சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Sunday, August 20, 2006

கதை மலர் 104 - கஞ்ச வியாபாரியும் முட்டாள் உதவியாளர்களும்

முன்னொரு காலத்தில் பணக்கார துணி வியாபாரி ஒருவன் இருந்தான், பணக்காரனாக இருந்தாலும் படும் கஞ்சன். அவனிடம் வேலை செய்தவர்கள் அனைவரும் படும் முட்டாள்கள். எங்கே புத்திசாலிகளை வேலைக்கு வைத்தால் அதிக சம்பளம் கொடுக்கணும் என்றும், தன்னிடமே படித்து எங்கே தனக்கு போட்டியாக வியாபாரம் தொடங்கிடுவாங்கன்னு நினைத்தான்.

ஒரு நாள் வழக்கம் விற்பனைக்காக வெளியூர் செல்ல முடிவு செய்தான். விலை உயர்ந்த துணிகளை எல்லாம் நான்கைந்து பெட்டிகளுக்குள் வைத்து மூடினான். எல்லாப் பெட்டிகளையும் ஒரு ஒட்டகத்தின் முதுகில் ஏற்றிவிட்டு மிகக்குறைந்த கூலிக்கு அமர்த்திய முட்டாள் வேலைக்காரர்கள் இருவருடன் புறப்பட்டான்.

அளவுக்கு அதிகமாக பொருட்களை ஏற்றியதால் வழியில் பாரம் தாங்காமல் ஒட்டகம் கீழே விழுந்து விட்டது.

வேலைக்காரர்களைப் பார்த்து அவன், ""நீங்கள் இங்கேயே ஒட்டகத்தைப் பார்த்துக் கொண்டிருங்கள். நான் பக்கத்தில் இருக்கும் ஊருக்குச் சென்று இன்னொரு ஒட்டகம் கொண்டு வருகிறேன். பிறகு சுமையை இரண்டு ஒட்டகத்திலும் சமமாக வைத்துப் பயணத்தைத் தொடரலாம். நான் இல்லாத போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நான் வருவதற்குள் மழை வந்துவிட்டால் பெட்டிகளை எப்படியாவது நனையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்,'' என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

வேலைக்காரர்கள் இருவரும் சரியான முட்டாள்கள். இது தெரிந்தும் குறைந்த கூலி கொடுத்து அவர்களை விலை பேசியிருந்தான் வணிகன். எல்லாரும் எவ்வளவோ சொன்னார்கள். ஆனால், வியாபாரியோ வழித்துணைக்குதானே இவர்களை அழைத்துச் செல்கிறேன். எடுபடி வேலை செய்யணும். இதனால் எனக்கு ஒரு பாதிப்பும் வராது என்று நினைத்தான்.

சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது.

"நம் முதலாளி பெட்டிகளை நனையாமல் பார்த்துக் கொள்ளச் சொன்னார். இப்பொழுது என்ன செய்வது?'' என்று கேட்டான் ஒருவன்.

"பெட்டிகளுக்கு உள்ளே இருக்கின்ற துணிகளை எல்லாம் எடுத்துப் பெட்டிகள் மேலே போட்டு மூடுவோம். பெட்டிகள் நனையாமல் பார்த்துக் கொள்வோம்,'' என்றான் அடுத்தவன்.

இருவரும் பெட்டிகளுக்குள் இருந்த விலையுயர்ந்த துணிகளை எல்லாம் எடுத்துப் பெட்டிகளுக்கு மேல் போட்டனர்.

மழையில் நனைந்து துணிகள் எல்லாம் ஈரமாகிவிட்டன.

ஒட்டகத்துடன் திரும்பிய வணிகன், ""ஐயோ! என்னடா செய்தீர்கள்? துணிகள் எல்லாம் நனைந்து வீணாகிவிட்டதே,'' என்று கோபத்துடன் கத்தினான்.

"முதலாளி நீங்க சொன்னபடி பெட்டிகள் நனையாமல் இருப்பதற்காகத் துணிகளை எல்லாம் அதன் மேலே போட்டோம். அந்தப் பெட்டிகள் சிறிது கூட நனையவில்லை. நீங்களே பாருங்கள்,'' என்றான் அவர்களில் ஒருவன்.

"முட்டாள்களான உங்களுக்கு இனி என்னிடம் வேலை இல்லை,'' என்று அவர்களை விரட்டினான் வணிகன்.

கொஞ்சம் காசுக்கு சிக்கனம் பார்க்கப் போய் முதலுக்கே நஷ்டம் வந்ததை எண்ணி வேதனையுடன் ஊர் திரும்பினான் வணிகன்.

Thursday, July 13, 2006

கதை மலர் 103 - மெய்ப் பொருள் நாயனார்

வருங்கால வாழ்க்கைச் செல்வங்களே!!!

இப்ப நான் உங்களுக்கு ஒரு நாயன்மாரைப் பற்றி சொல்லப்போறேன்.
நாயன்மார்னா யாரு தெரியுமா? சிவனை நாயகனாய் போற்றுபவர்கள் நாயன்மார்கள். அவர்களுக்கு சாப்பாடு, தூக்கம் எப்பவும் சிவனையே நினைச்சுக்குட்டு இருப்பாங்க.

அதமாதிரி ஒரு ராஜா ஒருத்தர், விழுப்புரத்துக்கிட்ட இருக்கிற திருக்கோவிலூர்ங்கிற ஊர ஆட்சி பண்ணிண்டுருந்த்தார். அவரு பேரு மெய்ப்பொருள் நாயனார்.

அவர வேற எந்தநாட்டு ராஜாவலயும் ஜயிக்கமுடியல. காரணம் அவர்கிட்ட இருந்த சிவ பக்தியும், விசுவாசமான வீரர்களூம். அதில்லாம அவரும் எல்லாருக்கும் நிறைய வாரி வாரிகொடுத்து உதவி செய்வாரு. அதுனால எல்லாரும் அவர சாமி மாதிரி கும்பிட்டாங்க.

இதப்பார்த்த மத்த நாட்டு ராஜாக்குல்லாம் பொறாமையாப் போச்சு, இவர எப்படியாவது தோக்கடிச்சு, இவரோட நாட்ட புடிக்கணும்னு பல தடவை முயற்சி பண்ணி தோத்துட்டாங்க.

விபூதி பூசி ருத்ராக்ஷம் போட்டுகிட்டு யார் வந்தாலும் அவுங்களுக்கு தேவையான துணி, சாப்பாடுன்னு கொடுப்பார்..

இதத் தெரிஞ்சுகிட்ட எதிரி நாட்டு ராஜா ஒருத்தன் என்ன பண்ணினான், தங்கிட்ட இருந்த ஒற்றன் ஒருத்தன திருக்கோவிலூருக்கு சிவனடியார் வேஷத்துல அனுப்பிவச்சான். அவன் பேரு முத்தநாதன்.

அவனும் வேஷம் கட்டிக்கிட்டு நாட்டுக்குள்ள நுழைஞ்சுட்டான். நேரே அரண்மனைக்கு போனான். இவனோட விபூதியையும் ருத்ராக்ஷத்தையும் பார்த்த காவல்காரங்க உள்ளே விட்டுட்டாங்க.

மன்னர் மெய்ப்பொருள் நாயனார் அரச சபையில் இருந்தார். சபைக்கு ஒரு சிவனடியார் வருகிறார் என்றவுடன், அவரை ஓடி வந்து வரவேற்றார்.

