத்து வந்துள்ளேன்,'' எனக் கூறித் தான் கொண்டு வந்த ஓவியத்தை அவனிடம் காட்டினான்.

அந்த ஓவியத்தைக் கண்டு சீலன் பிரமித்தான். ஒரு தாய் குழந்தையை எடுத்துக் கொஞ்சுவது போன்ற படம் அது. குழந்தை தன் பொக்கை வாயை விரித்து சிரிப்பது மிக அழகாக தீட்டப்பட்டிருந்தது. வண்ணங்கள் கண்களுக்கு குளிர்ச்சி தரும் விதமாகத் தீட்டப்பட்டிருந்தன.

""இது கற்பனையில் தோன்றிய படமாக இல்லை. நேரில் நடப்பதை பார்த்து இதனை வரைந்திருக்கிறார் ஓவியர். என்ன நான் சொல்வது சரிதானே?'' என்று கேட்டான்.

""நீங்கள் நினைத்தது சரியே. அந்த ஓவியத்தில் உள்ள பெண்மணி என் தாய். அந்தக் குழந்தைநானே. இதனை வரைந்த ஓவியனுக்கு என் தந்தை நுõறு ஏக்கர் நிலம் பரிசாக அளித்தார். ஆனால், இப்போதோ நான் அந்த ஓவியத்தை விற்றுப் பிழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்,'' என்றான்.

""இந்த ஓவியத்திற்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கிறேன். நீயே இதன் விலையைச் சொல்,'' என்றான் சீலன்.

""எனக்கு இதற்காக நுõறு பவுன்கள் கொடுத்தால் போதும். அதைக் கொண்டு நான் முன்னுக்கு வந்துவிடுவேன்,'' என்றான்.

""இவ்வளவு குறைவாகக் கேட்கிறாயே...'' என்று கேட்டார் சீலன். ""அதற்கு மேல் நான் கேட்கமாட்டேன்!'' என்றான் சக்தி. நுõறு பவுன்களைக் கொடுத்து அனுப்பினான் சீலன்.

அன்று மாலை சீலன் தான் வாங்கிய ஓவியத்தை மன்னனிடம் காட்டினான். ""ஆகா! எவ்வளவு அழகாக இருக்கிறது. இதை எனக்குக் கொடுத்துவிடு,'' என்றான் மன்னன்.

""நான்தான் இந்த மாதிரி பொருள்களை யாருக்கும் கொடுக்கமாட்டேன் என்பது உங்களுக்குத் தெரியுமே. நீங்கள் கேட்டும் பயனில்லை!'' என்று கூறிவிட்டான்.

சில வருடங்கள் சென்றன. ஒரு நாள் சீலன் மன்னனுடன் பேசிக் கொண்டிருக்கையில் அங்கு வந்தான் சக்தி. அவனை அன்புடன் வரவேற்று மன்னனுக்கும் அறிமுகம் செய்து வைத்தான் சீலன்.

""நீ எப்படி இருக்கிறாய்?'' என்று விசாரித்தான் சீலன்.

""ஐயா! நீங்கள் கொடுத்த நுõறு பவுன்களைக் கொண்டு வியாபாரம் செய்யத் தொடங்கி இப்போது உயர் நிலையில் இருக்கிறேன். உங்களிடம் ஒரு உதவியை நாடியே இப்போது வந்திருக்கிறேன்,'' என்றான்.

""என்ன வேண்டும்?''

""நான் அந்த ஓவியத்தைத் தங்களுக்கு விற்ற நாளிலிருந்து எனக்கு மன நிம்மதியே இல்லை. தயவு செய்து அதை நீங்கள் எனக்குத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். அதற்காக நீங்கள் என்ன கேட்டாலும் நான் கொடுக்கிறேன்,'' என்றான்.

சக்தியின் மனநிலை அவனுக்கு புரிந்தது. ஆனால், மன்னனோ தான் கேட்டும் அந்த ஓவியத்தைக் கொடுக்க முடியாது என்று கூறிய சீலன் என்ன செய்யப்போகிறான் என்று கூர்ந்து கவனிக்கலானான்.

""நான் ஒருமுறை ஒரு பொருளை வாங்கிவிட்டால் அதை யாருக்கும் கொடுக்கமாட்டேன். இது என் கொள்கை,'' என்றான்.

""என்தாயின் மீது வைத்துள்ள பாசத்தால்தான் அந்த ஓவியத்தைக் கொடுக்கும்படிக் கேட்கிறேன். எனக்காக உங்கள் கொள்கையைக் கொஞ்சம் தளர்த்துங்கள்,'' என்று வேண்டினான்.

அவனுக்கு எப்படி உதவலாம் என யோசித்த சீலன், ""சக்தி நீ உன் தாயின் மீது எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறாய் என்பது தெரிகிறது. அதனால் உனக்கு ஒரு வாய்ப்பு அளிக்கிறேன். நான் ஓவியக் கலையில் ஓரளவு பயிற்சி பெற்றவன் என்பது உனக்கும் மற்றவர்களுக்கும் தெரியும்.

""அதனால் நீ கொடுத்த ஓவியம் போலவே நான் மற்றொரு ஓவியம் தீட்டுகிறேன். இதற்கு ஒருவார காலம் பிடிக்கும். இரண்டு ஓவியங்களில் எது முதலாவது வரையப்பட்டது என்று கண்டுபிடித்து உன் ஓவியத்தை எடுத்துச் செல். இந்தப் பரீட்சைக்கு நம் மன்னரே நடுவர்!'' என்றான். சக்தி அதற்குச் சம்மதித்தான்.

சீலன் ஒரு வார காலத்தில் சக்தி கொடுத்த ஓவியம் போல மற்றொரு ஓவியத்தை வரைந்துவிட்டான். இரு ஓவியங்களையும் அவன் குறித்த நாளன்று மன்னன் முன் கொண்டு போய் வைத்தான். அதேநாளில் அங்கு வந்தான் சக்தி.

அந்த இரு ஓவியங்களையும் பார்த்துவிட்டு தான் சீலனுக்கு விற்ற ஓவியம் எது என்பதைக் கண்டு பிடித்துக் காட்டினான்.

""சக்தி! நீ வென்று விட்டாய். அதுதான் நீ எனக்கு விற்ற ஓவியம். அதனை நீ எடுத்துக் கொண்டு போகலாம்,'' என்றான்.

மன்னனும் அந்த இரு ஓவியங்களையும் மாறி மாறிப் பார்த்து விட்டு, ""இரண்டு ஓவியங்களும் ஒன்று போலத்தானே உள்ளன. எப்படி ஓவியத்தைக் கண்டுபிடித்தாய்?'' என்று கேட்டான்.

""அரசே! சீலன் மிகச் சிறந்த ஓவியர் என்பதில் சந்தேகமே இல்லை. அவர் எவ்வளவு கூர்ந்து கவனித்து ஓவியம் தீட்டி இருக்கிறார் என்பதற்கு இந்த ஓவியத்தில் என் தாயின் இடது காதின் ஓரமாக உள்ள சிறு மச்சத்தைக் கூட ஓவியத்தில் தீட்டி இருப்பதை எடுத்துக் காட்டலாம்.

""நான் விற்ற படத்தில் என் தாயாரின் மூக்குத்திக் கல் நீல நிறத்தில் உள்ளது. ஆனால், சீலன் தீட்டிய ஓவியத்தில் அது சிவப்பு நிறத்தில் உள்ளது. இந்த சிறு வித்தியாசத்தைக் கொண்டு என் ஓவியம் எது என்று கண்டு கொண்டேன். ஆனால், இந்தச் சிறிய தவறை கைதேர்ந்த ஓவியரான சீலன் எப்படிச் செய்தார் என்றுதான் எனக்குப் புரியவில்லை,'' என்று கூறி அவர்களை வணங்கிவிட்டுத் தன் ஓவியத்தை எடுத்துக் கொண்டு சென்றான்.

""சீலா... நீ ஏன் தவறு செய்தாய் என்பது சக்திக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால், எனக்குத் தெரியும். தாய் மீது அன்பு கொண்டு சக்தி படத்தை கேட்டதும் உனக்கு அவன் மீது இரக்கம் வந்துவிட்டது. அதே சமயம் உடனே கொடுத்துவிட்டால், என்னுடைய கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால் போட்டி வைப்பது போல் வைத்து, அதற்கு என்னையே நீதிபதியாக்கி வேண்டுமென்றே தவறு செய்வதுபோல் செய்து சக்தியிடம் படத்தை கொடுத்து விட்டாய். உன்னுடைய திறமையை பாராட்டுகிறேன்!'' என்றான்.

பிரச்னை தீர்ந்ததை எண்ணி நிம்மதி பெருமூச்சுவிட்டான் சீலன்.

Monday, July 25, 2005

கதை எண் 21 - தெனாலிராமன் (1) - பிறந்த நாள் பரிசு

Image hosted by Photobucket.com

மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.

முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த துõதுவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது.

மறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர்.


பிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர்.

மற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.

தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.

அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.

அவையினர் கேலியாகச் சிரித்தனர்.

அரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், ""தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா?'' என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, ""ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?'' எனக் கேட்டார்.

""அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்.

""அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!'' என்றான்.

அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, ""ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.

""பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,'' என உத்தரவிட்டார்.

தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.

அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.

Sunday, July 24, 2005

கதை எண் 20 - வல்லவனுக்கு வல்லவன்

மன்னர் மகிபாலனின் அரசவையில் பாலா என்ற விகடகவி இருந்தார். விகடகவியின் புத்திக்கூர்மை மன்னருக்கு மிகவும் பிடித்துப் போனதால் அவரை தனது அரசாங்க ஆலோசகராகவும் நியமித்துக் கொண்டார்.

விகடகவி பாலா அரசாங்க ஆலோசகராக இருப்பது அரண்மனை அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பொறாமையை உண்டு பண்ணியது. விகடகவியை
எப்படியாவது அரண்மனையை விட்டே ஒழித்துவிட வேண்டும் என அமைச்சர்களும், அதிகாரிகளும் தங்களுக்குள் முடிவெடுத்தனர்.

அன்று மன்னர் சபையில் அறிஞர் பெருமக்கள் பலரும் வீற்றிருந்தனர். அப்போது அரசபை மன்றத்திற்கு அயல்நாட்டு அறிஞர் ஒருவர் வந்தார்.

அவரைக் கண்டதும் அமைச்சர்களும், அதிகாரிகளும் சந்தோஷத்தால் துள்ளி எழுந்தனர். ஏனென்றால் அவர்கள் தான் தங்கள் திட்டத்தின்படி அந்த அறிஞரை வரவழைத்திருந்தனர்.

""அரசே! நான் சாஸ்திரங்களையும், பல கலைகளையும் கற்று சேர்ந்தவன். மேலும் நான் ஒரு சிறந்த விகடகவி. என்னோடு யாருமே போட்டியிட முடியாது. எனது திறமையை நிரூபிக்கவே உங்களைத் தேடி வந்துள்ளேன்,'' என்று கூறினார்.


இவர்களின் கபட நாடகத்தை அறியாத மன்னரும், ""வாருங்கள் விகடகவியே! எங்கள் அரசபையிலும் உங்களைப் போன்று ஒரு விகடகவி இருக்கிறார். இருந்தாலும் உங்கள் திறமையை இந்த சபையினில் காட்டுங்கள்,'' என்று கூறினார்.

""அரசே! உங்கள் நாட்டு விகடகவியோடு நான் போட்டியிட வேண்டும். அதற்கு நீங்கள் அனுமதி தர வேண்டும்,'' என்று பணிவுடன் வேண்டி நின்றார்.

அதைக் கேட்ட மன்னரும் ஹ... ஹா... ஹா... என்று பலமாக சிரித்தார்.

""அரசபை விகடகவியே நீங்கள் மிகச் சிறந்த அறிவாளி என்று கேள்விப்பட்டேன். கணிதத்திலும் தேர்ச்சி பெற்றவர் என்று அறிந்தேன். அதனால் உங்கள் தலைமுடியை ஒவ்வொன்றாக எண்ணி அதன் மொத்த எண்ணிக்கையையும் உங்களால் கூற முடியுமா?'' என்றார்.

அயல்நாட்டு அறிஞரின் கேள்வி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. ""தலைமுடியை எப்படி எண்ண முடியும்?'' என்று ஒருவருக்கொருவர் தங்களை கேட்டுக் கொண்டனர்.

""ஐயா! அறிஞரே! நான் மொத்த முடியை எண்ணி முடிப்பதற்கு ஒரு நாள் கால அவகாசம் வேண்டும். நாளை என் தலைமுடியின் எண்ணிக்கையை இந்த அரசபையில் தெரிவிக்கிறேன்'' என்று கூறினார் பாலா.

அதைக் கேட்ட அதிகாரிகளும், அமைச்சர்களும், ""ஒரு நாள் என்ன பத்து நாட்கள் கால அவகாசம் எடுத்துக் கொண்டாலும் பாலா தன் தலைமுடியை எண்ண முடியாது,'' என்று தங்களுக்குள் கூறிக் கொண்டனர்.

அடுத்த நாள் சபை கூடியது—

அனைவரும் விகடகவி பாலாஎன்ன செய்யப் போகிறார் என்ற ஆவலோடு இருந்தனர்.

""அறிஞர் பெருமானே! நீங்கள் விதித்தப்படி நான் எனது தலைமுடியை எண்ணி முடித்துவிட்டேன். ஆனால் அதற்குள் ஒரு நிபந்தனை. அந்த நிபந்தனைக்கு நீங்கள் கட்டுப்பட்டாக வேண்டும்.

""எனது எண்ணிக்கை தவறாக இருந்தால் நான் எனது தலையை இழக்க தயாராக இருக்கிறேன். ஆனால், சரியாக இருந்தால் நீங்கள் உங்கள் தலையை இழக்க வேண்டும். சம்மதமா?'' என்றார்.

""பாலா! உமது நிபந்தனையை நான் ஏற்றுக் கொள்கிறேன். நீர் உமது தலைமுடியின் எண்ணிக்கையை கூறும்,'' என்று கம்பீரமாக குரல் கொடுத்தார்.

பாலாவின் பதிலைக் கேட்க எல்லாரும் ஆவலாக இருக்க, அவர் மவுனமாக நின்றபடி தன் தலையின் மேலிருந்த தலைப்பாகையை கழற்றி எடுக்க, அவர் தலையை கண்ட அனைவரும் "கொல்' என்று சிரித்து விட்டனர்.

பாலா மொட்டை தலையுடன் நின்று கொண்டிருந்தார். அவர் தலையின் முன்னே இரண்டு முடிகள் மட்டும் நீண்டு கொண்டிருந்தன.

""அறிஞர் பெருமானே! என் தலையில் இரண்டு முடிகள் தான் இருக்கின்றன. நீங்களும் நன்றாக எண்ணிப் பாருங்கள்,'' என்று கூறினார்.

பாலாவை ஒழிப்பதற்கு திட்டம் போட்ட அதிகாரிகளும், அமைச்சர்களும் வெட்கத்தால் தலை குனிந்தனர். தன் தலைக்கு ஆபத்து வந்துவிட்டதை நினைத்த அயல்நாட்டு அறிஞரின் உடலெல்லாம் நடுங்கியது.

""அறிஞரே! நீங்கள் அச்சத்தால் நடுங்குவது நீங்கள் கற்ற கல்விக்கு அழகல்ல! உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. இனிமேலாவது என்னை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அலைபவர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு இந்த மாதிரி செயல்களில் ஈடுபடாதீர்கள்,'' என்று கூறினார்.

மன்னர் விகடகவி பாலாவுக்கு பல பரிசுகள் கொடுத்து தனது பாராட்டையும் தெரிவித்தார்.

Saturday, July 23, 2005

கதை எண் 19 - பெற்றோர் சொன்னா கேட்கணும்

சிறுகம்பையூர் என்ற ஊரில் ஏழை மனிதர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். இந்த ஏழை மனிதரிடம் செல்வம் இல்லையென்றாலும் தன் குழந்தைகளை அன்பு காட்டி அரவணைத்து நல்ல வழியில் வளர்த்து ஆளாக்கினார். தான் இறக்கும் தருவாயில் தன் பிள்ளைகளை அழைத்தார்.

""குழந்தைகளே... உங்களிடம் கொடுப்பதற்கு என்னிடம் பெரிதாக சொத்துக்கள் ஒன்றுமில்லை. என்னிடம் உள்ளதை உங்களுக்கு தருகிறேன். அதை கொண்டு நீங்கள் புத்தியோடு பிழைத்துக் கொள்ளுங்கள்,'' என்று கூறினார்.

முதல் மகனுக்கு ஒரு கோழியையும், இரண்டாம் மகனுக்கு அரிவாளையும், மூன்றாம் மகனுக்கு ஒரு பூனையையும் கொடுத்தார்.


""மகன்களே இந்த பொருட்களை பார்த்து ஏளனமாக நினைக்கவேண்டாம். இந்த பொருட்களில் உங்கள் தந்தையுடைய ஆசீர்வாதம் இருக்கிறது. என் சொல் பேச்சை கேட்டு நடந்தால் உங்களுக்கு நிறைய பொருட்களை இவை சம்பாதித்து தரும்.

""இவற்றை எடுத்து கொண்டு இந்த பொருட்கள் இல்லாத நாடுகளுக்கு சென்று உங்கள் அறிவு திறமையை பயன்படுத்தினால் நிச்சயம் பணக்காரனாவீர்கள்,'' என்று சொல்லிவிட்டு இறந்தார்.

தந்தையை இழந்த பிள்ளைகள் மிகவும் வருந்தினர். இறப்பு சடங்குகள் எல்லாம் செய்து முடித்த பிறகு மூத்த மகன், தந்தை கூறியபடியே கோழியை எடுத்து கொண்டு பெருஞ்செல்வந்தர் ஆவதற்காக வீட்டை விட்டு புறப்பட்டான்.

ஒவ்வொரு நாடாக சென்றான். எல்லா நாட்டிலும் கோழிகள் இருந்தன. எனவே, அவனது கோழியை விலைக்கு வாங்குவோர் ஒருவரும் இல்லை. இப்படியாக பல நாடுகளை சுற்றி திரிந்தான். அவனுக்கு வெறுப்பு உண்டாயிற்று. இருப்பினும் அப்பா சொன்ன சொல்லை நினைத்து மனதை தேற்றிக் கொண்டு சென்றான்.

ஒரு நாள் ஒரு புதிய தீவை அடைந்தான். அந்த தீவில் கோழிகளே இல்லை. சூரியனை கண்டு காலை மாலை நேரத்தை அறிந்து கொள்வர். ஆனால், இரவு நேரத்தை அவர்களால் கணக்கிட முடியாமல் தவித்தனர்.

இதுதான் தன் கோழியை விற்க சரியான இடம் என்பதை அறிந்து, அந்த ஊர் மக்களை அழைத்தான் மூத்தவன்.

""இந்தப் பறவையை பார்த்தீர்களா? எவ்வளவு அழகாக இருக்கிறது. இதன் தலையில் அழகான கொண்டை இருக்கிறது. இந்த பறவை இரவு நேரத்தில் மூன்று முறை கூவும்.

""அப்படியென்றால் முதல் சாமம், இரண்டாம் சாமம், மூன்றாம் சாமம் என்று கணக்கிட வேண்டும். மூன்றாம் சாமம் வந்ததும் விடியப் போகிறது என்றுஅர்த்தம்.

அதே போல் பகலில் கூவும் போது நேரத்தை எப்படி கணக்கிட வேண்டும் என்பதை சொன்னான். அதை கேட்ட அந்த தீவு மக்கள் மிக்க மகிழ்ச்சியடைந்தனர். அன்று இரவு கோழி கூவுவதை கேட்க ஆவலுடன் காத்திருந்தனர்.

அன்று இரவு கோழி மூன்று முறை கூவியது. அதை கேட்ட மக்கள் வியப்படைந்தனர். ""ஐயா இந்த பறவையை எங்களுக்கு விலைக்கு கொடுங்கள்,'' என்று கெஞ்சினர் அவ்வூர் மக்கள்.

""ஒரு மூட்டை பொன் நாணயம் கொடுத்தால் நிச்சயமாக அந்த பறவையை தருவேன்,'' என்றான்.

"இத்தனை சிறந்த பறவைக்கு இவ்வளவு சிறிய அளவு பொன் கேட்கிறானே...' என்று நினைத்த மக்கள் உடனே அவன் கேட்ட அளவு பொன்னை கொடுத்து அந்த கோழியை வாங்கி கொண்டனர். பொன்னை எடுத்து கொண்டு ஊர் திரும்பினான் மூத்தவன்.

அண்ணன் கொண்டு வந்த பொற்காசுகளை கண்டு வியப்படைந்தனர் தம்பிகள் இருவரும். உடனே இரண்டாவது மகன் தன் அரிவாளை எடுத்து கொண்டு புறப்பட்டான்.

அவன் புறப்பட்டு சென்று பல நாட்கள் வரையில் அந்த அரிவாளால் எந்த நன்மையும் ஏற்படவில்லை. பல இடங்களில் சுற்றினான். கடைசியாக ஒரு நாட்டிற்கு வந்தான். அந்த நாட்டிலிருந்தவர்கள் அரிவாளை பார்த்ததேயில்லை. அந்நாட்டு மக்கள் வயல்களில் தானியம்விளைந்தால், அவற்றை கையால் கசக்கியோ அல்லது கதிர்களை கிள்ளியோ எடுத்துச் செல்வர்.

இதனால் தானியங்கள் பலவகையிலும் கீழே சிந்தி வீணாவதை குறித்து வருந்தினர். அத்துடன் ரொம்ப நேரம் கஷ்டப்பட வேண்டியிருப்பதை உணர்ந்தனர். இந்த நிலையை பார்த்த இரண்டாவது மகன் அந்நாட்டு மக்களுக்கு தன்னுடைய அரிவாளின் பயனை எடுத்து கூறினான்.

பிறகு அரிவாளை கொண்டு கதிர்களை அறுத்துகட்டிகொடுத்தான். அதனால் கதிர்கள் வீணாகாமல் இருப்பதை கண்ட மக்கள் ஆச்சரியமடைந்தனர். ""என்ன விலை வேண்டுமானாலும் சொல் தருகிறோம். அந்த அரிவாளை எங்களுக்கு கொடுத்துவிடு,'' என்றனர்.

இரண்டு மூட்டை நிறைய தங்க நாணயங்கள் கேட்டான் இரண்டாமவன். அப்படியே கொடுத்துவிட்டு அந்த அரிவாளை வாங்கி சென்றனர். மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான் இளையவன்.

அண்ணன்கள் இருவரும் நிறைய பணம் சம்பாதித்து வந்ததை கண்ட தம்பி மகிழ்ச்சியடைந்தான். தானும் அவ்வாறே செல்வதாக கூறி தன்னுடைய பூனையுடன் புறப்பட்டான்.

பூனையுடன் பல நாடுகள் சுற்றிப் பார்த்தான். எல்லா நாடுகளிலும் பூனைகள் இருந்தன. இதனால் சில மாதங்கள் மிகவும் கஷ்டப்பட்டான். ஒரு நாள் ஒரு நாட்டிற்குள் நுழைந்தான். அந்த நாட்டில் பூனைகளே இல்லை. ஆனால், எக்கச்சக்கமான எலிகள் இருந்தன.

அவை மக்களுக்கு கொடுத்து வந்த துன்பங்கள் ஏராளம். இதனால் அந்த ஊர் மக்கள் நிம்மதியை இழந்தனர். அந்த ஊர் ராஜா எலிகளின் தொல்லையை எப்படி நீக்குவது என்று தெரியாமல் தவித்தான். அச்சமயத்தில் அங்குள்ள ஒரு வீட்டில் தங்கினான் சிறியவன்.

அந்த வீட்டிலிருந்த எலிகளை எல்லாம் வேட்டையாடியது பூனை. இரண்டு நாட்களில் அந்த வீட்டில் எலிகளே இல்லை. இதை கண்ட நகரத்து மக்கள் மகிழ்ந்து போய் அரசனிடம் இந்த விஷயத்தை கூறினர். உடனே அரசன் இந்த புதுமையான விலங்கை விலைக்கு வாங்கினால் நாட்டிற்கு நன்மை ஏற்படும் என நினைத்தான்.

பூனைக்காரனை அழைத்து, ""உனக்கு எவ்வளவு பொருள் வேண்டும்?'' என்று கேட்டான்.

பத்து மூட்டை பொன்னும், பத்து மூட்டை வெள்ளியும் கொடுத்தால் இந்த விலங்கை தருவேன் என்றான். அப்படியே கொடுத்து பூனையை வாங்கி கொண்டான் அரசன். தான் சம்பாதித்த பொருட்களோடு ஊர் போய் சேர்ந்தான்.

தங்களை விட தங்கள் தம்பி பல மடங்கு மிகுதியாக பொருள்கள் கொண்டு வந்ததை கண்டு மகிழ்ந்தனர் அண்ணன்கள். சகோதரர்கள் மூவரும் தங்களுக்கு வேண்டிய வீடு, நிலம் முதலியவற்றை வாங்கி கொண்டு சுகமாக வாழ்ந்தனர்.

நீதி: குட்டீஸ்... பெற்றோர் சொல் கேட்டு நடந்ததால் பிள்ளைகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை பார்த்தீர்களா?

நீங்களும் உங்கள் பெற்றோர் பேச்சை கேட்டு நடங்கள். நிச்சயம் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

Thursday, July 21, 2005

கதை எண் 18 - தேவ மைந்தன்

Image hosted by Photobucket.com

அது ஓர் குதிரை லாயம். நாலைந்து அழகிய குதிரைகளுடன் ஒரு கழுதைக் குட்டியும் அங்கே இருந்தது. குதிரைகளை நல்ல முறையில் பராமரித்து வந்த எஜமான், கழுதைக் குட்டியைக் கவனிப்பதே இல்லை. அதற்குத் தீனி போடுவதும் இல்லை. குதிரைகள் தின்று கழித்துப் போடுவதைத் தின்றே கழுதைக் குட்டி பசியாற்றிக் கொள்ளும்.

குதிரைகள் மினுமினுப்பான தேகத்துடன், அழகிய பிடரி மயிருடன் மிக நேர்த்தியாகவே இருந்தன. அவை கழுதைக் குட்டியைப் பரிகாசம் செய்து கேவலமாகப் பேசும். சமயத்தில் உதைத்துத் தள்ளியும் கடித்தும் துன்புறுத்தி வந்தன. அதனால் கழுதைக்குட்டிக்குச் சொல்ல முடியாத மனத்துயரம். மௌனமாகக் கண்ணீர் வடித்துக்கொள்வதைத் தவிர, அதனால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

''கடவுளே, அடுத்த பிறவியிலாவது என்னை குதிரையாகப் படைத்துவிடு. கழுதைக் குட்டி யாகப் படைத்துவிடாதே...'' என்று மனதுக்குள் குமுறிக்கொண்டது. பெரிய நீளமான காதுகளும் முண்டுமுண்டான சூம்பிய கால்களும் அசிங்கமான வாலும் கழுதைக் குட்டிக்கே தன்மீது வெறுப்பும் கோபமுமாக இருந்தது. அப்போது எஜமானன் வருவதைக் கண்டது. அவருடன் வேறு ஒருவரும் வந்தார்.

வந்தவர், ''ஐயா! என் பெயர் ஜோசப். நானும் என் மனைவி மரியாவும் பெத்தலஹேமுக்குச் செல்கிறோம். மனைவி நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கிறாள். இந்த இருள் சூழ்ந்த வேளையில், அவளால் ஒரு அடிகூட நடக்க முடியாமல் களைத்துப் போய்விட்டாள். உங்களால் ஒரு குதிரையைக் கொடுத்து உதவ முடியுமா? உங்களுக்குக் கோடி புண்ணியம் கிடைக்கும்...'' என்று கெஞ்சாத குறையாக அவரிடம் கேட்டார்.

எஜமானன் தீவிர சிந்தனையுடன் தாடியைத் தடவிக்கொண்டே, தனது அழகிய மினுமினுப் பான கொழுத்த குதிரைகளைப் பார்வையிட்டான். 'இந்தக் குதிரைகள் மிகவும் விலை உயர்ந்தவை. நான் ஒருபோதும் இவற்றில் ஒன்றையேனும் இழக்கத் தயாரில்லை. இந்தக் கழுதைக்குட்டியால் எனக்கு எந்தவிதப் பயனும் இல்லை. தண்டமாகத் தின்றுவிட்டு, லாயத்தை அசுத்தம் செய்து கொண்டிருக்கிறது. இந்த வழிப்போக்கனிடம் இதைத் தள்ளிவிடலாம்' என்று மனதுக்குள் எண் ணிக்கொண்டான்.