சிவனடியார் வேஷத்துல இருந்த முத்தநாதன், தன்னோட வேலய ஆரம்பித்தான். அவன் மன்னனை நோக்கி, மன்னா நான் பல அரிய மந்திரங்களையெல்லாம் பல காலம் தவம் செய்து பெற்றிருக்கிறேன். அவற்றில் சிலவற்றை உங்களுக்குத் தரவே நான் வந்திருக்கிறேன் என்றான்.

இதைகேட்ட மன்னனும் மகிழ்ந்து, ஐயா நாங்கள் செய்த பாக்கியம் இது. உங்கள் விருப்பப்படி பெற்றுக்கொள்ள தயாராயிருக்கிறேன் என்றார். இதை சற்றும் எதிர் பார்க்காத முத்த நாதன் சமாளித்துக்கொண்டு, ஐயா இதை நான் எல்லார் முன்னாலும் உங்களுக்கு தரமுடியாது.

தங்களது தனியான இடத்தில் தான் தரமுடியும் ஆக அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றான்.

மன்னனும் தன்னுடைய தனிமாளிகைக்கு முத்தநாதனை அழைத்து சென்றார். சிவனடியார் வேஷத்திலிருந்த முத்த நாதன் ஏதோ மந்திரம் ஜபிப்பது போல் நடித்து, மன்னர் காணாத வேளையில், தன்னுடைய இடுப்பில் மறைத்து வைத்திருந்த கோடரியாலே, மன்னர் மெய்ப்பொருள் நாயனாரை வயிற்றில் குத்தி கீழே தள்ளினான்.

இதை அரண்மனை ஒற்றன் ஒருவன் பார்த்து விட்டு, முத்தநாதனை கையும் களவுமாய் பிடித்து, கொலை செய்ய பாய்ந்துவிட்டான்.

இதைக்கண்ட மன்னர் மெய்ப்பொருள் நாயனார், முத்தநாதனை பிடித்த தனது வீரனை, "தத்தா நமர்" இவர் நம்மவர், இவர் கெடுதல் செய்திருந்தாலும், இவருக்கு நாம் தீங்கு செய்யக்கூடாது. ஆகவே இவரை நம் நாட்டு எல்லைவரை ஜாக்கிரதையாய் கொண்டுவிட்டு வரவேண்டியது உன்பொறுப்பு என்று கூறி உயிரை விட்டார்.

மன்னரை சிவனடியார் வேஷத்தில் வந்த ஒருவன் கொன்றுவிட்டான் என்ற செய்தி காட்டுத்தீயாய் பரவி மக்களனைவரும் அரண்மனைமுன் கூடிவிட்டனர்.

தனக்கு சதி மூலம் தீங்கு செய்வதனுக்கும் கருணை காட்டி உயிர் பிச்சையளித்த மன்னர் மெய்ப்பொருள் நாயனாரின் சிவபக்தி இன்றளவும் பக்தியுடன் போற்றப்படுகிறது.


நன்றி: மன்னைகோசை - முத்தமிழ் மன்றம்.காம்

Saturday, July 08, 2006

கதை மலர் 102 - பட்டாணி

ஒரு நாள் ஒரு மூதாட்டி மண் அடுப்பில் வைத்து சமையல் செய்து கொண்டிருந்தாள். அவள் அடுப்பில் வைத்திருந்த தண்ணீர் கொதித்ததால் அதற்குள் சில காய்கறிகளை போட்டாள். அப்போது பட்டாணி அந்தப் சட்டியிலிருந்து வெளியே குதித்து வந்து, "என்னை வேக வைக்கவேண்டாம். என்னை சமைக்கவேண்டாம்'' என்று கத்தியது.

"மூதாட்டியோ நீ மரியாதையாக பழையபடி சட்டிக்குள் போகிறாயா? இல்லை உன்னை நசுக்கட்டுமா?'' என்றாள்.

ஆனால் மூதாட்டியின் உத்தரவை பட்டாணி கேட்கவில்லை. அங்கிருந்து வேகமாக ஓட்டம் பிடித்தது. அப்போது "நில் நில் ஓடாதே' உன்னுடன் நானும் வருகிறேன்'' என்று இன்னொரு குரல் கேட்டது. பட்டாணி திரும்பிப் பார்த்தது, அப்படிக் கத்தியது என்று சொன்னது எரிந்து கொண்டிருந்த ஒரு துண்டு நிலக்கரி.

"அடுப்பிற்குள் இருந்தால் எனக்கு மூச்சு முட்டுகிறது. அதனால் நானும் உன்னுடன் வெளியுலகைப் பார்க்க வருகிறேன்'' என்றது, நிலக்கரி.

"என்ன வெளியுலகைப் பார்க்கப் போகிறாயா?. அப்படியென்றால் என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்''. என்றது கீழே கிடந்த வைக்கோல் ஒன்று.

"சரி, வா போகலாம்'' என்று நிலக்கரியும் பட்டாணியும்? வைக்கோலை தங்களுடன் கூட்டு சேர்த்துக் கொண்டன.

மூன்றும் சேர்ந்து நடந்தபோது சாலையின் ஓரிடத்தில் விரிசல் விட்டிருந்தது. அந்த இடத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.

"இனி நாம் தொடர்ந்து செல்ல முடியாது. அதனால் நான் அடுப்பிற்கே போய் விடுகிறேன்'' என்றது, நிலக்கரி.

"அப்படியென்றால் நானும் அடுப்பில் எரியும் சட்டிக்குள் போய் விடுவேன்'' என்றது பட்டாணி.

"நண்பர்களே சோர்ந்து விடாதீர்கள். நான் இந்த பாலத்திற்கு (விரிசல்) இணைப்பாக இருக்கிறேன். நீங்கள் இருவரும் என்மீது ஏறி நடந்து மறுபக்கம் போய்விடலாம்'' என்று நம்பிக்கைïட்டியது, வைக்கோல்.

முதலில் பட்டாணி, வைக்கோல் மீது ஏறி விரிசலின் மறுபக்கத்தை அடைந்தது. ஆனால் எரிந்து கொண்டிருந்த நிலக்கரி, வைக்கோல் மீது ஏறியதும் அது தீப்பிடித்துக் கொண்டது. இதனால் இரண்டும் சேர்ந்து தண்ணீருக்குள் விழுந்தன.

"ஷ்..ஷ்..ஷ்...''தன் மீது எரிந்து கொண்டிருந்த நெருப்பு அணைந்ததும் நிலக்கரி பெருமூச்சு விட்டது.

அந்த வினோத சத்தத்தைக் கேட்ட பட்டாணி சிரிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து அது பலமாகச் சிரித்ததால் வெடித்து சிதறி அதிலிருந்த ஒவ்வொரு பட்டாணியும் ஓட ஆரம்பித்தன.

அந்தப் பட்டாணிகள் அனைத்தும் ஒரு தையல்கடையை நோக்கிச் சென்றன. தையல்காரரிடம் தயவு செய்து எங்களை ஒன்றாக வைத்து தைத்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டன.

தையல்காரரும் பட்டாணிகளின் வேண்டுகோளை ஏற்று ஒரு தடித்த நூல் கொண்டு தைத்து விட்டார்.