அவன் ஜோசப் பைப் பார்த்து, ''ஐயா! உங்களைப் பார்த்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. மேலும், குதிரைகள் மிகவும் சண்டியானவை. வேகமாக ஓடுபவை. அவை கர்ப்பிணியான உங்கள் மனைவியைப் பாதுகாப்பாகச் சுமந்து செல்லாது. இந்த நோஞ்சான் கழுதைக்குட்டிதான் அதற்கு ஏற்றது. மிகவும் மெதுவாக, சோம்பேறித்தனமாக நடந்து செல்லும். அதை வேண்டுமானால் ஓட்டிப் போங்கள்...'' என்றான்.

கழுதைக்குட்டிக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்த நரக வாழ்க்கையிலிருந்து விடுதலை அடைந்தால் போதாதா! கழுதை பரிவோடு மரியாவைப் பார்த்தது. சாந்தமும் கருணையும் நிறைந்த அந்த முகத்தில் சோர்வும் களைப்பும் நிறைந்திருந்தன. 'ஒரு ஏழைப் பெண்ணுக்கு தன்னாலும் உதவ முடிந்ததே!' என்ற எண்ணம் அதன் உடலில் புத்துணர்வையும் புதுப்பொலி வையும் ஏற்படுத்தின.

குதிரைகள், கழுதைக்குட்டியை ஏளனமாகப் பார்த்துச் சிரித்தன. கழுதைக்குட்டி மிகப் பெருமையுடன் மரியாவைச் சுமந்துகொண்டு சந்தோஷத்துடன் நடக்கத் தொடங்கியது. நீண்ட நடைப்பயணத்துக்குப் பிறகு நடுஜாமம் நெருங்கும் வேளையில், அவர்கள் பெத்தலஹேமுக்கு வந்து சேர்ந்தனர்.

கழுதைக்குட்டிக்குக் களைப்பே தெரியவில்லை... மாறாக, உற்சாகமே மேலிட்டது! சத்திரங்கள் எல்லாம் நிறைந்துவிட்டன. தங்குவதற்கு அவர்களுக்கு இடமே கிடைக்கவில்லை. இறுதியில் ஒரு கொட்டிலில் அடைக்கலமாக அவர்கள் தங்கினார்கள்.

கர்ப்பிணியான மரியா, கழுதைக் குட்டியை அன்புடன் தடவிக் கொடுத்து, அதன் முகத்தில் முத்தமிட்டாள். கழுதைக் குட்டியின் உடலெல்லாம் பரவசம் ஏற்பட்டது. பிறவிப்பயன் அடைந்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. ஜோசப் அதற்குத் தீனியும் தண்ணீரும் வைத்தார். கழுதை மிகவும் மகிழ்ச்சியுடன் தின்றுவிட்டுத் தூங்கிவிட்டது.

சற்று நேரம் கழித்துக் கண்விழித்துப் பார்த்த கழுதைக்குட்டிக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. சூரிய ஒளி போன்ற சின்னஞ்சிறு மலர் ஒன்று மரியாவின் மடியில் தவழ்வதை அது கண்டது. ஆடுகளும் மாடுகளும் சூழ்ந்து நின்று, அவர்களைக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தன.

சிறிய ரோஜா மலர் போலிருந்த பிஞ்சுக் குழந்தை மெதுவாகக் கண்களைத் திறந்து, கழுதைக் குட்டியைப் பார்த்தது. அதைத் தொட முயற்சித்தது. கழுதைக்குட்டி மிகவும் நெருங்கி வந்து, அவர்களை குளிர் தாக்காதவண்ணம் பாதுகாத்தது.

தான் ஒரு குதிரையாகப் பிறவி எடுக்காமல், அவலட்சணமான கழுதைக் குட்டியாகப் பிறந்ததற்கு அது மிகவும் சந்தோஷப்பட்டது. பிறந்திருப்பது உலகை ரட்சிக்க வந்த தேவமைந்தன் என்பதை அது அறியவில்லை. தான் ஓர் அதிர்ஷ்டப் பிறவியாக எண்ணி மகிழ்ந்தது!

Wednesday, July 20, 2005

கதை எண் 17 - புத்திசாலி ஜிட்டு

Image hosted by Photobucket.com

உடல் நலமில்லாத மகன் ஜிட்டுவோடு டாக்டரைப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தாள் ஜானகி. Ôமாட்டுவண்டியில் காட்டு வழியாகப் போக வேண்டியிருக்கிறதேÕ என்று கவலையோடு இருந்தாள்.

காட்டுக்குள் செல்லச்செல்ல இருட்டு அதிகமாயிற்று. காட்டின் நடுவே போய்க் கொண்டிருந்தபோது திடீரென்று வண்டி நின்றுவிட்டது. பயந்தபடியே திரும்பிப் பார்த்தாள் ஜானகி.

மூன்று திருடர்கள் வண்டியை இழுத்துக் கொண்டிருந்தனர்.

ஜானகி கைகூப்பினாள். ÔÔஐயா! நான் என் பையனுக்கு வைத்தியம் பார்க்கிற துக்கு போயிட்டிருக்கேன்... தயவுசெய்து விட்டுடுங்க...ÕÕ

ÔÔஏய்... அதெல்லாம் முடியாது. உன் நகை, பணம் எல்லாம் தந்தாத்தான் விடுவோம். இல்லை, ரெண்டு பேரை யும் கொன்னுடுவோம்ÕÕ என்றார்கள். வேறுவழியில்லாமல் தன் வளையல்கள், சங்கிலி, பணம் எல்லாம் தந்தாள் ஜானகி. திருடர்கள் ஓடி மறைந்தார்கள்.

வண்டி மறுபடி புறப்பட்டது.

பக்கத்துக் கிராமத்தில் போய் மருத்துவரிடம் ஜிட்டுக்கு வைத்தியம் பார்த்தாள் ஜானகி. பணம், நகை கொள்ளை போனது பற்றி கூறினாள்.

மருத்துவரும், ÔÔபரவாயில்லை, இன்னொரு முறை வரும்போது பணம் தந்தால் போதும்ÕÕ என்று கூறி அனுப்பி விட்டார்.

மறுபடியும் வண்டி நடுக்காட்டை கடந்து கொண்டிருக்கும்போது மாடு மிரண்டது. யாரோ வண்டியைப் பிடித்து இழுத்தார்கள். இந்த முறை ஜானகிக்கு தைரியம் வந்துவிட்டது. அவளிடம்தான் பணம் ஏதும் இல்லையே! ÔÔஏய், திருடர்களா! மரியாதையாய் வண்டியைப் போகவிடுங்க!ÕÕ & ஜானகி மிரட்ட...

ÔÔஹா.. ஹா.. ஹா...ÕÕ என்று இடிக்குரலில் ஒரு சிரிப்பு சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால்.. ஒரு பெரிய பூதம் நின்றிருந்தது. சர்வநாடியும் ஒடுங்கிவிட்டது ஜானகிக்கு.

ÔÔநான் ஒன்றும் திருடனில்லைÕÕ & பூதம் கர்ஜனை செய்தது. சட்டென்று ஒரு யோசனை உதித்தது ஜிட்டுவுக்கு. ÔÔநான் நம்பமாட்டேன்... நீதான் மூன்று திருடர்களைப் போல மாறுவேடம் போட்டு வந்து அப்போது கொள்ளையடித்தாய்ÕÕ என்று கத்தினான்.

ÔÔச்சே! அது வேறு யாரோ!ÕÕ & பூதமும் கத்தியது.

ÔÔநான் நம்பமாட்டேன்ÕÕ & மறுபடியும் ஜிட்டு சொல்ல...

தன் தலையில் இரு கைகளையும் பதித்துக்கொண்டு கத்தியது பூதம், ÔÔநானில்லை அது!ÕÕ

ÔÔஅப்படியானால் உனக்கு அரைமணி நேரம் அவகாசம் தருகிறேன், அதற்குள் அவர்களைப் பிடித்துக்கொண்டு வா! அப்புறம் உன்னை நம்புகிறேன்.ÕÕ & கத்தினான் ஜிட்டு. உடனே திரும்பி தன் அம்மாவைப் பார்த்து ஜாடை காட்டினான். சட்டென்று மாட்டை உசுப்பி விரட்டினாள் ஜானகி. வேகவேகமாய் வண்டி ஓடியது. ஊர் விரைவாக நெருங்கிக் கொண்டிருந்தது.

ஊரின் எல்லையருகே மறுபடி Ôதொம்Õ என்று குதித்தது பூதம். அதன் கைகளில் கொள்ளையடித்த பொருட்களுடன் மூன்று திருடர்கள்!

Ôதொம்... தொம்... தொம்...Õ என்று மூன்று பேரையும் பூமியில் வீசியடித்தது. சத்தம் கேட்டு ஊர் ஜனங்கள் எல்லாம் கூடிவிட்டார்கள். ÔÔஐயோ! அம்மா!ÕÕ என்று விழுந்தார்கள் திருடர்கள்.

ÔÔஆகா! நீ திருடனில்லை... ரொம்ப நல்ல பூதம்... தங்கமான பூதம்!ÕÕ என்று கத்தினான் ஜிட்டு. ஊர்மக்களும் ÔÔநல்ல பூதம், தங்கமான பூதம்!ÕÕ என்று கோஷம் போட்டார்கள்.

எல்லோரும் தன்னைப் பாராட்டியதால் சந்தோஷப்பட்ட பூதம், யாரையும் துன்பம் செய்யாமல் காட்டுக்குள் போய் மறைந்தது.

Tuesday, July 19, 2005

கதை எண் 16 - திருந்திய திருடன்

Image hosted by Photobucket.com

முன்னொரு காலத்தில் திருடன் ஒருவன் இருந்தான். தன் மகன் ராசப்பாவையும் திருட்டுத் தொழிலில் வல்லவனாக வளர்த்தான். திருடன் இறக்கும் நேரம் வந்தது.

""மகனே! நீ திருட்டுத் தொழிலில் மேலும் மேலும் வல்லவனாக வேண்டும். நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொள். எங்கேனும் பக்திச் சொற்பொழிவு, இசை நிகழ்ச்சிகள் நடந்தால் அங்கு போகாதே. நீ அங்கே இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் ஏதும் காதில் விழாதபடி உன் காதுகளைப் பஞ்சுகளால் அடைத்துக் கொள். இல்லையெனில் அந்த நல்ல வார்த்தைகள் உன் மனதை மாற்றமடையச் செய்துவிடும்,'' என்றான்.


""அப்படியே செய்கிறேன்,'' என்றான் மகன்.

தந்தையின் அறியுரைப்படியே நடந்து வந்தான் ராசப்பா.

ஒரு முறை திருடிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தான். ஓரிடத்தில் மக்கள் கூட்டமாக இருப்பதைக் கண்டான். என்ன நடக்கிறது என்பதை அறிவதற்காக அருகில் சென்றான்.

அங்கே மகாவீரர், ஒரு மேடையில் அமர்ந்து மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார். தன் தந்தை சொன்னது உடனே நினைவுக்கு வந்தது. தன் இரு கைகளாலும் காதுகளைப் பொத்திக் கொண்டு அங்கிருந்து நடக்கத் தொடங்கினான்.

அப்பொழுது முள் ஒன்று அவன் காலில் தைத்தது. குனிந்த அவன் தன் ஒரு கையால் முள்ளைப் பிடுங்கிவிட்டு மீண்டும் காதைப் பொத்திக் கொண்டான்.

""தேவர்களுக்கு நிழல் விழாது. அவர்கள் கால்கள் நிலத்தில் படியாது,'' என்று மகாவீரர் பேசியது அவன் செவியில் விழுந்தது.

சில நாட்களில் முக்கிய திருட்டு ஒன்றைச் செய்த போது வீரர்களிடம் சிக்கிக் கொண்டான். அவன் செய்த திருட்டை எல்லாம் அறிய வீரர்கள் அவனை அடித்துத் துன்புறுத்தினர். கல்லுளி மங்கனான அவனோ வாய் திறக்கவே இல்லை. அவனிடம் இருந்து உண்மையை அறிய அதிகாரிகள் சூழ்ச்சி செய்தனர்.

மயக்க மருந்து தந்து அவர்கள் அவனை ஓர் அழகான பூஞ்சோலையில் கிடத்தினர். பல அழகான பெண்கள் அவனைச் சூழ்ந்து நின்றனர். மயக்கம் தெளிந்த ராசப்பா தான் இருந்த இனிய சூழலைப் பார்த்து வியப்பு அடைந்தான்.

""நான் எங்கே இருக்கிறேன்?'' என்று அந்தப் பெண்களைக் கேட்டான்.

அவர்களில் ஒருத்தி, ""நீங்கள் இப்பொழுது தேவலோகத்தில் இருக்கிறீர்கள். இங்கே நீங்கள் என்ன நினைத்தாலும் உடனே நிறைவேறும். நீங்கள் எங்களைப் போல மகிழ்ச்சியாக இருக்கலாம். நாங்கள் தேவலோக பெண்கள். இங்கே யாரும் பொய் சொல்லக் கூடாது. பொய் சொன்னால் உடனே இந்த உலகத்தை விட்டுப் போய் விடுவர். நீங்கள் யார்? பூவுலகில் என்னென்ன செய்தீர்கள்? சொல்லுங்கள்,'' என்று இனிமையாகக் கேட்டாள்.

உடனே ராசப்பா அந்தப் பெண்களைப் பார்த்தான். அவர்கள் கால்கள் தரையில் இருப்பதையும், நிழல் விழுவதையும் பார்த்தான்.

மகாவீரர் சொன்னதைக் கேட்டது அவன் நினைவுக்கு வந்தது. "இவர்கள் தேவர்கள் அல்லர்; மனிதப் பெண்கள் தான். என்னை ஏமாற்ற முயற்சி செய்கின்றனர்' என்ற உண்மை அவனுக்குப் புரிந்தது.

"ஆ! மகாவீரர் பேசியதைச் சிறிது நேரம் கேட்டதாலேயே இவர்கள் என்னை ஏமாற்றுவதைக் கண்டுபிடிக்க முடிந்ததே... அவர் பேசுவதை நான் முழுமையாகக் கேட்டிருந்தால் எத்தனை நன்மைகள் உண்டாகி இருக்கும்' என்று நினைத்து உள்ளம் கலங்கினான்.

அவர்களைப் பார்த்து, ""நீங்கள் என்னை ஏமாற்றுகிறீர்கள். இது சொர்க்கம் அல்ல; நீங்களும் தேவர் உலகப் பெண்கள் அல்ல. எனக்கு மட்டும் விடுதலை கிடைத்தால் நான் திருட்டுத் தொழிலையே செய்யமாட்டேன். மகாவீரரின் சீடனாகி அவர் அருளுரைகளை எப்பொழுதும் கேட்டுக் கொண்டு அவர் திருவடிகளில் விழுந்து கிடப்பேன்,'' என்று உணர்ச்சியுடன் சொன்னான்.

இவனது பேச்சு அரசனின் காதுகளில் விழுந்தது. ராசப்பாவை அழைத்து விசாரித்தான் அரசன். நடந்த நிகழ்ச்சிகளை அறிந்த அரசன் அவனை விடுதலை செய்தான். அவனும் திருட்டுத் தொழிலை விட்டு விட்டு மகாவீரரின் சீடர்களில் ஒருவன் ஆனான்.

Monday, July 18, 2005

கதை எண் 15 - யார் சிறந்தவர்

Image hosted by Photobucket.com

பட்டிணபுரி மன்னன் மருதன் தனக்கு ஒரு புதிய அந்தரங்க ஆலோசகரை நியமித்துக் கொள்ள விரும்பினான்.

அது பற்றி அவன் தன் அமைச்சர் கரியப்பாவிடம் ஆலோசிக்க வந்தான்.

""அரசே! நம் நாட்டில் அரசியல், பொருளியல், நீதித்துறை, ஆட்சித்துறை, எனப் பலதுறைகளில் நன்கு படித்தவர்கள் இருக்கின்றனர். இப்பதவிக்கு அறிவிப்பு செய்தால் அவர்களில் பலர் தங்களைக் காண வருவர். அவர்களுக்குத் தேர்வு நடத்தி நன்கு படித்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க நாம் பாஸ்கர பட்டரின் உதவியை நாடலாம்,'' என்றார்.

நாடெங்கிலும் பறை சாற்றுவித்து அந்தரங்க ஆலோசகர் பதவிக்கு தகுதி உடையவர்கள் குறிப்பிட்ட ஒரு நாளில் தேர்வுக்கு வரலாம் என அறிவித்தார்.

குறிப்பிட்ட நாளில் பல இளைஞர்கள் தேர்வுக்கு வந்தனர். அவர்களுக்கு நடந்த தேர்வில் இரு இளைஞர்கள் முன்னதாக வந்தனர். ஆனால், இருவரும் எல்லா விஷயத்திலும் சமமாக இருந்ததால் அவர்களில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்ய அமைச்சரை அணுகினார் மன்னர்.

""இப்பதவிக்கு வெறும் புத்தகப்படிப்பு இருந்தால் மட்டும் போதாது. சிக்கலான பிரச்னைகளைச் சமாளித்து நல்ல முடிவு காணத் திறமை பெற்றவராக இருக்க வேண்டும். அவர்கள் இருவருக்கு மட்டும் பரீட்சை வைத்து அதில் தேர்ந்தவனைப் பதவிக்கு நியமியுங்கள்,'' என்றார்.

மறுநாள் அமைச்சர் இருவரையும் அழைத்து, ""இன்று காலை என் நண்பரின் உடல் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. அவரது நிலை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்,'' எனக் கூறி விவரிக்கலானார்.

""என் நண்பர் இன்று காலை என்னிடம் கூறியதை அப்படியே கூறுகிறேன். என் நண்பர் வயதானவர்; இதய நோயாளி. ஒரு நாள் இரவு அவர் பயங்கரமான கனவு ஒன்றைக் கண்டார். அந்தக் கனவில் அவர் ஒரு அடர்ந்த காட்டிற்குள் வழி தவறிப் போய் விட்டார். அவர் ஒரு இடத்தில் நான்கு பாதைகள் சேர்வதைக் கண்டார்.

""மங்கிய இரவில் நட்சத்திர ஒளியில் அவர் அவற்றில் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து நடந்து சென்றார். அங்கு சில சிங்கங்கள் திரிந்து கொண்டிருந்தன. அவற்றில் ஒன்று அவரை நோக்கிப் பாய்ந்து வந்தது.

""நண்பர் பயந்து வந்தவழியே ஓடி மறுபடியும் நான்கு பாதைகள் சேரும் இடத்தை அடைந்தார். இரண்டாவது பாதையில் பயமில்லாது நடந்து சென்றார். கொஞ்ச துõரத்தில் ஏதோ வெளிச்சம் இருந்தது கண்டு அங்கு சென்றார்.

""அங்கு பல பாம்புப் புற்றுகள் இருப்பதையும் அவற்றின் மேல் பல பாம்புகள் படமெடுத்து ஆடுவதையும் கண்டார். அவற்றில் ஒன்று ஐந்து தலைநாகம். அவரைக் கண்ட ஐந்து தலைப்பாம்பு சீறவே அவர் பயந்து வந்த
வழியே திரும்பி ஓடி மீண்டும் நான்கு பாதைகள் சேரும் இடத்தை அடைந்தார்.

""பிறகு அவர் மூன்றாவது பாதையில் நடந்து செல்லலானார். கொஞ்ச துõரம் சென்றதும் அது ஒரு மலை அடிவாரத்தில் போய் முடிந்தது. அங்கு பல மனித எலும்பு கூடுகள் இருப்பதைக் கண்டு மலைத்து நின்றார். அப்போது அந்த மலையில் ஒரு குகையிலிருந்து பயங்கர ராட்சஸன் ஒருவன் உறுமிக் கொண்டிருப்பதை கண்ட என் நண்பர் பயந்து வந்த வழியே திரும்பி ஓடி மறுபடியும் நான்கு பாதைகள் கூடும் இடத்தை அடைந்தார்.

""இம்முறை அவர் நான்காவது பாதையில் சென்றார். அவர் கொஞ்ச துõரம் சென்றதும் தன் பின்னால் ராட்சஸன் வருவது கண்டு பயந்து வேகமாக ஓடினார். அவர் ஒரு பாறையின் விளிம்பை அடைந்து விட்டார். அங்கிருந்து போக வழியில்லை. பாறையின் கீழ்வெகு ஆழத்தில் தான் நிலப்பரப்பு தெரிந்தது. அவர் ராட்சஸனுக்கு பயந்து நின்ற போது கால்கள் நடுங்க பாறையிலிருந்து தவறி கீழே படுபாதாளப் பள்ளத்தில் விழுந்து விட்டார்.

அமைச்சர் தம் நண்பர் கண்ட இந்தக் கனவைக் கூறி, ""பார்த்தீர்களா எவ்வளவு பயங்கரமான கனவு என்று! இதய நோயாளியான என் நண்பர் இந்தக் கனவைக் கண்டு முடித்ததும் கண் விழித்தார். மறுவினாடியே அவரது இதயத்துடிப்பு நின்றது. அவர் இறந்து போய்விட்டார்,'' என்றார்.

அப்போது இருவரில் ஒருவர் பயந்து போய் மெதுவாய்த் தாழ்ந்த குரலில், ""கனவில் காணும் காட்சிகள் கூட மனிதனின் உடல் நலனை பாதிக்கின்றன. தங்களது நண்பர் நான்கு முறைகளில் பயந்து ஓடி இருக்கிறார். அந்தப் பயம் அவரைப் பெரிதும் பாதித்திருக்கிறது. கண் விழித்ததும் இதய நோயாளியான அவர் பயத்தால் இதயம் தாக்கப்பட்டு உயிரை இழந்திருக்க வேண்டும். உங்களது நண்பரின் பிரிவால் உங்களுக்குப் பெரும் துயரமே ஏற்பட்டுள்ளது,'' என்றான்.

அதைக் கேட்ட பின் அமைச்சர் மற்றவரை பார்க்கவே அவர் சிரித்தவாறே, ""ஆகா! என்ன அருமையான கட்டுக்கதை,'' என்றான்.

அமைச்சரும், ""கட்டுக்கதையா? ஏன் அப்படிக் கூறுகிறாய்?'' என்று சற்று கோபப்பட்டவர் போலக் கேட்டார்.

""தங்கள் நண்பர் இந்த பயங்கரக் கனவைக் கண்டதும் உடனே கண் விழித்தார் என்றும் மறுவினாடியே அவரது இதயத்துடிப்பு நிற்கவே அவர் இறந்துவிட்டார் என்று கூறினீர்கள். நீங்களோ உங்கள் நண்பரே இந்தக் கனவை உங்களிடம் கூறியதாகச் சொன்னீர்கள் அது எப்படி முடியும்? அவர் தான் கனவைக் கண்டு கண் விழித்ததும் இறந்து போய்விட்டாரே. அதனால் அவர் எப்படி இந்தக் கனவைத் தாமே உங்களிடம் சொல்லி இருக்க முடியும். முடியவே முடியாது. அதனால்தான் இது கட்டுக்கதை என்றேன்,'' என்றான்.

அமைச்சர் இரண்டாவது நபரை பாராட்டி அவனையேமன்னனின் அந்தரங்க ஆலோசகனாகத் தேர்ந்தெடுத்தார்.

Thursday, July 14, 2005

கதை எண் 14 - மேதைகள்

Image hosted by Photobucket.com

முன்னொரு சமயம் விஷ்லர் என்ற ஓர் ஓவிய நிபுணர் இருந்தார். அவர் ஓவிய நிபுணர் மட்டுமல்ல. தலை சிறந்த மேதையும் கூட. அவர் வசித்து வந்த ஊரில் மற்றொரு ஓவியர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் ரோசெட்டி என்பதாகும்.

ஒரு நாள் விஷ்லர், ரோசெட்டியின் வீட்டுக்குச் சென்று இருந்தார். ரோசெட்டி அவரிடம் அப்போது தான் வரைந்து கொண்டிருந்த ஓர் ஓவியத்தை எடுத்து வந்து காட்டினார். அது பற்றி விஷ்லரின் அபிப்ராயத்தை அவர் கேட்டார். விஷ்லர் அந்த ஓவியத்தைப் பார்த்தார்.

உண்மையிலேயே அந்த ஓவியம் மிக அற்புதமாக இருந்தது. ஆகவே, அவர் ரோசெட்டியை மனம் திறந்து பாராட்டினார். உண்மையில் அப்போது ரோசெட்டி அந்த ஓவியத்தை முழுதாக முடிக்கவில்லை.

வண்ணம் தீட்ட வேண்டிய இடங்கள் நிறைய இருந்தன. ஆகவே அவர், ""இந்தந்தப் பகுதிகளில் வண்ணம் தீட்டியிருந்தால் இன்னும் அற்புதமாக இருக்குமே...'' என்று தன் அபிப்ராயத்தைத் தெரிவித்தார்.




""இன்னும் சில நாட்களிலே அந்தப் பணியும் முடிந்து விடும். நீங்கள் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் கழித்து இங்கு வந்திருந்தால் முழுமை பெற்ற படத்தைப் பார்த்திருப்பீர்கள்...'' என்று ரோசெட்டி பதில் கூறினார்.

ஒரு வாரம் ஆயிற்று. தற்செயலாக அவரைக் கடை வீதியில் சந்தித்தார் விஷ்லர்.

""என்ன மிஸ்டர் ரோசெட்டி, உங்களுடைய படம் எந்த அளவில் இருக்கிறது?'' என்று அவர் கேட்டு வைத்தார்.

""அந்தப் படம் நிறைவு பெற்றுவிட்டது. இப்போது அந்தப் படத்துக்குச் சட்டமிடுவதற்காக ஒரு சட்டத்தைச் செய்யச் சொல்லி இருக்கிறேன். அதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். அதுவும் வந்து, சட்டமும் இட்டுவிட்டால் அந்தப் படம் பூரண நிறைவு பெற்றுவிட்டது என்று பொருள்,'' என்று கூறினார்.

இரண்டொரு வாரங்கள் கழிந்தன. தற்செயலாக விஷ்லர், ரோசெட்டி வீட்டுக்குச் சென்றார். பேச்சுக்கிடையே, ""சட்டம் வந்து சேர்ந்து விட்டதா? நீங்கள் பூரண நிறைவு பெறும்படி ஓவியத்தைச் செய்து விட்டீர்களா?'' என்று கேட்டார்.

""ஓ முடித்து விட்டேன்! வாருங்கள் காட்டுகிறேன்,'' என்று ரோசெட்டி அவரை அழைத்துச் சென்று சட்டமிடப்பட்ட தன் ஓவியத்தைக் காண்பித்தார்.

அந்த ஓவியத்தைச் சுற்றி மிக அழகான சட்டம் ஒன்று இடப்பட்டிருந்தது.

""ஆஹா! சட்டமும் அற்புதம்!'' என்று பாராட்டினார் விஷ்லர்.

""அதன் பிறகு என்ன செய்தீர்கள், புதிய ஓவியம் ஏதாவது வரைந்தீர்களா?'' என்று கேட்டார் விஷ்லர்.

""இல்லை. அதற்கான அவகாசம் எனக்கு இல்லை!'' என்றார் ரோசெட்டி.

விஷ்லர் ஆச்சர்யம் அடைந்தார்.

""ஓவியம் வரைவது உங்கள் வேலை. ஆனால், ஓவியம் வரையவில்லை. இந்த ஓவியமும் முடித்துவிட்டீர்கள். அப்படி இருக்க அவகாசம் இல்லை என்று கூறுகின்றீர்களே! இது என்ன அதிசயம்!'' என்று கூறினார்.

""மிஸ்டர் விஷ்லர் நான் ஓவியம் வரையத்தான் அவகாசம் இல்லை என்றேன். அதற்காக நான் ஓய்வெடுக்கவில்லை!'' நான் வரைந்த ஓவியத்தைப் பற்றி அழகான கவிதை ஒன்றை எழுதினேன். கவிதை எழுதவே இத்தனை நாட்களாயிற்று!'' என்று கூறினார்.