இதனால் தான் அன்று முதல் பட்டாணியை நாம் உரிப்பதற்கு அதன் மேல் தோலில் நூல் போல் உள்ள பகுதியை உரிக்கவேண்டியிருக்கிறது.

- மேகலாயா மாநில கிராமியக் கதை.
நன்றி: முத்தமிழ்மன்றம்.காம்

Wednesday, June 07, 2006

கதை மலர் 101 - தொலைந்த மூக்கு

அண்ணன் தங்கை இருவருக்கும் எப்போதும் சண்டை தான். அண்ணன் பரத் மகா குறும்பன். இரண்டாம் வகுப்பில் படிக்கின்றான். தங்கை நந்தினி இன்னும் பள்ளிக்கு செல்லவில்லை.சின்னப் பெண். தாய் தந்தை இருவரும் பணி புரிகின்றார்கள். அப்பத்தாவும் தாத்தாவும் இவர்களுடன் இருக்கிறார்கள். பரத் , நந்தினி குடும்பம் இருப்பது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில். அந்த குடியிருப்பில் மொத்தம் 5 மாடி. மூன்றாவது மாடியில் இவர்கள் குடியிருக்கின்றார்கள்.

ஒரு சனிக்கிழமை காலை அப்பாவும் அம்மாவும் பணிக்கு சென்றபின்னர் பரத்தும் நந்தினியும் விளையாடிக் கொண்டு இருந்தனர். தாத்தா வெளியே தன் நண்பர்களைக் காண கிளம்பினார்

"பரத் தங்கையை சீண்டாமல் விளையாடு. சண்டை போட்டுக்க கூடாது சரியா? தாத்தா சீக்கிரம் வந்துவிடுகின்றேன்"

"சரிங்க தாத்தா" - இருவரும்.

விளையாட்டு சாமான்கள் எடுத்துக்கொண்டு இருவரும் மொட்டைமாடியில் விளையாடச் சென்றனர். நிழலாக இருந்த ஓரத்தில் விளையாடினர்.எந்த பொருள் பரத் எடுத்தாலும் உடனே நந்தினி அது வேண்டும் என்பாள். அப்போது திடீர் என்று பரத் "உஷ் உஷ்" என்று கத்தியபடி ஓடினான்.

"அண்ணா என்ன ஆச்சு?" பயத்துடன் அண்ணன் சட்டைக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள்..

"ஒரு பருந்து வந்தது பார்த்தியா?"

"இல்லையே"

"பெரிய பருந்து"

''அச்சோ அப்புறம்?. ஏன் விரட்டிக்கொண்டு ஓடினீர்கள்?"

"அழக்கூடாது சரியா. அந்த பருந்து உன் மூக்கை கடிச்சி எடுத்துக்கொண்டு போய் விட்டது. அது தான் துரத்திக்கொண்டு சென்றேன். அதற்குள் பறந்தே போய்விட்டது"..

இவன் சொல்லி முடிப்பதற்குள் நந்தினி அழ ஆரம்பித்துவிட்டாள்.."அம்மா என் மூக்கு..என் மூக்கு" என்று அழுதபடி படிக்கட்டுகளில் இறங்கி தன் வீட்டிற்கு சென்றாள். அவள் விட்ட சத்தத்திற்கு அந்த கட்டிடத்தில் உள்ள அனைவருமே பயந்துவிட்டனர். யார் என்ன சொல்லியும் அழுகை நின்ற பாடில்லை. அப்பத்தா அதெல்லாம் ஒன்றும் இல்லை.அண்ணன் விளையாடுகிறான் என்றாள். கேட்கவே இல்லையே. அழுதபடியே இருந்தாள்.கை கால் உதைத்தாள்.

தாத்தா அந்த சமயம் வீட்டிற்குள் வந்தார். "என்னாச்சு பாப்பாக்கு? ஏன் என் தங்கம் அழுகின்றது?"

தன் அழுகையை நிறுத்தி "தாத்தா, நானும் அண்ணனும் விளையாடிக் கொண்டு இருந்தோம்.ஒரு பெரிய பருந்து கறுப்பு நிறத்தில் வந்தது. என் மூக்கை..." மீண்டும் அழுகை...

"அழாமல் சொன்னால் தானே புரியும்..."

"என் மூக்கை கடிச்சி எடுத்துக்கொண்டு போய்விட்டது..ம்ம்ம்..ம்ம்ம்"
நிலைமையை புரிந்து கொண்டார் தாத்தா. "ஓ உன் மூக்கு தானா அது? " என்றார்.
அமைதியானாள் நந்தினி. "நான் தெருவில் வந்த போது ஒரு பருந்து வந்து என்னிடம் பேசியது.ஒரு அழகான குட்டி பெண்ணின் மூக்கை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். பாவம் அவள் நல்ல பெண், சமத்து பெண், என்று சொல்லிவிட்டு மூக்கை என்னிடம் கொடுத்து விட்டு பறந்து சென்றது."

"இதோ பத்திரமாக என் பாக்கெட்டில் வைத்திருக்கிறேன்.எங்கே கிட்டவா..கண்ணை மூடிக்கொள்.."

பாக்கெட்டில் இருந்து ஏதோ எடுப்பது போல் பாவனை செய்து அவள் முகத்தில் வைத்து அழுத்தினார்.

"ஆகா. மூக்கு ஒட்டியாச்சே..போய் கண்ணாடியில் பார்." நந்தினி கண்ணாடியை நோக்கி ஓடினாள்.."படவா..குழந்தையை ஏன் இப்படி ஏமாற்றுகிறாய்" என்று செல்லமாக பரத் கன்னத்தை கிள்ளினார் தாத்தா..

"ஹைய்யா மூக்கு வந்துடுச்சே..ஜாலி..ஜாலி..அண்ணா மூக்கு வந்துடுச்சு...ஜாலி ஜாலி..." மீண்டும் மாடிக்கு சென்று விளையாட துவங்கினர் ஆனந்தமாக.

--
விழியன் மாமா
http://vizhiyan.wordpress.com/

Thursday, May 25, 2006

கதை மலர் 100 - பூதம் சொன்ன கதை

முன்னொரு காலத்தில் பணக்கார பிரபு ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் அமுதன் மிகவும் நல்லவன்; இரக்க குணமுடையவன். இளையவன் யாசகன் மிகவும் கெட்டவன்.

கொஞ்ச நாட்களில் பணக்காரர் இறக்கவே அண்ணனும், தம்பியும் வியாபாரத்தை கவனித்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒரு முறை ஒரு கிராமத்திற்குப் போய் தமக்கு வரவேண்டிய ஆயிரம் பவுன்களை வசூலித்தனர்.

அதனை ஒரு பையில் போட்டுக் கொண்டு இருவரும் ஊர் திரும்ப ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தனர். படகுக்காரன் எங்கோ போயிருந்ததால் தம்பியிடம் பண மூட்டையைக் கொடுத்து விட்டுச் சற்று கண்மூடித் தூங்கினான் அண்ணன். இதற்குள் தம்பி அதே போல ஒரு பண மூட்டையில் கற்களை வைத்துக் கட்டி எடுத்து ஒளித்துக் கொண்டான்.

சற்று நேரத்திற்கெல்லாம் படகுக்காரன் வரவே தம்பி தன் அண்ணனை எழுப்பி அவரோடு படகில் ஏறி உட்கார்ந்தான். படகும் கிளம்பியது. படகு நடு ஆற்றில் போகும் போது தம்பி ஒரு மூட்டையை எடுத்து ஆற்றில் நழுவ விட்டு, "ஐயோ அண்ணா பண மூட்டை ஆற்றில் விழுந்துவிட்டதே,'' எனக் கூறினான்.

"போனால் போகட்டும். அது நம் பணமாக இருந்தால் நமக்கே கிடைக்கும்,'' எனக் கூறினான் அமுதன். தம்பியும் தான் தந்திரமாக ஆயிரம் பவுன்களை தட்டி விட்டதாக எண்ணி மகிழ்ந்தான். ஆனால், அவன் அவசரத்தில் ஆற்றில் போட்டது பண மூட்டையைதான். கற்களை வைத்துக் கட்டிய மூட்டைதான் அவனிடம் இருந்தது.

அந்த ஆற்றில் ஒரு பூதம் இருந்தது. தம்பி மூட்டையை ஆற்றில் போட்டதும் ஒரு மீனை உடனே விழுங்கச் சொல்லி கட்டளை இட்டது அது. மீனும் அப்பூதம் சொன்னபடி நடந்தது.

பூதம் தம்பி செய்த மோசடியை புரிந்து கொண்டது. எனவே, அந்தப் பண மூட்டையை எப்படியும் அண்ணனிடம் சேர்த்து விட எண்ணி மூட்டையை விழுங்கிய மீன் எங்கும் போகாதபடி காவல் காத்தது.

அண்ணனும், தம்பியும் காசிக்கு வந்து தம் வீட்டை அடைந்தனர். தம்பி வீட்டில் தனியாக ஓரிடத்திற்குப் போய் தன்னிடமிருந்து மூட்டையை அவிழ்த்துப் பார்த்தான். அதில் கற்கள் இருப்பதைக் கண்டு, "ஐயோ! நான் அண்ணனை ஏமாற்ற எண்ணி நானே ஏமாந்தேனே...'' என எண்ணி மனம் புழுங்கினான்.

அன்று சில மீனவர்கள் ஆற்றில் வலை போட்ட போது பூதம் மீனவராக மாறி அந்த மீனை எடுத்துக் கொண்டு அண்ணனின் வீட்டுக்குச் சென்றது. அண்ணன் அவன் கேட்டபடி ஒரு பவுனைக் கொடுத்து அந்த மீனை வாங்கிக் கொண்டார். அதனை அவர் தன் மனைவியிடம் கொடுக்கவே அவள் அதனை இரண்டாக நறுக்கினாள். அதன் வயிற்றிலிருந்து பணமூட்டை வெளியே விழுந்தது.

அதைக் கண்டு திகைத்தான் அமுதன். "இது நம் பணமே. இதனை நம்மிடம் கொடுக்கவே இந்த மீனவன் வந்திருக்கிறான். இவனுக்கு எப்படி இது தெரிந்தது?'' என எண்ணி ஆச்சரியப்பட்டான்.

அப்போது, "அமுதா... நீ மிகவும் நல்லவன். இந்த ஊரில் உள்ள ஏழைகளுக்கு நிறைய உதவிகளைச் செய்கிறாய். ஒரு முறை நீங்கள் படகில் சென்றபோது உன் கையில் இருந்து நழுவிய உணவு பொட்டலத்தை உண்டேன்.

"அது எனக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தது. அதனால் தான் உன்னுடைய பணமூட்டையை உன் தம்பி வேண்டுமென்றே தூக்கி வீசிய போது அதை விழுங்கும்படி இந்த மீனுக்கு கட்டளை கொடுத்தேன். அந்த மீனையும் எடுத்துக் கொண்டு வந்தேன். நல்லவர்களுக்கு எல்லாமே நல்லதாய் தான் நடக்கும்...'' என்று சொல்லி மறைந்தது.

அதை கேட்டு மகிழ்ந்தான் அமுதன். மறைக்காமல் அதில் பாதியான ஐநுõறு பவுன்களைக் தன் தம்பியிடம் கொடுத்தார். தம்பியும் தனது அண்ணனுடைய கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினான்.

நன்றி: தினமலர் - சிறுவர் மலர்

Saturday, April 29, 2006

கதை மலர் 99 - நயவஞ்சக நரி

ஒரு காட்டில் நரி ஒன்று இருந்தது. ஒரு முறை அதற்கு நிறைய உணவு ஒரே வேளையில் சாப்பிட வேண்டுமென்று விரும்பிற்று. அதற்கான தருணம் எப்போது வாய்க்கப் போகிறதோ என்று காத்துக் கொண்டிருந்தது.

மரத்தின் நடுவிலுள்ள பொந்து ஒன்றில் அது மிகவும் நல்லவனைப் போல வசிக்க ஆரம்பித்தது. மனதுக்குள் இந்த மரத்தின் கூடு கட்டி வரும் பறவைகள் குஞ்சு பொரித்தால் குஞ்சுகளை அப்படியே சாப்பிட்டு விடலாமே என்றெண்ணிற்று நரி.

அதன் எண்ணம் வீண் போகவில்லை. இரண்டு கழுகுகள் கணவன், மனைவியாக ஒரு நாள் அம்மரத்தடிக்கு வந்தன. மரப் பொந்தில் மிகவும் சாது மாதிரி படுத்துக் கிடக்கும் நரியைப் பார்த்தன.

“நரியாரே! நீ இம்மரப் பொந்தில் எவ்வளவு நாளாக இருக்கிறீர்?'' என்று கேட்டது ஆண் கழுகு.

“கழுகாரா... வாங்க... கூட யாரு? மன்னியா?'' என்று கேட்டது.


“ஆமாம்!'' “நான் கேட்டதற்கு நீர் இன்னமும் பதில் சொல்லவில்லையே!'' என்று கேட்டது.

“ஆமாம்...! இம்மரப் பொந்தில் பல வருஷங்களாக இருக்கிறேன்...! ஏன் கேட்கிறீர்?'' என்று கேட்டது நரி.

“என் மனைவிக்கு பிரசவ காலம் நெருங்குகிறது. இம்மரத்தில் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கலாமா என்று ஒரு ஆசை!'' என்றது ஆண் கழுகு.

“ரொம்ப ராசியான மரம் இது... முன்பு கூட ஒரு பருந்து இங்கு கூடு கட்டி, குஞ்சு பொரித்து, சுகமாக வாழ்ந்தது!'' என்றது நரி.

“ஆபத்து ஏதாவது உண்டாகுமா?'' என்று கவலையோடு கேட்டது பெண் கழுகு.

“நான் வயதானவன் இந்த பொந்தே கதி என்று கிடக்கிறேன். நீங்கள் பயப்படவே வேண்டாம். நாம் நல்ல நண்பர்களாக இருப்போம்!'' என்றது நரி.

பிறகு மரத்தை அண்ணாந்து பார்த்து மூன்று கிளைகள் பிரியும் ஒரு இடத்தை சுட்டிக் காட்டி, “அங்கு கூடு கட்டிக் கொள்ளுங்கள். மிகவும் வசதியாக இருக்கும்!'' என்றது.