""கவிதையா?'' என்று ஆச்சர்யமடைந்த விஷ்லர் ""எங்கே காட்டுங்கள்?'' என்றார். அவர் மிகப் பெரிய மேதையல்லவா?

ரோசெட்டி கவிதையை எடுத்து வந்து தனக்கே உரித்தான கம்பீரமான குரலில் ஏற்ற இறக்கங்களுடன் சரியான பாவனையுடன் அதைப் படித்துக் காட்டி விட்டு விஷ்லரிடம் தந்தார்.

விஷ்லர் கவனமாக அதைக் கேட்டார். பின் தானே ஒருமுறை படித்துப் பார்த்தார்.

""உங்களுடைய ஓவியத்தை விட இந்தக் கவிதை அபாரம்; அற்புதம். நல்ல கற்பனை! நீங்கள் அந்த ஓவியத்தைச் சட்டத்திலிருந்து எடுத்து விட்டு இந்தக் கவிதைக்குப் போடுங்கள் அந்தச் சட்டத்தை!'' என்று கூறினார்.

குழந்தைகளா! மற்றவர்களின் திறமையை நாம் பாராட்ட வேண்டும், அந்த மனநிலை நம்மிடம் இருந்தால் நாம் மாமேதையாக திகழலாம்.

Wednesday, July 13, 2005

கதை எண் 13 - ராஜா நல்ல ராஜா!

Image hosted by Photobucket.com
நாட்டரசன்புரம் என்ற நாட்டை மார்த்தாண்டன் என்ற மன்னன் ஆண்டார். அவர் தனது நாட்டில் பல சிரமங்களுக்கிடையில் மிகப் பெரிய பூந்தோட்டம் ஒன்றை அமைத்தார். அதில் எல்லாவகையான பூச்செடிகளையும் வளர்த்தார்.

பல நிறத்தில் பூமரங்களையும் அமைத்தார். பூமரங்களை ஒட்டி நல்ல காய், கனிகளைத் தரும் மரங்களையும் அமைத்தார். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என்ற புற்களையும், புல்லின் நடுவே தரையில் படரும் சிறிய பூச்செடி வகையும் வளர்த்தார்.

மரங்களிலும் புதர்களிலும் உயர்ந்த சாதிப் பறவைகளையும், முயல், அணில் போன்றவைகளையும் வளர்த்தார். வைரத்தை தங்கத்தில் பதித்தது போல பொன்னிற புள்ளி மான்கள் அந்தத் தோட்டத்தில் அங்குமிங்கும் துள்ளியோடின.


அந்தத் தோட்டத்தைக் கண்டால் மனம் அமைதியடையும். கவலைகள் மறந்து போகும். அப்படி ஒரு அற்புதமாக அந்த தோட்டம் அமைந்து இருந்தது. அந்தத் தோட்டத்தைக் காணவும், ரசிக்கவும் பல தேசத்து ராஜாக்களும் சிற்றரசர்களும் வருவர்.

அவர்களை மன்னர் வரவேற்று உபசரிப்பார். அவர்கள் தோட்டத்தைச் சென்று காண்பர்; பிரமிப்பர். இத்தனை பெரிய இடத்தை வளைத்து இத்தனை எழிலான ஒரு தோட்டத்தை அமைக்க முடியுமா? என்று வியப்பர். எனினும் அந்தத் தோட்டத்தைச் சுற்றி பார்த்துக் கொண்டே வரும் போது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரும்போது முகம் சுளிப்பர்.

ஏனென்றால் அந்த இடத்தில் ஒரு பிரிந்தும் பிரியாததுமாக கிழிந்த காய்ந்த, ஓலைகளுடன் கூடிய ஒரு சிறு குடிசை இருந்தது. அந்தக் குடிசையின் சுற்றுச் சுவர்கள் வெறும் களிமண்ணால் பிசைந்து கட்டப்பட்டு இருந்தது. அந்த ஓலைக் குடிசையை சுற்றி துவைக்கும் கல்லும், முக்கூட்டுக் கற்களால் அடுக்கப்பட்ட ஒரு சிறு அடுப்பும், ஏழெட்டு நைந்து போன துணிமணிகளும், அலுமினியக் குவளைகளும் கிடக்கும். குடிசையை சுற்றி நாகவாளி செடி நிறைந்து இருக்கும்.

இத்தனை அற்புதமான ஒரு தோட்டத்தின் நடுவே இத்தனை கோரமான பஞ்சக்குடிசை ஒன்று ஏன் உள்ளது என்ற யாருக்குமே புரியவில்லை. எனினும் அந்தக் காரணத்தை பேரரசரிடம் கேட்கும் தைரியமோ அல்லது அந்தக் குடிசை இருப்பது தோட்டத்தின் எழிலைக் கெடுப்பதாக உள்ளது என்று கூறவோ யாருக்கும் துணிவே வரவில்லை.

நாட்கள் சென்றன. மகிபாலன் என்றொரு சிற்றரசன் அந்த தோட்டத்தைக் காண வந்தான். வழக்கம் போல மன்னருடன் சேர்ந்து தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தபடி அரசனைப் பலவிதமாகப் புகழ்ந்தபடி வந்தான்.

திடீரென அவன் கண்கள் குடிசையைக் கண்டது. உடனே முகம் வாடினான். அத்தனை எழிலான தோட்டத்தில் இப்படி ஒரு ஏழ்மை தோற்றமுடன் கூடிய குடிசை ஒன்று இருப்பதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று நினைத்தான்.

உடனே அரசரிடம், ""மன்னா இந்த எழிலான தோட்டத்தில் இப்படியொரு எளிய குடிசை இருப்பதன் காரணம் என்ன?'' என்று கேட்டான்.

உடனே மன்னன், ""மகிபாலா! இந்த குடிசை உன்னைப் போன்ற ஒரு தைரியசாலியின் குடிசை. நான் எட்டு ஆண்டுகளுக்கு முன் இந்தத் தோட்டத்தை உருவாக்க முயன்றபோது ஒரு பெரிய பரப்பளவுடன் கூடிய இடம் எனக்கு மிகவும் அவசியமாகியது. நாடு முழுக்க அமைச்சர் அந்த மாதிரி ஒரு இடத்தைத் தேடிய போது இந்த இடம் அகப்பட்டது. ஆனால், பெரிய இடத்திற்கு நடுவே இந்த குடிசையும் இருந்தது.

""இதில் இருந்த ஏழைக் கிழவியிடம், நீ இந்தக் குடிசையை காலி செய்ய வேண்டும். இங்கு மன்னர் மிகப் பெரிய பூந்தோட்டம் அமைக்க இருக்கிறார்,'' என்று கூறியபோது கிழவி மறுத்திருக்கிறாள்.

விபரமறிந்த நான் நேரில் வந்து, ""இடத்தை காலி செய்,'' என்று கூறினேன்.

ஆனால் அந்த பெண்ணோ, ""மன்னா! இது என்பாட்டன் பூட்டன் காலத்து குடிசை. இதைத் தாங்கள் அழிப்பதை நான் விரும்பவில்லை. என் உயிரே போனாலும் இதனை இடிக்கவோ, ஓலைகளைப் பிரித்தெறியவோ நான் மனதார ஒப்புக் கொள்ள மாட்டேன். படைபலம் நிறைந்த நீங்கள் நினைத்தால் என்னை ஒரே நிமிடத்தில் கொன்றுவிடலாம்.

""நான் இறந்த பின்பு இந்த இடத்தை நீங்கள் இடித்து, சிதைத்து உமது தோட்டத்தை உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால், நான் இறந்தாலும் எனது பூர்வீகக் குடிசையை அழித்து என் மனதில் வேதனையை ஏற்படுத்தியதற்காக தங்களுக்கு இறைவன் நிச்சயம் தண்டனையைத் தந்தே தீருவார்,'' என்று கூறி அழுதார்.

""அவள் கண்ணீரில் இருந்த நியாயமும் பூர்வீக நினைவுச் சின்னத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் மனோ தைரியத்தால் என்னை எதிர்த்து அவள் பேசிய வீரமும் என் மனதை நெகிழ வைத்தது. அவள் மன உணர்வை மதித்து, நான் இந்தக் குடிசையை அகற்றாமல் இந்தத் தோட்டம் உருவாக்கிய நான்கு, ஐந்து ஆண்டுகளில் அந்தக் கிழவி இறந்துவிட்டாள்.

""அவளுக்குப் பின் இந்தக் குடிசையை ஆள யாரும் சந்ததிகள் இல்லை. என்றாலும் அந்தக் கிழவியின் உணர்வுக்கும், வீரத்திற்கும் ஒரு மதிப்பு தர எண்ணி இந்தக் குடிசையை அகற்றவில்லை,'' என்றார்.

பேரரசரின் பெருந்தன்மையையும், நல்ல பண்பையும் மகிபாலன் வியந்து பாராட்டினான்.

குழந்தைகளா!... மனிதர்களாகிய நாம் மற்றவர்களின் மன உணர்வுகளை மதிக்க வேண்டும். யாரையும் மனம் நோகச் செய்தல் தவறு. மன்னரின்பெருந்தன்மையானகுணத்தை நீங்களும் கடைபிடிக்க வேண்டும்.செய்வீர்களா?

Tuesday, July 12, 2005

கதை எண் 12 - குயில் டாக்டர்!

குயில் டாக்டர்!
Image hosted by Photobucket.com
கற்பூரவள்ளி என்ற காட்டில் ஆந்தை குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஆந்தைக்கு இரண்டு ஆந்தை குஞ்சுகள் இருந்தன. தன் குஞ்சுகளை பேணி பராமரித்து வளர்த்தது தாய் ஆந்தை. குஞ்சுகள் வளர வளர அம்மாவிடம் பல கேள்விகள் கேட்க ஆரம்பித்தன.

ஒரு நாள், ""அம்மா எல்லாரும் பகலில்தான் சுறுசுறுப்பாக உலாவிக் கொண்டிருக்கின்றனர். நாம் மட்டும் பகலில் துõங்கிவிட்டு இரவில் இரை தேடுகிறோம். நாம் சென்று இரை தேடும் வேளையில் ஊரே உறங்கி கொண்டிருக்கிறது. இது ஏன்?'' என்றது.

""நமக்கு பகலில் கண் தெரியாது. இரவில்தான் கண் தெரியும். அத னால் தான் நாம் பகலெல்லாம் துõங்கிவிட்டு இரவில் சென்று இரை தேடுகிறோம்,'' என்றது தாய் ஆந்தை.


""ஏனம்மா கடவுள் நம்மை மட்டும் இப்படி படைத்துவிட்டார்?'' என்று கேட்டது இன்னொரு ஆந்தை குஞ்சு.

""கடவுள் நம்மையெல்லாம் ஒரே மாதிரிதான் படைத்தார். முன்னொரு காலத்தில் நம்முடைய முன்னோர்களில் ஒருவர் செய்த தவறைத்தான் நாம் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்,'' என்றது தாய் ஆந்தை.

""அப்படி என்ன தவறு செய்தார்?'' என்று கேட்டன குஞ்சுகள்.

""ஒரு முறை நம் முன்னோர் ஒருவர் காகம் ஒன்றிடம் மிகவும் நட்பாக இருந்தார். ஒரு நாள் அந்த காகத்திற்கு உடல்நிலை மிகவும் சரியில்லை. எனவே, அதை அழைத்து கொண்டு காட்டில் டாக்டராக இருந்த குயில் டாக்டரிடம் சென்றனர்.

""குயில் டாக்டரோ நன்றாக வைத்தியம் பார்த்து காக்காவை குணமாக்கிவிட்டது. அதன் பிறகு டாக்டருக்கு பீஸ் கொடுக்கணும் இல்லையா? ஆனால், இவர்கள் இருவரும் கொடுக்கவில்லை. எனவே, குயில் டாக்டர் எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுங்கள் என்று கேட்டது.

""இவர்கள் இருவரும் எங்களிடம் பணம் இல்லை என்று சொல்லிவிட்டு ஓடி வந்துவிட்டனர். அதன் பிறகு இவர்கள் இருவரையும் பார்க்கும் பொழுதெல்லாம் பணம் கேட்க ஆரம்பித்தது குயில் டாக்டர். ஏதுடா தொல்லையாப்போச்சு என்று நினைத்த நம்முடைய பாட்டனாரான ஆந்தையார், பகலில் தலைகாட்டுவதே இல்லை. இரவில் மட்டுமே வெளியே வருவதும் இரையை பிடித்து தின்பதுமாக இருந்திருக்கிறார்.

""பகல் முழுவதும் மரப் பொந்துகளில் படுத்து நன்கு துõங்குவது... இரவில் எழுந்து வெளியே செல்வது... இப்படியே இருந்ததால் ஆந்தையாரை கண்டுபிடிக்க முடியவில்லை குயில் டாக்டரால். அதனால் ஆத்திரமடைந்த குயில் டாக்டர், காக்காவை பிடித்து நன்கு திட்டியிருக்கிறது.

""அந்த திருட்டு காக்கா கடுமையாக வேலை செய்தாவது டாக்டர் பீசை கொடுத்திருக்க வேண்டியதுதானே... அப்படி கொடுக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட குயில் டாக்டர், இனிமேல் எங்கள் இனத்தார் இடும் முட்டைகளை எல்லாம் உன் இனத்தார் தான் காவல்காக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டது.

""அன்றிலிருந்து குயில் இனத்தார் அனைவரும் காக்கையின் கூட்டில் தங்கள் முட்டைகளை இட்டுவிட்டு சென்று விடுவர். அது குயிலின் முட்டை என்பது தெரியாமலே காக்கை இனம் வளர்த்து கொண்டு வருகிறது.

""நம்முடைய இனத்தார் பகலில் தூங்கி தூங்கியே நமக்கு பகலில் கண் தெரியாமல் போய்விட்டது. இதுதான் கதை,'' என்றது தாய் ஆந்தை.

""அம்மா பிறரை ஏமாற்றுவதால் ஏற்படும் கஷ்டம் காலம் காலமாக பலரை பாதிப்பதை புரிந்து கொண்டோம். இனிமேல் நாங்கள் ஒருகாலும் இப்படிப்பட்ட காரியத்தை செய்யவே மாட்டோம்,'' என்றனர்.