ஆண் கழுகும், பெண் கழுகும் அங்கு சென்று கூடு கட்ட ஆரம்பித்தன. ஆண் கழுகு வெளியில் இரை தேடிச் செல்லும் பொழுது, “என் மனைவி மட்டும் கூட்டிலிருக்கிறாள். அவளால் பறக்க முடியவில்லை... இன்றோ, நாளையோ முட்டை இடப்போகிறாள்... கொஞ்சம் பார்த்துக் கொள்ளும் நரியாரே!'' என்றது.

“கவலைப்படாமல் போய் வாரும் நண்பரே! நான் இங்கிருக்கும் வரை எந்த ஆபத்தும் அண்டாது!'' என்றது நரி.

நமக்கு நல்ல நண்பன் கிடைத்தான் என்றெண்ணி இரை தேட பறந்து சென்றது ஆண் கழுகு.

பெண் கழுகு முட்டையிட்டு குஞ்சு பொரித்து அவை சுமாராக பெரிதானதும், எல்லாவற்றையும் சாப்பிட்டு விட வேண்டுமென்று நரி எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது, மரத்தடியில் புதிதாக வந்த பன்றியும், அதன் கொழு கொழு குட்டிகளும் அதன் பார்வையில் பட்டது.

பன்றிக் குட்டிகளை சாப்பிட்டு பல நாள் பசியாறலாம் போலிருக்கிறதே என்றெண்ணிற்று நரி. மேலே கழுகு குஞ்சுகள், கீழே பன்றிக் குட்டிகள்... பேஷ் பேஷ்...

“நரியாரே இந்த மரத்தடியில் நானும் என் குட்டிகளும் தங்கலாமா?'' என்று கேட்டது அம்மா பன்றி.

“பேஷாக தங்கலாம்!'' என்றது நரி.

“எனக்கும், என் குட்டிக்கும் ஏதாவது ஆபத்து வருமா நரியாரே?'' என்று கவலையோடு கேட்டது அம்மா பன்றி.

“நான் இருக்கும் இடத்துக்கு வந்துவிட்டாய் பன்றியே... கவலையே படாதே...! நான் வயதானவன். இந்த பொந்தே கதி என்று கிடப்பவன்...! எதிரிகள் எவரையும் மரத்தருகில் அண்டவே விடமாட்டேன்...! நானிருக்க பயமேன்?'' என்றது நரி.

பன்றி தன் குட்டிகளுடன் மரத்தடியில் தங்கிக் கொண்டது. நாளடைவில் மரத்தின் மேலுள்ள கூட்டில் பெண் கழுகு முட்டையிட்டு குஞ்சு பொரித்தது. நான்கைந்து குஞ்சுகள் இருக்கும். கத்தியபடி இருந்தன. மரத்தடியில் பன்றிக் குட்டிகளும் "கர், கர்' என்று உறுமியபடி உலாவிக் கொண்டிருந்தன.

வந்ததற்கு இப்போது பன்றிக் குட்டிகள் மிகவும் பருத்திருந்தன. அம்மா பன்றியும் தான். அவைகளை எப்படி சாப்பிடலாம் என்று யோசித்த நரி, ஆண் கழுகையும், பெண் கழுகையும் அழைத்தது.

“இதோ பாருங்கள்...! மரத்தடியில் இருக்கிறதே பன்றி அது சுத்த மோசம்... உங்கள் குஞ்சுகளை எப்பொழுது சாப்பிடலாமென்று தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது!'' என்றது.

இரண்டு கழுகுகளும் இரை தேடக் கூட வெளியில் செல்லாமல், கூட்டிலுள்ள குஞ்சுகளை காவல் காக்கத் தொடங்கின. வெளியே எங்கேயும் போக பயந்தன.

மேலே ஒருமுறை பார்த்துவிட்டு குட்டிகளுடன் மேய்ந்து கொண்டிருந்த பன்றியிடம் வந்தது நரி.

“பன்றியே...! நீ உன் குட்டிகளை மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலே இருக்கிற இரண்டு கழுகுகளும் மகா பொல்லாத கழுகுகள். அவை நீ இல்லாத சமயத்தில் உன் குட்டிகளைக் கொத்திக் கொன்று சாப்பிட்டுவிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றன!'' என்றது நரி.

பன்றி ஒரேயடியாக பயந்து போய்விட்டது. குட்டிகளை எல்லாம் தன் காலின் கீழ் அழைத்துக் கொண்டது. மரத்தடியிலேயே இருக்க வேண்டும். குட்டிகளை தனியாக விட்டு விட்டு போய் விடக்கூடாது.

கழுகுகள் சாப்பிடவா என் குட்டிகளை கண் போல வளர்க்கிறேன் என்றெண்ணியது பன்றி. அதன் பிரகாரமே இருக்கவும் ஆரம்பித்தது அம்மாப் பன்றி.

ஆண், பெண் கழுகுகளும், அம்மா பன்றியும், பன்றிக் குட்டிகளும் இரை தேடாததால் வாடி இளைத்து, சோர்ந்து, துவண்டு ஒரு நாள் எல்லாமே இறந்து போயின.

நரி விரும்பியதுபோல் நிறைய சாப்பிட கழுகுகளும், பன்றிகளும் அதன் தந்திரத்தால் கிடைத்துவிட்டன.

யார் யாரிடம் நட்பு கொள்ள வேண்டுமென்று யோசித்து நட்புக் கொள்ளாததால் கழுகுகளுக்கும், பன்றிகளுக்கும் நேர்ந்த பரிதாபமான முடிவைப் பார்த்தீர்களா, நல்லவர்களோடு மட்டுமே நட்பு கொள்ள வேண்டும்.

Sunday, April 23, 2006

கதை மலர் 98 - கஞ்ச மகா பிரபு

பட்டினப்பாக்கத்தில் ஜம்பு என்ற செல்வந்தர் இருந்தார். அவரிடம் ஏராளமான செல்வம் இருந்தது. இருப்பினும் சரியான கஞ்சன்.

எங்குச் சென்றாலம் அவர் நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட அழகான வண்டியில் அமர்ந்து செல்வார்.

ஒரு முறை, வெளியூர் சென்றிருந்த அவர் தன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். வண்டிச் சக்கரத்தில் ஏதோ முறிவது போன்ற ஓசை கேட்டது.

கோபத்துடன் அவர் வண்டியோட்டியைப் பார்த்து, "டேய் வண்டியை நிறுத்து. சக்கரத்திற்கு என்ன ஆயிற்று பார்?'' என்று கத்தினார்.

நடுக்கத்துடன் கீழே இறங்கிய வண்டியோட்டி சக்கரத்தைப் பார்த்தான். "ஐயா! சக்கரத்தில் உள்ள கடையாணி உடைந்துவிட்டது. அந்த ஆணியைச் சரி செய்தால்தான் வண்டியை ஓட்ட முடியும்,'' என்றான்.

"முட்டாளே! புறப்படும்போதே இதைப் பார்த்திருக்க வேண்டாமா? பக்கத்தில் உள்ள ஊருக்கு வண்டியை இழுத்துச் செல். அங்கே கொல்லனிடம் காட்டி வண்டியைச் சரி செய். நேரத்தை வீணாக்காதே,'' என்று வண்டியில் இருந்தபடியே கத்தினார் ஜம்பு.

குதிரைகளுடன் வண்டியை மெதுவாக இழுத்துச் சென்றான் அவன். சிறிது நேரத்தில் வண்டி கொல்லனின் உலைக்களத்தின் முன் நின்றது.