செல்லமாக தன் குஞ்சுகளை அணைத்து முத்தமிட்டது தாய் ஆந்தை.

Monday, July 11, 2005

கதை எண் 11 - ஆட்டைக் காணோம்!

Image hosted by Photobucket.com
முன்னொரு காலத்தில் கோணங்கி பட்டினம் என்ற ஊரில் மந்தை மேய்ப்பன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனிடம் நிறைய ஆடுகள் இருந்தன. அவற்றை அவனால் காவல்காக்க முடியவில்லை. தினமும் ஒவ்வொரு ஆட்டை ஓநாய்கள் கவர்ந்து சென்றன.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வேட்டை நாய் இரண்டை வாங்கி காவலுக்கு வைத்தான். அவற்றிற்கு தினமும் மாமிச உணவு கொடுக்க வேண்டுமே... இதற்காக தினமும் இரண்டு எலிகளை அடித்து உணவாக கொடுத்தான்.

அப்படி இருந்தும் தினமும் ஒரு ஆடு காணாமல் போனது. இதனால் மேய்ப்பனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேட்டை நாய்கள் மீது கோபம் கோபமாக வந்தது..


ஒரு நாள் என்ன நடக்கிறது என்பதை மறைந்திருந்து கவனித்தான். அப்பொழுது ஓநாய் ஒன்று வந்து ஆட்டை கொன்று இழுத்து சென்றது. அது சாப்பிட்டுவிட்டு போடும் மீதி ஆட்டை இந்த வேட்டை நாய்கள் இன்பமாக தின்றன. இப்படி நடப்பதை கண்ட அவன் திடுக்கிட்டான். மிகவும் சோகமாக உட்கார்ந்தான்.

அப்பொழுது அந்த வழியாக முனிவர் ஒருவர் வந்தார். அவரிடம் தன் கஷ்டத்தை சொல்லி அழுதான் மந்தை மேய்ப்பவன்.

அதற்கு முனிவர், ""மகனே யாருக்கும் வயிறார உணவு கொடுத்தால் தான் வேலை செய்வர். நீயோ இரண்டு எலிகளை மாத்திரம் நாய்களுக்கு உணவாக கொடுக்கிறாய். இது அவைகளுக்கு பத்தாது.

""நீ அவ்வப்போது உன் வீட்டிற்காக ஆட்டை வெட்டுகிறாய் அல்லவா? அந்த மாமிசத்திலிருந்து சிறு துண்டுகளையாவது எடுத்து இந்த நாய்களுக்கு கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் அவைகள் உனக்காக நன்கு வேலை செய்யும்,'' என்றார்.

அதன்படியே செய்வதாக ஒப்பு கொண்டான் மேய்ப்பன். அப்படியே செய்து வந்தான். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அன்றிலிருந்து மந்தையில் ஆடுகள் குறையவில்லை.

மறுநாள் ஓநாய்கள் ஆட்டை திண்ண வந்தன. அதை கண்ட வேட்டை நாய்கள் அவைகளை விரட்டின. ""என்ன இத்தனை நாட்களாக நாங்கள் விட்டு சென்ற மாமிசத்தை தின்றீர்கள். இப்பொழுது உங்களுக்கு என்னவாயிற்று?'' என்றன.

""உங்களது எச்சில் மாமிசம் எங்களுக்கு வேண்டாம். எங்கள் தலைவர் வயிறு நிறைய எங்களுக்கு மாமிசம் கொடுக்கிறார்,'' என்றன.

அவற்றை மீறி ஓநாய்கள் மந்தைக்குள் நுழைந்தன. அவைகள் மீது பாய்ந்து கிழித்து கொன்றன வேட்டை நாய்கள். மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் மந்தை மேய்ப்பன்.

நீதி: நம்மிடம் வேலை செய்பவர்களுக்கு நாம் வயிறு நிறைய சாப்பாடு கொடுக்க வேண்டும். தகுதியான சம்பளம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு உண்மையாக உழைப்பர்.

Sunday, July 10, 2005

கதை எண் 10 - லட்சுமி கடாட்சம்!

Image hosted by Photobucket.com

முன்னொரு காலத்தில் மாமுனிவர் ஒருவர் காட்டில் தவம்செய்து வந்தார். சிறு வயதிலிருந்தே தவக்கோலம் பூண்டு இறைவனை தொழுது வந்ததால், அந்த காட்டில் வசித்த கொடிய மிருகங்கள் கூட அவரிடம் குழந்தைகளை போல நடந்து கொண்டன.

ஒரு நாள் அவர் முன் அழகிய பெண் ஒருத்தி தோன்றினாள். அவளது பேரழகு பிரமிக்க வைத்தது. இருப்பினும் மனம் சலனப்படாமல் அந்த அழகியை பார்த்து, ""அம்மா நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?'' என்றார்.

""நான் தான் மகாலட்சுமி; என்னுடைய விதி பயனால் சில நாட்கள் உங்களுடன் வசிக்க வந்துள்ளேன். நீங்கள் என்னை உதறி தள்ளினாலும் உங்களை விட்டு நான் போகமாட்டேன். பிரம்மன் கட்டளைப்படி நான் உங்களுடன் இருந்தாக வேண்டும்,'' என்றாள்.

மகாலட்சுமி போகமாட்டாள் என்பதை அறிந்த முனிவர் அந்த ஒப்பந்தத்திற்கு சம்மதித்தார்.

""அம்மா நீங்கள் வரும் பொழுது என்னிடம் சொல்லி கொண்டு வந்தது போல போகும் போது சொல்லி கொண்டே போக வேண்டும்,'' என்றார்.


லட்சுமியும் சம்மதித்தாள். அன்றிலிருந்து தன் மீது லட்சுமியின் அருள் பூரணமாக இருப்பதை அறிந்தார். அதை சோதித்து பார்க்க விரும்பினார் முனிவர். எனவே, காட்டை விட்டு பொற்குன்றம் என்ற மாநகரை அடைந்தார். அந்த அரண்மனையின் அரசரும் மந்திரிகளும் அமர்ந்திருந்தனர்.

வேகமாக சென்ற முனிவர் தனது இடது காலை துõக்கி மன்னனது கிரீடத்தை ஒரு உதை விட்டார். மறுநிமிடம், ""அடி! உதை அவனை பிடி!'' என்றபடியே ஆயிரம் சேவகர்கள் முனிவரை சூழ்ந்து கொண்டனர்.

உடனே அரசன், ""முனிவரை ஒன்றும் செய்யாதீர்கள். அவர் திரிகாலமும் உணர்ந்த ஞானி. என் கிரீடத்தை பாருங்கள்,'' என்றான்.

கிரீடத்தில் விஷநாகம் ஒன்று படமெடுத்து கொண்டிருந்தது. உடனே எல்லாரும் மகாபுருஷரை திட்டிவிட்டோமே என்று நினைத்து வருந்தினர். அதற்குள் விஷநாகம் ஓடி மறைந்தது. உண்மையில் அது விஷ நாகமல்ல; லட்சுமிதான் நாக உருவெடுத்து முனிவரை காப்பாற்றினாள்.

அன்றிலிருந்து அரசன் மாமுனிவருக்கு மந்திரி பதவி கொடுத்து சர்வ அதிகாரமும் கொடுத்தான். முனிவருக்கு லட்சுமி கடாட்சம் இருந்ததால் அவர் செய்ததெல்லாம் பலித்தது. முனிவரும் நாட்டை நல்ல முறையில் ஆண்டார்.

இரண்டு வருடங்கள் ஓடின. மீண்டும் ஒரு நாள் தன்னுடன் லட்சுமி இருக்கிறாளா என்பதை அறிய விரும்பினார் முனிவர். அன்றிரவு அரசனும், அரசியும் துõங்கிக் கொண்டிருந்த பள்ளியறைக்கு சென்றார். இருவரையும் துõக்கிக் கொண்டு வெளியே வந்தார்.

கண் விழித்த மன்னன் அந்த கிழவனின் தலையை வெட்டினால் என்ன என்று நினைத்து ஆத்திரம் கொண்டார். அதற்குள் பள்ளியறை கட்டிடம் இடிந்து விழுந்தது. அதை பார்த்த அரசனுக்கு மாமுனிவர் மேல் அளவிடாத பாசம் வந்தது.

""முனிவரே! நீர் இல்லாவிட்டால் நாங்கள் இருவரும் இறந்திருப்போம்!'' என்றான்.

இந்த விஷயத்தை அறிந்த நாட்டு மக்கள், முனிவரை தெய்வமாகவே பாவித்தனர்.

ஒரு நாள் அரசன் தன்னுடைய முக்கிய பரிவாரங்களுடன் காட்டுக்கு வேட்டையாட சென்றான். ஒரு மானை துரத்தி கொண்டு ஓடினார் மன்னன். அவன் பின்னாலே சென்றார் முனிவர்.

மான் தப்பிவிட்டது. களைத்து போன மன்னனும், முனிவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்தனர். முனிவரது மடியில் சற்று நேரம் இளைப்பாற விரும்பினார் மன்னர். முனிவரும் சம்மதித்தார்.

அப்பொழுது மேலே பார்த்தார் முனிவர். அந்த மரத்தின் கிளை மேல் கருடன் ஒன்று பெரிய நாகத்தை துõக்கி வந்து தின்பதற்காக உட்கார்ந்திருந்தது. அந்த மரத்தின் கிளை அரசனுடைய மூக்குக்கு நேராக இருந்தது.

மாமுனிவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எழுந்து கருடனை விரட்டினால் மன்னனது துõக்கம் கெட்டுவிடும். நாகத்தினால் அரசனுக்கு தீங்கில்லை என நினைத்து விட்டுவிட்டார். கருடன் பாம்பை கொத்தியது. பாம்பு தன் விஷத்தை கக்கவே அது மன்னனின் கழுத்தில் வந்து விழுந்தது.

கால சர்பத்தின் விஷம் என்ன பண்ணுமோ என பயந்த முனிவர், தன் கத்தியால் அதை வழிக்க நினைத்தார். அப்பொழுது லட்சுமி, ""நான் தங்கøள் விட்டு போக வேண்டிய நேரம் வந்துவிட்டது; செல்கிறேன்,'' என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டாள்.

கத்தியை எடுத்து அரசரின் கழுத்தில் வைத்தார் முனிவர். உடனே கண் விழித்தான் அரசன், ""இப்படிப்பட்ட பாதக செயலை நீங்கள் செய்வீர்கள் என்று நான் சிறிதும் நினைக்கவில்லை,'' என்று கோபப்பட்டான்.

முனிவரோ, ""மன்னா நான் உன்னை கொல்லவேண்டுமென்றால் எப்பொழுதோ கொன்றிருக்கலாம். சற்று தலையை துõக்கிப் பாருங்கள். கருடன் வாயிலிருக்கும் பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி விஷம் உங்கள் கழுத்தில் விழுந்துவிட்டது. அதை எடுக்கவே இப்படி செய்தேன். இனி நான் உங்களுடன் இருக்கமாட்டேன். லட்சுமி கடாட்சம் என்னை விட்டு போய்விட்டது,'' என்றார்.

மன்னன் மிகவும் மன்னிப்பு கேட்டான். தாங்கள் என்னை விட்டு செல்லக்கூடாது என கூறினான்.

நடந்தவைகளை எல்லாம் கூறிய முனிவர், ""எனக்கு என்ன இருக்கிறது. நான் ஒரு முனிவர். லட்சுமி என்னுடன் இருந்தவரையில் எனக்கு ஆபத்து இல்லை. இனி நான் தங்களுடன் இருப்பதில் பயனில்லை. விடை கொடுங்கள் நான் காட்டிற்கு செல்கிறேன்,'' என்றார்.

மன்னன் எவ்வளவோ கெஞ்சியும் முனிவர் அவருடன் இருக்க சம்மதிக்கவில்லை. தன்னை விட்டு லட்சுமி போன பிறகு மன்னனுடன் இருப்பது தனக்கு மிகுந்த ஆபத்தை தரும் என்பதை உணர்ந்து அரசனிடம் விடைபெற்று காட்டிற்கு சென்றார் முனிவர்.

லட்சுமிகடாட்சம் என்பதன் அர்த்தம் இப்பொழுது உங்களுக்கு புரிகிறதா குட்டீஸ்...

கதை எண் 9 - கிழவர் கேட்ட கேள்வி!

Image hosted by Photobucket.com
பாண்டிய நாட்டை ராசராசன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் மனைவி ஓரளவிற்கு இசைஞானம் உடையவள்; சிறந்த அழகியும் கூட.

தனக்கிருந்த கொஞ்சநஞ்ச இசை ஞானத்தை வைத்துக் கொண்டே மிகுந்த பெருமையடைந்தாள் அரசியார். தன்னை மிஞ்சிய இசை ஞானமுள்ளவர்கள் யாரும் இல்லை என்பது அவள் எண்ணம்.

அரசியைப் புகழ்ந்து அவளது சிறப்பை பாராட்டியே தங்கள் காரியங்களை சாதித்துக் கொண்டது காக்கா கூட்டம் ஒன்று.

வருடா வருடம் கோயிலில் விழா நடைபெறும். அப்பொழுதெல்லாம் பாணபத்திரர் என்ற இசைக்கலைஞர் மிகவும் அழகாக இசை நிகழ்ச்சி நடத்துவார். அவர் இறந்த பின், அவரது மனைவி இறைவனைப் புகழ்ந்து பாடுவாள்.

ராசராசன் பதவிக்கு வந்த பிறகு, அவனது மனைவியான அரசியாரின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.


பாணபத்திரரின் மனைவி மிகுந்த வேதனை அடைந்தாள். "சரி! நமக்கு விதித்தது இவ்ளோதான்!' என சிலகாலம் ஒதுங்கி இருந்தாள்.

அந்த வருடமும் வழக்கம் போல் திருவிழா வந்தது. இறைவனை எப்படியாவது பாடித் துதிப்பது என்று முடிவு செய்தாள். வழக்கம் போல் அரசியாரின் இசைக் கச்சேரி கோலாகலமாக நடைபெற்றது. மக்கள் இசையை ரசித்துக் கொண்டிருந்தனர்.

திடீரென்று ஜனங்கள் மெல்ல எழுந்து செல்ல ஆரம்பித்தனர். அதைக் கண்டதும் மன்னனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன நடக்கிறது என்று பார்க்கச் சொன்னான்.