அவன் குரல் கொடுக்க வெளியே வந்த கொல்லன் வண்டியைப் பார்த்தான்.
கேசவனை பார்த்தக் கொல்லன், "உடைந்திருக்கும் கடையாணிக்குப் பதில் வேறொரு ஆணியை மாட்டினால் வண்டி பழையபடி ஓடும். ஒரு வெள்ளிப் பணம் கூலி ஆகும்,'' என்றான்.

"என்ன ஒரு ஆணியை மாட்டக் கூலி ஒரு வெள்ளிப் பணமா? நீ கொல்லனா அல்லது கொள்ளைக்காரனா?'' என்று கோபத்துடன் கேட்டார் ஜம்பு.

"எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் கேட்ட கூலி தருவதாக இருந்தால் சொல்லுங்கள். வண்டியைச் செப்பனிட்டுத் தருகிறேன். இல்லையேல் வேறு ஆளைப் பாருங்கள்,'' என்றான் அவன்.

வேறு வழியில்லாத ஜம்பு, "சரி'' என்றார்.

சிறிது இரும்புத்துண்டு ஒன்றை எடுத்தான் அவன். உலைக்களத்து நெருப்பில் அதைப் போட்டான். பழுக்கக் காய்ந்த அந்த இரும்புத்துண்டை கத்தியால் நன்கு அடித்தான். ஆணியாக மாறிய அதை சக்கரத்தில் மாட்டினான்.

"இனிமேல் வண்டி நன்றாக ஓடும். கூலியைத் தாருங்கள்,'' என்றான் அவன்.
நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். ஒரு வெள்ளிப் பணத்தைத் தந்துவிட்டு புறப்பட்டார்.

வண்டி ஓடிக் கொண்டிருந்தது. "இந்தச் சிறிய வேலைக்கு ஒரு வெள்ளிப் பணம் கூலியா? இப்படிப் பொருள் ஈட்டினால் இவன் என்னை விடச் செல்வனாகி விடுவானே. இந்த வேலையை நான் கற்றுக் கொண்டால் நல்ல வருவாய் வருமே. நாள்தோறும் இங்கு வந்து இவன் எப்படி வேலை செய்கிறான் என்று பார்ப்பேன். எல்லா வேலைகளையும் கற்றுக் கொண்ட பிறகு இவனை இங்கிருந்து விரட்டி விடுவேன்' என்று நினைத்தார் அவர்.

அதன்படி நாள்தோறும் அந்த உலைக்களத்திற்கு வந்தார். கொல்லன் எப்படி வேலை செய்கிறான் என்பதை கவனித்தபடி இருந்தார். சில நாட்கள் சென்றன. கொல்லனுடைய தொழிலில் தான் தேர்ச்சி பெற்றுவிட்டதாக நினைத்தார் அவர்.

கொல்லனைப் பார்த்து, "இனி உனக்கு இங்கு வேலை இல்லை. எங்காவது ஓடிப்போ. என்னைப் பற்றி உனக்குத் தெரியும். நீ மீண்டும் என் கண்ணில் பட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன்,'' என்று மிரட்டினார்.

அவருக்கு அஞ்சிய அவன், "இனி நான் இங்கு வரமாட்டேன்,'' என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

மகிழ்ச்சியுடன் உலைக்களத்திற்குள் நுழைந்தார் அவர். வண்டியோட்டியைப் பார்த்து, "இன்று முதல் கொல்லன் தொழிலை நான் செய்யப் போகிறேன். நீ என் உதவியாளர்,'' என்றார்.

"ஐயா! இந்தத் தொழிலில் எனக்கு ஏதும் தெரியாதே,'' என்றான் அவன்.

"நான் என்ன சொல்கிறேனோ அதைச் செய். அது போதும். வெளியே நின்று யாராவது இங்கு வருகிறார்களா பார்?'' என்றார் அவர்.

"ஐயா, பெரிய இரும்புத் துண்டைத் தூக்கிக் கொண்டு ஒரு ஆள் இங்கு வருகிறான்'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.

"பக்கத்து ஊரில் வாழும் உழவன் நான். இந்த இரும்பில் எனக்கு ஒரு கலப்பை செய்ய வேண்டும்,'' என்றான் அவன்.

அந்த இரும்புத் துண்டைத் துõக்கிப் பார்த்தார். அவர். மிகுந்த கனம் உடையதாக இருந்தது. அதை உருட்டி மேலும் கீழும் பார்த்தார்.

"நல்ல இரும்பு இது. இதில் உறுதியான, நீடித்து உழைக்கும் கலப்பை செய்ய முடியும்,'' என்றார்.

பிறகு அந்த இரும்பைத் துõக்கி உலைக்களத்தில் போட்டார். சக்கரத்தைச் சுற்றச் சுற்ற தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இரும்புத் துண்டு பழுக்கக் காய்ந்தது.
உதவியாளைப் பார்த்து, "ஏய்! பழுக்கக் காய்ந்த இந்த இரும்புத் துண்டை, அந்த இரும்புக் கட்டையின் மேல் வை. இந்தப் பெரிய சுத்தியால் அதை அடித்துக் கூர்மையாக்கு. எவ்வளவு வலிமையாக அடிக்கிறாயோ அந்த அளவு கலப்பை உறுதியாக இருக்கும்,'' என்றார்.

உதவியாளும் அவர் சொன்னது போலப் பெரிய சுத்தியால் ஓங்கி அடித்துக் கொண்டிருந்தான். சின்ன சுத்தியலுடன் அவரும் அவனுடன் சேர்ந்து இரும்புத் துண்டை அடித்தார்.

களைப்பு அடைந்த அவன் சுத்தியலால் அடிப்பதை நிறுத்தினான். "ஐயா! என்னால் முடியவில்லை,'' என்றான்.

உழவனைப் பார்த்து அவர், "இன்னும் சிறிது நேரம் சுத்தியால் அடித்தால் போதும். அழகான கலப்பை கிடைக்கும் உதவி செய்,'' என்றார்.

பெரிய சுத்தியலை எடுத்தான் உழவன். அதனால் இரும்புத் துண்டை ஓங்கி அடிக்கத் தொடங்கினான். களைப்பு அடைந்த அவனும் அடிப்பதை நிறுத்தினான்.

நீண்ட நேரம் சுத்தியால் வலிமையாக அடித்ததால் இரும்புத் துண்டு சிறியதாகிவிட்டது. அதை மேலும் கீழும் புரட்டிப் பார்த்தார்.
உதட்டைப் பிதுக்கிய அவர், "என்ன இரும்புத் துண்டைக் கொண்டு வந்திருக்கிறாய். மட்டமான இரும்பு. இதில் கலப்பை செய்ய முடியாது. வேண்டுமானால் ஒரு கோடரி செய்து தருகிறேன். பல பரம்பரைக்குத் தொடர்ந்து அது உழைக்கும். என்ன சொல்கிறாய்?'' என்று கேட்டார்.

"சரி கோடரியே செய்து தாருங்கள், '' என்றான் அவன்.
மீண்டும் அந்த இரும்புத் துண்டை உலைக்களத்தில் போட்டுத் தீ மூட்டினார் அவர். பழுக்கக் காய்ந்த அந்த இரும்பை உதவியாளும் அவரும் சேர்ந்து சுத்தியலால் அடித்தனர்.

சிறிது நேரம் சென்றது. அடிப்பதை நிறுத்திய அவர் இரும்புத் துண்டைப் பார்த்தார்.

மிகவும் சிறியதாக இருந்தது அது. "இதில் கோடரி செய்ய முடியாது. கூர்மையான அழகான சுத்தி செய்து தருகிறேன். இது போன்று வேலைப்பாடு அமைந்த சுத்தி யாரிடமும் இருக்க முடியாது. என்ன சொல்கிறாய்?'' என்று கேட்டார்.

"ஏதாவது செய்யுங்கள்,'' என்று கடுப்புடன் சொன்னான் உழவன்.

பழையபடி அந்த இரும்பை நெருப்பில் போட்டு எடுத்து அவரும் உதவியாளும் அடித்தார்கள். அந்த இரும்பு மெல்லியதாக ஆகிவிட்டது. அதைப் பார்த்த அவர், "நீ கொண்டு வந்த இரும்பு மிக மோசம். அதில் ஒரு ஊசி தான் செய்ய முடியும். என்ன சொல்கிறாய்?'' என்று கேட்டார்.

நடந்ததை எல்லாம் பார்த்து வெறுப்படைந்த உழவன், "எதையாவது செய்து தாருங்கள்,'' என்றான்.

அந்த இரும்புத் துண்டை சுத்தியலால் தட்டி ஊசி போல ஆக்கினார் ஜம்பு. மகிழ்ச்சியுடன் அதைக் கையில் எடுத்த அவர், "இந்த ஊசி சாதாரண ஊசி அல்ல. அருமையான ஊசி. நீண்ட காலம் உழைக்கும் ஊசி. இதைப் போன்ற அழகான ஊசியை இதுவரை யாரும் உருவாக்கி இருக்க முடியாது,'' என்று அதை உழவனிடம் தந்தார்.

"நான் இதற்காக அதிகக் கூலி கேட்கமாட்டேன். நான் உழைத்த உழைப்பு உனக்கே தெரியும். ஐந்து வெள்ளிப் பணம் கொடு. அது போதும்,'' என்றார்.

"ஒரு காசுகூடப் பெறாத ஊசி இது. பெரிய இரும்புத் துண்டை வீணாக்கியதோடு ஐந்து வெள்ளிப் பணமா கேட்கிறாய்? அந்தப் பணத்திற்கு பத்துப் புதிய கலப்பைகளையே வாங்க முடியுமே. என்னை ஏமாற்றவா நினைக்கிறாய்? உன்னை என்ன செய்கிறேன் பார்,'' என்று உள்ளத்திற்குள் கருவினான் அவன்.

"இப்பொழுது என்னிடம் வெள்ளிப் பணம் ஏதும் இல்லை. என் வீட்டில் ஏராளமாக நெல் உள்ளது. அங்கு வாருங்கள். பத்து வெள்ளிப் பணத்திற்கு உரிய நெல்லைத் தருகிறேன்,'' என்றான் அவன்.

மகிழ்ச்சி அடைந்த அவர், "நீ முன்னால் செல். நான் வண்டியுடன் பின்னால் வருகிறேன்,'' என்றார்.

உலைக்களத்தைப் பூட்டிவிட்டு வண்டியில் அமர்ந்தார் அவர். வண்டியோட்டி வண்டியை உழவனின் வீட்டின் முன் நிறுத்தினான்.

வண்டியோட்டியைப் பார்த்து, "நான் இந்தக் காலி சாக்கு மூட்டைகளுடன் உள்ளே செல்கிறேன். நீ இங்கிருந்தபடியே உள்ளிருந்து வரும் பேச்சுக் குரலைக் கவனி. சாக்கு மூட்டைகளில் எல்லாம் நெல்லை நிரப்பும் அவன் "போதுமா' என்று கேட்பான். நீ உடனே, "போதாது, நானும் வேலை செய்திருக்கிறேன். என் பங்கையும் அவரிடம் தாருங்கள் என்று குரல் கொடு,'' என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அவரின் வருகைக்காக உழவனும் அவன் உறவினர்களும் கோபத்துடன் காத்திருந்தனர்.

அவர் உள்ளே நுழைந்ததும் எல்லாரும் அவரைப் பிடித்து இழுத்தனர். வலிமை கொண்ட அளவுக்கு அவரை உதைத்தனர்.

வலி பொறுக்க முடியாத அவர், "ஐயோ! என்னை விட்டு விடுங்கள் போதும்,'' என்று அலறினார்.

வெளியே இருந்த வண்டியோட்டி, "போதாது! போதாது! என் பங்கையும் சேர்த்து அவரிடம் தாருங்கள்,'' என்று உரத்த குரலில் கத்தினான்.

"கேட்டீர்களா? இன்னும் இவனை உதையுங்கள்,'' என்றான் உழவன்.
எல்லாரும் சேர்ந்து அவரை மேலும் அடித்து உதைத்தனர்.

உடலெங்கும் காயத்துடன் பரிதாபமாக முனகியபடி வெளியே வந்தார் அவர்.
வண்டியோட்டி உதவி செய்யத் தடுமாறியபடி வண்டியில் அமர்ந்தார்.

"அய்யா! எங்கேய்யா, நம்ம மூட்டை, நான் போய் வாங்கி வரவா?"

"டேய்! வண்டியை விடு. சீக்கிரம் இங்கிருந்து புறப்பட வேண்டும். கொல்லனாக இருந்தால் இப்படி அடி உதை கிடைக்கும் என்பதை அறியாமல் போனேனே! என் வாழ்நாளிலேயே இப்படி வேதனைப்பட்டது கிடையாது. இனி இந்த வேலையே வேண்டாம்,'' என்றுஅலறினார் செல்வந்தர்.

Saturday, April 22, 2006

கதை மலர் - 97

குட்டித் தோழி
இரயில் அரை மணி நேரம் தாமதம். எந்த ரயில் சரியான நேரத்திற்கு வருகிறது? இரயில் நிலையத்தில் அன்று கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. சென்ற வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் இந்த ஞாயிற்றுக்கிழமை அதிக கூட்டம். காட்பாடியில் இருந்து பெங்களூர் செல்ல எப்படியும் நான்கு மணி நேரம் பிடிக்கும். எப்படி நேரத்தை செலவு செய்வது? புதிதாய் வாங்கிய புத்தகம் இரண்டையும் வீட்டிலேயே விட்டுவிட்டேன். ஹிக்கின்போத்தம்ஸ் கடை எதிர் பிளாட்பாரத்தில் தான் இருந்தது. அங்கு சென்றுவர சோம்பேறித்தனம்!

"டங் டங். பயணிகள் கவனத்திற்கு, சென்னையில் இருந்து பங்காருப்பேட்டை வழியாக பெங்களூர் செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் ஒன்றாவது பிளாட்பாரத்தில் வந்து சேரும்."

என்னுடைய சிறு வயதில், 'எப்படி இந்த அக்கா வார்த்தை தவறாமல், ஒரு தவறில்லாமல் அறிவிக்கிறாங்க'ன்னு அதிசயித்தது உண்டு.