கோயிலில் ஒரு மூலையில் அமர்ந்து பாணபத்திரரின் மனைவி இறைவனைத் துதித்து பாடிக் கொண்டிருந்தாள். மக்கள் அவளது இசையில் மயங்கி அங்கே சென்றனர். இதைக் கேள்விபட்ட அரசியார் கொதித்துப் போனார்.

""அன்பே! என்னை கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இவள் இப்படி நடந்துக் கொண்டாள். இவளுக்கு சரியான தண்டனை கொடுங்கள்!'' என்றாள்.

பாணபத்திரரின் குடும்பத்திற்கு தன் தந்தையார் காலத்தில் கொடுக்கப்பட்ட மரியாதையை மன்னன் அறிவான். எனவே, அக்குடும்பத்திற்கு எதிராக செயல்பட பயந்தான். இருப்பினும் தன் மனைவியை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக பாணபத்திரரின் மனைவியை பழிவாங்க நினைத்தான்.

அச்சமயத்தில் ஈழநாட்டு பெண் ஒருத்தி இசைக் கலையில் பெரும்புகழ் பெற்றிருந்தாள். எனவே, அவளை அழைத்து வந்து நாட்டில் இசைக்கச்சேரி வைத்தான். கச்சேரி முடிவில், ""என்னுடன் போட்டியிட யார் தயார்?'' என்றாள்.

அப்படி கேட்க வைத்ததும் மன்னர் தான். உடனே மன்னன் பாணபத்திரரின் மனைவியைப் பார்த்து, ""அம்மையீர்! நீங்கள் தான் நம் நாட்டின் பெருமையை நிலைநாட்ட முடியும்!'' என்றான்.

""பணம், புகழுக்காக இல்லை. நாட்டின் பெருமைக்காக கலந்து கொள்கிறேன்!'' என்றார்.

உடனே போட்டியின் திட்டங்களை மன்னன் அறிவித்தான்.

""மூன்று நாட்கள் போட்டி நடைபெறும். நடுவர் தீர்ப்பே இறுதியானது. ஈழநங்கை வெற்றி பெற்றால் அரசவைக் கலைஞராக்கப்படுவார். பாணபத்திரரின் மனைவி தோற்றால் நாடு கடத்தப்படுவார்...'' என்றான்.

முதல் நாள் போட்டி துவங்கியது. ஈழ மங்கையின் இசை அவ்வளவு சிறப்பாக இல்லை என்றாலும் அரசரின் கட்டளைப்படி அவளே சிறந்த இசை வழங்கியதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது நாளும் தீர்ப்பு இப்படியே வழங்கப்பட்டது.

பாணபத்திரரின் மனைவி, மன்னன் தனக்கெதிராக
போட்டுள்ள சதித்திட்டம் என்பதை புரிந்து கொண்டு இறைவனிடம் கூறி அழுதாள்.

" "இறைவா நீ தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்!'' என்று முறையிட்டாள்.

மூன்றாவது நாள் போட்டி துவங்கியது. திட்டமிட்டபடியே ஈழத்து மங்கை தான் சிறப்பாக இசைத்ததாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மக்கள் கூட்டத்தில் இருந்து முதியவர் ஒருவர் எழுந்து நின்றார்.

""மன்னா! இந்த எளியவன் சில வார்த்தைகள் பேசலாமா?'' என்றார்.

""பேசுங்கள்!'' என்றான் மன்னன்.

""நடுவர்களே... எந்த அடிப்படையில் ஈழமங்கையின் இசைதான் சிறந்தது என்று தீர்ப்பு வழங்கினீர்கள்?'' என்றார்.

திடுக்கிட்டனர் நடுவர்கள். முதியவர் ஈழத்து நங்கையின் இசையையும், பாணபத்திரரின் மனைவி இசைத்த இசை இரண்டிற்கும் உள்ள சிறப்புகளையும், குறைகளையும் புட்டு புட்டு வைத்தார்.

""பாணபத்திரரின் மனைவி இத்தனை சிறப்பாக இசைக்க, அவரை எப்படி தோற்றவர் என்று சொன்னீர்கள்?'' என்றார் முதியவர்.

மன்னரின் முகத்தை பார்த்தனர் நடுவர்கள். ""நீங்கள் எல்லாம் என்ன நடுவர்கள். மனசாட்சி படி தீர்ப்பு வழங்காமல் பொய் தீர்ப்பு அளிக்கிறீர்களே...?இது எந்த விதத்தில் நியாயம்?'' என்றார் முதியவர்.

""நடுவர்களே... இசைக்கும், இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு. இசைக்கு அநீதி செய்வதன் மூலம் இறைவனையே அவமதிக்கிறீர்கள். இசைப்பட வாழ்ந்த பாண்டிய மன்னர்கள் எங்கே? வசைபட வாழ்ந்து முன்னோர் பெயருக்கு அவப்பெயரை கொண்டு வரும் இந்தப் பாண்டியன் எங்கே?'' என்றார் கிழவர்.

கடும் சினம் கொண்ட மன்னன், ""என்னையே குற்றம் சாட்டும் அளவிற்கு உங்களுக்கு என்ன துணிச்சல்? பிடித்து இந்தக் கிழவரை கட்டுங்கள்,''
என்றான்.

கிழவரைத் தொட்ட காவலர்கள் மின்சாரத்தை தொட்டதுபோல் கீழே விழுந்தனர்.

மறுநிமிடம் கிழவரைக் காணவில்லை. கோயில் கிடுகிடுவென நடுங்கியது. அனைவரும் திடுக்கிட்டனர். கிழவர் இருந்த இடத்தில் இறைவன் காட்சியளித்து மறைந்தார்.

அதிர்ச்சியடைந்த ராசராசன் தரையில் விழுந்தான். தன் தவறை மன்னிக்கும்படி வேண்டினான்.

""நீதி தவறி செயல்பட்ட நான் இனி அரியணையில் அமருவதற்கு தகுதி இல்லை. இந்தக்கணமே நான் அரச வாழ்வை துறந்து ஆன்மீக வாழ்விற்குச் செல்
கிறேன்!'' என்றான்.

தன் மகனிடம் அரச பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஆன்மீகத்தில் ஈடுபட்டான் மன்னன்.

குட்டீஸ்... எப்பவும் நியாயமா நடந்துகிட்டா மன்னனுக்கு இந்த கதி
ஏற்பட்டிருக்குமா? ஏழைகள்தானே
என்று நினைத்து அவர்களை ஒடுக்க நினைத்தால் அவர்களுக்காக இறைவனே இறங்கி வந்து வழக்காடுவார் என்பதை மறந்துடாதீங்க.

கதை எண் 8 - இரண்டு சீடர்கள்!

Image hosted by Photobucket.com


ஒரு காட்டில் கருணைவேந்தன் என்ற முனிவர் ஆசிரமத்தை அமைத்து தம் சீடர்களுக்குக் கல்வி புகட்டி வந்தார். அவரது சீடர்களில் எல்லாச் சீடர்களையும் விட முன்னதாக விளங்கினர் மகிமைதாசன், சந்துரு என்பவர்கள்.

ஒரு நாள் கருணைவேந்தன் அந்த இரு சீடர்களையும் அழைத்து, ""நீங்கள் இருவரும் என் சீடர்களில் சிறந்தவர்களாக விளங்குகிறீர்கள். நீங்கள் என்னிடம் கற்க வேண்டியது எல்லாம் கற்றாகி விட்டது. இனி உங்கள் இருப்பிடங்களுக்கு செல்லலாம்,'' என்றார்.

""குரு சிரேஷ்டரே! எங்களுக்கு இப்போது அபூர்வ சக்திகள் கிடைத்துள்ளன. எங்கள் சக்தி கண்டு மற்ற மனிதர்கள் எங்களைச் சீண்டி துன்புறுத்தினால் நாங்கள் கோபம் அடைந்து அவர்களைச் சபித்தாலும் சபித்து விடுவோம். எங்களுக்குச் சாபம் கொடுக்கத்தான் தெரியும். கொடுத்த சாபத்தை விலக்கும் முறை தெரியாது. எனவே, அதையும் நீங்கள் எங்களுக்குக் கற்பித்தால் எல்லாருக்கும் நன்மை உண்டாகுமே!'' என்றனர்.

அப்படியானால் தன் ஆசிரமத்தில் மேலும் ஒரு மாதம் தங்கும் படிக் கூறினார். இரண்டு வாரங்களுக்குப் பின், ""சாபத்தை விலக்கும் முறையை அறிய கடும் உபாசனை மேற்கொள்ள வேண்டும். அது எல்லாராலும் முடியாது. உனக்கு அதனைக் கூறுகிறேன்,'' என்றார்.


சந்துரு மிகவும் மகிழ்ந்து போனான். அவன் தன் குரு கூறியபடி உபாசனையை செய்யலானான். அதே சமயம் கருணைவேந்தன் மகிமைதாசனை அழைத்து, ""நீ இனியும் இங்கே இருப்பது வீணே. உன்னால் சாபத்தை விலக்கும் முறையைக் கற்க முடியாது என்று எனக்குத் தெரிந்து போயிற்று. அதனால் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்,'' என்று கூறி அவனுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டார்.

சந்துரு தன் உபசானையை முடித்துக் கொண்டு குருவிடம் விடை பெற்று தன் ஊருக்குப் போய்ச் சேர்ந்தான். இதற்குப் பின் ஐந்தாறு ஆண்டுகள் சென்றன.

ஒரு நாள் அந்நாட்டு மன்னன் மாரவர்மன், கருணைவேந்தனை தன் தர்பாருக்கு வரும்படி ஆட்களை அனுப்பினான். மன்னன் அனுப்பிய ரதத்தில் அமர்ந்து அரண்மனையை அடைந்தார் குரு.

""நான் என் தர்பாரில் தகுதியும் திறமையும் பெற்ற ராஜகுரு ஒருவரை நியமனம் செய்ய விரும்புகிறேன். அப்பதவிக்கு ஏற்றவர்கள் தங்களது சீடர்களான மகிமைதாசனையும், சந்துருவையும் எல்லாரும் பரிந்துரைக்கின்றனர்.

""சந்துரு நாடெங்கிலும் பயணம் செய்து மிகவும் சக்தி வாய்ந்தவன் எனப் பெயர் பெற்றிருக்கிறான். அவனைக் கண்டு கொடியவர்கள் நடுங்கி தம்மைத் திருத்திக் கொண்டு நல்லவர்களாக ஆகிவிடுகின்றனர்.

""அவனுக்குப் பல சீடர்கள் கூட இருக்கின்றனர். அவர்கள் தம்மை "தாச சேனை' எனக் கூறிக் கொண்டு கொடியவர்களைத் தேடிப் பிடித்து தம் குருவின் முன் கொண்டு போய் நிறுத்துகின்றனர். அக்கொடியவர்கள் எங்கே சந்துரு தங்களை சபித்து விடுவானோ எனப் பயந்து திருந்தி விடுகின்றனர்,'' என்றார்.

""அப்படியா? சரி! மகிமைதாசனைப் பற்றி என்ன தெரிந்து கொண்டீர்கள்?'' என்று கேட்டார்.

""அவனுக்கு சந்துருவைப் போல அவ்வளவு புகழ் இல்லை. அவனுக்குச் சீடர்களும் மிகக் குறைவே. அவன் அவ்வப்போது மக்களை நல்வழிப்படுத்த சொற்பொழிவுகள் ஆற்றி அறிவுரை கூறுகிறான்.''

""அவனது பேச்சைக் கேட்க ஆவலுடன் மக்கள் கூடுகின்றனர். அவனது அறிவுரைக் கேட்டு பலர் திருந்தியும் உள்ளனர். அவனுக்கு மக்களிடையே உயரிய மதிப்பு உள்ளது. ஆனால், அவனிடம் அரிய சக்திகள் உள்ளனவா என்று யாருக்கும் தெரியாது,'' என்றான்.

""எனக்கு இருவரில் மகிமைதாசனையே பிடிக்கும். அவனே இந்த ராஜகுருப் பதவிக்கு ஏற்றவன்,'' என்றார். மன்னனும் குருவின் யோசனையை ஏற்று மகிமைதாசனையே ராஜகுருவாக அமர்த்தி கொண்டான்.

சந்துருவுக்கு தான் சாபத்தை விலக்கும் முறையைக் கற்பித்தார். மகிமைதாசனால் கற்க முடியாது என்று கூறி ஊருக்கு அனுப்பி விட்டார். ஆனால், ராஜகுருவை நியமிக்கும் விஷயத்தில் மகிமைதாசனையே அப்பதவியில் அமர்த்தும் படிக் கூறினார்.

இதன் காரணம் என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

""உலகில் சிலர் புகழ்பெற விரும்புகின்றனர். வேறு சிலர் அடக்கமாக இருக்கின்றனர். சந்துரு முதல் ரகத்தைச் சேர்ந்தவன். மகிமைதாசன் அடக்கமாக இருந்து தன் சக்தியை வெளிச்சம் போட்டுக் காட்டாமல் இருந்தான். சந்துருவைக் கண்டு மக்கள் பயப்பட்டனர். மகிமைதாசனை விரும்பி அவன் சொல்வதைக் கேட்கக் கூடினர்.

""ஒருவன் கோபம் கொண்டாலே சாபம் கொடுப்பான். பிறகு அதை விலக்குவான். இதனால் கோபம் கொள்பவன் சந்துரு. சாபம் விலக்கத் தெரியாததால் மகிமைதாசன் கோபமே கொள்ளாமல் அமைதியுடன் வாழ்ந்தான். இவற்றை எல்லாம் சீர்துõக்கிப் பார்த்தே அவர் மகிமைதாசனை அப்பதவியில் அமர்த்தும்படிக் கூறினார். அவரது போக்கிலும் முரண்பாடு இல்லை.

சந்துருவுக்கு சாபத்தை விலக்கும் முறையைச் சொல்லிக் கொடுத்தது அவனால் பிறருக்குக் கெடுதல் ஏற்பட்டாலும் அதை விலக்கி நன்மை புரிய வேண்டும் என்பதற்காகத்தான். மகிமைதாசனால் அவ்வித ஆபத்து ஏற்படாது என உணர்ந்தே அவர் அவனுக்கு அந்த முறையைக் கற்பிக்கவில்லை,'' எனக் கூறினான்.

கதை எண் 7 - பிரம்ம ராட்சஷன்!

Image hosted by Photobucket.com

ஒரு ஊரில் ஆலமரம் ஒன்று இருந்தது. அது நல்ல சுவையுடைய நீரைக் கொண்ட ஒரு குளக்கரையில் இருந்தது. அந்த ஆலமரம் முதிர்ந்த வயதை உடையது.

அதன் நிழல் எப்பொழுதும் "குளுகுளு'வென இருக்கும். ஆலமரத்தடியில் ஒரு பெரிய மேடை இருந்தது.

ஊருக்குச் செல்லும் பிரதான சாலை அந்த ஆலமரத்தை ஒட்டியே சென்றது. நான்கு பக்கமுள்ள சிற்றுõர்களுக்கும், பேரூர்களுக்கும் அந்த சாலை வழியாகத் தான் சென்றாக வேண்டும்; திரும்பி வந்தாக வேண்டும். அதனால் அந்த சாலை மக்கள் பெருக்கம் நிறைந்து காணப்பட்டது.

வெயிலில் வருகிறவர்களுக்கு ஆலமரமும் அதன் "குளுகுளு' நிழலும் அருகில் குளத்தில் கிடைக்கும் கற்கண்டு போன்ற தன்மையிலான நீரும் பாலைவனத்து பசுஞ்சோலை போலிருந்தன.

வெயிலில் வந்து களைப்புத் தீர குளத்து நீரை பருகி, முகம் கழுவி, கல் மேடையில் ஆலமரத்து நிழலில் அமர்ந்து கொள்வர். நல்ல ஓய்வு கிடைக்கும் வரை அப்படி உட்கார்ந்து கொள்வர். சிலர் துண்டை விரித்து போட்டு படுப்பதும் உண்டு.


அங்கே மக்கள் கூட்டம் எப்போதும், "ஜேஜே' என்றிருக்கும். ஆனால், சிறிது நாட்களாக ஆலமரத்தடியில் வந்து தங்கி இளைப்பாறும் மக்கள் தொகை குறைய ஆரம்பித்தது.

ஆலமர நிழலுக்கு ஓடோடி வரும் அவர்கள் இப்போது அதன் அருகில் வரவே அஞ்சத் தொடங்கினர். தொலைவிலே நடந்து சென்றனர்.

ஆலமரத்தை அருகில் கடந்து செல்ல வேண்டி வந்தால் ஓட்டமாக ஓடினர். ஆலமரத்தை திரும்பிக் கூட பார்க்காது சென்றனர். அதற்கு காரணம் அந்த ஆலமரத்துக்கு புதிதாக வந்து சேர்ந்த ஒரு பிரம்ம ராட்சஷன் தான்.

நீர் அருந்த இளைப்பாற அவர்கள் உட்காருவதற்கு முன் மரத்தின் நீண்ட கிளைகளை ஆட்டி பயமுறுத்தும். அவர்களிடம் மூன்று கேள்விகள் கேட்கும். அதற்கு அவர்கள் என்ன பதில் சொல்கின்றனர் என்று பார்க்கும். அவர்கள் சரியான பதிலை சொல்லாவிட்டால் அதற்கு கடும் கோபம் வரும்.

அவர்கள் தலையை கிள்ளி எடுத்து விடும். கிள்ளி எடுத்த தலையை ஆலமரக் கிளைகளில் தொங்கவிடும். அப்படி அகப்பட்ட தலைகள் ஆலமரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன.

அதனாலேயே யாத்ரீகர்கள், வழிபோக்கர்கள், ஆடு, மாடு மேய்ப்பவர்கள் எல்லாம் ஆலமர நிழலில் தங்க அஞ்சி அதன் அருகிலேயேவரயோசித்தனர்.

ஒரு மாமன்னன் தன் படைகளுடன் வந்து இறங்கத்தக்க அளவுக்கு ஆலமரம் பெரிதாகவும், அதை விட அதன் நிழல் பெரிதாக இருந்தும் எவருக்கும் பயன்படாமல் வீணாகிக் கொண்டிருந்தது.

குளத்து நீர் எவரும் பருகப்படாமல் பாசிப்படிந்து அதில் அல்லி, தாமரைப்பூக்கள் பூக்க ஆரம்பித்தன.

அந்த ஆலமரத்தின் அருகில் சற்று தள்ளி ஒரு கிராமம் இருந்தது. அதன் பெயர் சிங்கப்பட்டி. அக்கிராமத்தில் ராமாயி என்ற பாட்டி இருந்தாள். அறுபது வயது இருக்கும். அவளுக்கு ஒரு பெண் இருந்தாள். அவள் பெயர் வசந்தா. அவளுக்கு திருமணம் ஆகி ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அவன் பெயர் சுடலை. அவனுக்கு ஆறு வயது நடந்து கொண்டிருக்கும் போது அவன் அம்மாவும், அப்பாவும் சென்ற படகு ஆற்றில் கவிழவே இருவரும் இறந்து போயினர். பேரனை வளர்க்கிற பொறுப்பு பாட்டியை சேர்ந்தது.

குழந்தை பிற்காலத்தில் பேரறிஞனாகவும், கவிஞனாகவும் வருவான் என்பது அவன் படிப்பில் காட்டிய ஆர்வமும் கேட்கத் தொடங்கிய கேள்விகளுமே தெள்ளத் தெளிவாகக் காட்டின.

எதையும் ஏன், எதற்கு என்று அவன் கேட்கத் தொடங்கி தன் அறிவை வளர்த்துக் கொள்வதில் அக்கரை காட்டினான். தன் பேரன் புத்திசாலியாக இருப்பதை அறிந்து பாட்டி மகிழ்ந்தாள்.

அப்படி ஒரு முறை அருகில் உள்ள ஊரில் நடந்த ஒரு திருவிழாவிற்கு பேரனை அழைத்துச் சென்றாள் பாட்டி. அப்படி போகும் போது பிரம்மராட்சஷன் வாழும் ஆலமரத்தை ஒட்டிய சாலை வழியாக அவர்கள் செல்ல வேண்டி வந்தது.

அந்த ஆலமரத்தில் வாழும் பிரம்ம ராட்சஷனைப் பற்றி பாட்டி நன்கு அறிந்திருந்ததால் பேரனை ஆலமரத்தை விட்டு ஒதுக்கி அழைத்துச் சென்றாள்.

பெரியதும் நிழல் கொடுக்கக்கூடியதுமான ஆலமரத்தடியில் சிறிது நேரம் விளையாடி விட்டு பிறகு குளத்தின் குளிர்ந்த நீரையும் பருகிவிட்டுச் செல்ல விரும்பினான் சிறுவன்.

""சுடலை! ஆலமரத்தில் வாழும் பிரம்மராட்சஷன் பொல்லாதது... அது ஆலமர நிழலில் தங்குகிறவர்களிடம் மூன்று கேள்விகள் கேட்கும். அந்த கேள்விகளுக்கு சரியான பதிலை கூறாவிட்டால் அவர்கள் தலையை கொய்து ஆலமரத்தடியில் கட்டித் தொங்கவிட்டு விடும். அதனால் இப்போது ஆலமரத்து அருகே செல்லவே அஞ்சுகின்றனர். வா நாம் போய்விடலாம்!'' என்றாள் பாட்டி.

""பாட்டி! அப்படி என்ன மூன்று கேள்விகளை கேட்கிறது அந்த பிரம்மராட்சஷன்? அதற்கு இவர்கள் என்ன பதில் சொன்னார்கள்?'' என்று கேட்டான்.

""முதல் கேள்வியாக உலகில் எது பெரியது?'' என்று கேட்கும்.

""சரி! அதற்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்களாம் பாட்டி!''

""இமயமலை என்பார்களாம்!''

""அது சரியான பதில் இல்லையா?''

""ஆம்... பிரம்மராட்சஷன் அடுத்ததாக இரண்டாவது கேள்வியான நல்லதை விட தீமையே அதிகம் செய்யும் சிறிய வஸ்து எது?'' என்று கேட்கும்.

""பாம்பின் விஷம் சிறிதாக மருந்துக்கு பயன்படுகிறது. ஆனால், மரணம் விளைவிக்கவே அதிகமாக பயன்படுகிறது!'' என்பர்.

""அந்த பதிலும் சரியில்லை என்று சொல்லிவிடுமா?''

""ஆமாம்... மூன்றாவது கேள்வியாக உருண்டு வேகமாக ஓடுவது எது?'' என்று கேட்கும்.

""அதற்கு என்ன பதில் சொல்வார்கள்?''

""வண்டிச்சக்கரம், பணம் என்று சொல்வர். இந்த பதில்கள் பிரம்ம ராட்சஷனுக்கு திருப்தியை அளிக்காது. உடனே அவர்கள் தலையை கிள்ளி எடுத்து மரத்தில் தொங்கவிட்டு விடும். சுடலை... நாம் இங்கிருப்பது ஆபத்தை விளைவிக்கும். வா... போய் விடலாம்,'' என்று அவனது கையை பிடித்தாள் பாட்டி ராமாயி.

ஆலமரம் அருகில் சென்றான் பேரன். கால்களை அகல விரிந்து பலமாக ஊன்றி இடுப்பின் இருபுறமும் கைகளை பதித்து பெருங்குரலில், ""ஏ... பிரம்மராட்சஷா... உன் கேள்விகளுக்கு பதில் சொல்ல வந்திருக்கிறேன். வா... வெளியே... கேள் உன் கேள்விகளை!'' என்று கூறினான்.

""யாரடா சிறுவன் என் கேள்விகளுக்கு பதில் சொல்ல தோள்தட்டி வந்திருப்பது?'' என்றபடி ஆலமரத்தில் இருந்து வெளி வந்த பிரம்மராட்சஷன், சிறுவன் பயப்படட்டும் என்று தலைகள் தொங்கும் ஆலமரக் கிளைகளை உக்கிரமாக ஆட்டிற்று. அது புயல் வீசுவது போல பயங்கரமாக இருந்தது.

அதை கண்டு அஞ்சவில்லை. ""ஏ... பிரம்மராட்சஷா... உன் உருவம் கண்டு எள்ளி நகையாடாதே... கேள் உன் கேள்விகளை?'' என்றான்.

""சாவதென்று வந்து விட்டாய்... உன் விதியை யாரால் மாற்ற முடியும்? என் முதல் கேள்வி இதுதான். உலகிலேயே பெரியது எது?'' என்று ஆலமரத்து கிளைகளை பயங்கரமாக ஆட்டியபடி கேட்டது.

""உலகில் பெரியது அன்பு,'' என்றான்.

அதைக் கேட்டதும் பிரம்மராட்சஷனின் கண்கள் கலங்கின. "சரியான பதிலை சொல்லிவிட்டாயே?' என்பது போல சுடலையை பார்த்தது.

""அடுத்த கேள்வியைக் கேள்!'' என்றான் சுடலை.

""நன்மையை விட தீமையே செய்கிற சிறிய வஸ்து எது?''

""மனிதனின் நாவு!'' என்றான்.

தான் நினைத்திருந்த பதிலையே தங்கு தடையின்றி சொன்னதும் பிரம்மராட்சஷன் அசந்து போயிற்று. மூன்றாவதாக தான் கேட்கப் போகிற கேள்விக்கு அவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்றெண்ணி, ""உருண்டு வேகமாக ஓடுவது எது?'' என்று கேட்டது.

""காலம்!'' என்றான்.

அடுத்த கணம், ""சிறுவனே! என் கேள்விகளுக்கு சரியான பதிலை சொல்லிவிட்ட நீ சிறந்த அறிவாளி தான். நான் தாயன்பை புரிந்து கொள்ளாமல் என் அன்னையை சிறிய வஸ்துவான என் நாவால் திட்டி வதைத்தேன். அவளை கொடுமைப்படுத்தினேன்.

""என்னை பத்து மாதம் சுமந்து பெற்ற அவள் மணி வயிற்றை எட்டி உதைத்தேன். பெற்ற மனம் துடித்தது. நான் என் தாய்க்கிழைத்த கொடுமைகளை பார்த்த ஒரு முனிவர் "நீ பிரம்மராட்சனாகக் கடவாய்' என்று சபித்துவிட்டார். அது போலாகிவிட்டது.

""நான் தவறுகளை உணர்ந்து"எனக்கு எப்போது சாபவிமோசனம்?' என்று கேட்டேன். காலம் வரும் பொழுது என்று சொல்லி விட்டு போய்விட்டார் அம்முனிவர். அதற்குத் தான் நான் இவ்வளவு நாட்களாக காத்திருந்தேன்.

""உருண்டு வேகமாக ஓடும் காலம் உன் வடிவில் வந்து என்னை சாபத்தில் இருந்து விமோசனமடைய செய்து விட்டது...'' என்று சொல்லி சுடலையை வணங்கி எழுந்த போது பிரம்மராட்சஷன் மறைந்து அழகான ஒரு இளைஞன் அங்கிருந்தான்.

அந்த இளைஞன் ஆலமரத்தில் தொங்கிய தலைகளை எல்லாம் எடுத்து மண் தோண்டி புதைத்தான். ஆலமரத்தடியில் இருந்த மேடையையும் பிற பகுதிகளையும் சுத்தப்படுத்தினான். குளக்கரையை சுற்றி வளர்ந்து புதிராக மண்டிக் கிடந்த செடி, கொடிகளை நீக்கி குளக்கரையை அழகாக்கினான்.

பிரம்மராட்சஷனின் கொடிய மூச்சுப்பட்டு வாடியும் கருகியும் போய் இருந்த ஆலமரம் இப்போது பச்சை பசேலென்ற இலைகளோடு காணப்பட்டது. மரத்தை விட்டுச் சென்ற பறவைகள் எல்லாம் திரும்பி ஆலமரத்தில் தங்கின.

அவைகளில் விதவிதமான குரலொலிகள் இனிமையாக கேட்டன. வழிப் போக்கர்களும், யாத்ரீகர்களும் ஆலமரத்தடியில் உள்ள மேடையில் தங்கி ஓய்வெடுத்து குளத்து நீரை பருகி மகிழ்ந்தனர். இவ்வளவுக்கும் காரணமான சுடலையை எல்லாரும் பாராட்டினர்.