வண்டி வந்தது. என் இருக்கையைத் தேடிப் பிடித்து உட்காருவதற்குள் பெரும் சிரமமாகிவிட்டது. எதிரிலே மூன்று நாள் தாடியுடன் முப்பத்தைந்து வயதான கணவன், முப்பதை சற்றே கடந்திருக்கும் மனைவி மற்றும் எல்லாம் வாழ்ந்து முடிந்தது போன்ற தோற்றத்தில் ஒரு பெரியவர். இரயிலின் சத்தத்தைவிட அதிகமாக அருகே அழுகுரல். குழந்தைகளின் சண்டை. சண்டையிட்டது ஒரு ஆறு வயது பெண்குழந்தையும் நான்கு வயது சிறுவனும்.

"விடுடா விடு" ஏதோ ஒரு விளையாட்டுப் பொருளுக்காக சண்டை. "மம்மி அந்தப் பையன் பீப்பீல எச்சி வெச்சிட்டான்". லேசான சிணுங்கல் அந்தப் பெண் குழந்தையிடம்.

"அமுதா.. இங்க வா. தம்பி தானே.. வா வந்து தாத்தாகிட்ட உட்கார்." அப்போது தான் தெரிந்தது அந்தக் குழந்தை எதிரே அமர்ந்திருந்த 35-30ன் குழந்தை என்று.

"தா அதை முதலில்; பையில் வைக்கிறேன். அமைதியா எங்காச்சும் இருக்கியா நீ?" இது அமுதாவின் அப்பா.

ஒரு மணி நேரம் கடந்ததே தெரியவில்லை. பயணம் முழுவதும் அமுதாவின் அட்டகாசங்களை மட்டுமே நோட்டமிட்டபடி நான். மடிக்கு மடி தாவினாள். தாத்தாவிடம் கொஞ்சினாள். அம்மாவிடம் அடாவடித்தாள். அந்தச் சிறுவனிடம் "உன் பேச்சு டூ" என்றாள். அப்பாவிடம் அடக்கமாக சில நிமிடம். என் மடிக்கும் வந்து சேர்ந்தாள்.

"பாப்பா பேரு என்ன?"

"பாப்பாவா? யாரு பாப்பா? I am a big girl"

"ஓ அப்படிங்களா மேடம்? சொல்லுங்க உங்க பேரு என்ன?

"அமுதா.. உங்க பேரு என்ன?" மழலைத் தமிழில் கேட்டாள்.

தமிழே அழகு! அதுவும் மழலைத்தமிழ் அழகோ அழகு..

"விழியன்"

"குட் நேம். ஹலோ விழியன். ஹவ் டு யு டு?" என் கையைக் குலுக்கினாள்.

அடடா எனக்கு இது தோன்றாமல் போச்சே. பக்கத்தில் கடன் வாங்கிய வார இதழை மூடி வைத்து விட்டேன். அடுத்த ஒரு மணி நேரம் என்னைப் படாதபாடு படுத்திவிட்டாள். கேள்வி மேல் கேள்வி. "நீங்க எங்க வேலை செய்யறீங்க. என்ன கேம்ஸ் விளையாடுவீங்க? ஏன் இவ்வளவு குண்டா இருக்கீங்க? எந்த ஸ்கூல்ல படிச்சீங்க?" சலிக்காமல் பதில் தந்தேன்.

ஒரு கட்டத்தில் அவள் கேள்விகளில் இருந்து தப்பிக்க அவளிடம் சின்ன விளையாட்டு விளையாடினேன்.

"அமுதா இது என்ன?"

"இது கூட எனக்குத் தெரியாதா? சர்க்கிள்"

"சரி. இந்த வட்டம் மாதிரி என்ன என்ன பொருள் உனக்குத் தெரியும்? சொல்லு பார்ப்போம்."

"இட்லி, தோசை, அம்மா வளையல், நிலா, சன், பாட்டி பொட்டு, ம்ம்ம் காயின், என் டாலர்... .." எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஆரம்பித்தவள் கூட்ஸ் வண்டிபோல சொல்லிக்கொண்டே போனாள்.

அதன் பின்னர் பாட்டு ஒன்றை சொல்லித் தந்தேன். அவளும் ஆடிக்கொண்டே பாட்டு பாடி என்னையும் ஆட வைத்தாள். பேசிப் பேசி என் சக்தியே குறைந்துவிட்டது. ரயில்வே கேண்டீனில் இருந்து பஜ்ஜி போண்டா வந்தது. ஒரு ப்ளேட் கொடுக்கச் சொன்னேன். மூன்று போண்டா பதினாறு ரூபாய். ஒன்றை எடுத்து அமுதாவிடம் கொடுத்தேன். அவள் அம்மாவைப் பார்த்து சாப்பிடட்டுமா என்று கேட்பாள் என எதிர்பார்த்தேன்.

எதிர்பாராத பதில்!

"அங்கிள். இது பேட் ஆயில்ல (bad oil) செய்து இருப்பாங்க. ஸ்டொமக் ப்ராப்ளம் வரும். நீங்க இப்பவே குண்டா இருக்கீங்க. இன்னும் சாப்பிட்டா அவ்வளவு தான்"

சுரீர் என்று மண்டை மீது அடித்தது போல இருந்தது. கேண்டீன் சர்வர் வேகமாக நடையைக் கட்டினார். மிகவும் நெருடலாகிவிட்டது. வாயில் வைத்ததை உண்டுவிட்டு மீதி இருந்த இரண்டு போண்டாவை அந்த வழியே யாசகம் கேட்டு வந்த ஒரு வயதான பாட்டியிடம் கொடுத்தேன்.

அமுதா என்னைப் பார்த்து அநாயசமாக, "அவங்க ஒடம்பு கெட்டுப்போனா பரவாயில்லையா?" எனக் கேட்டுவிட்டு அவள் அம்மாவின் மடியினில் குடிபெயர்ந்தாள்.

என்ன செய்வதென தெரியாமல் கண்ணயர்ந்தேன். குப்பம் ரயில் நிலையத்தில் ஜன்னலோர சீட் காலியானது. அமுதா மீண்டும் வந்து மடி மீது உட்கார்ந்து கொண்டாள்.

அவள் வகுப்புக் கதைகளைக் கூற ஆரம்பித்தாள். தன் தோழி ஜெனி·பர் வைத்திருக்கும் பென்சில் பாக்ஸ் முதல் அவள் வகுப்பு ஆசிரியை வரை ஓயாமல் பேசினாள். எத்தனை உன்னிப்பான பார்வைகள், நினைவுகள், கவனிப்புகள். அவள் பேசி எனக்குத் தாகம் எடுத்தது.

"அமுதா காபி, டீ, பால் ஏதாச்சும் குடிக்கறியா, இல்ல இதுக்கும் ஏதாச்சும் வெச்சிருக்கியா?"

"நீங்க குடிங்க"

டீ குடித்தேன். பிளாஸ்டிக் கப்பை கீழே போட வந்தேன், அமுதாவின் பார்வையில் ஏதோ இருப்பது புரிந்தது.

"கீழே போடாதே" என்ற எச்சரிக்கை கண்களாலே. நானும் என்ன செய்ய என்று கேட்டேன்.

உடனே தன் அம்மா அருகிலிருந்த கவரை எடுத்து நீட்டினாள். அதில் ஏற்கெனவே 4-5 கப்புகளும், பிஸ்கட் கவர்களும் இருந்தன. வார்த்தைகள் தேவையில்லை அவள் செய்கைக்கு. எத்தனை பாடங்களை சொல்லாமல் சொல்லித் தருகிறாள்.

அள்ளி அணைத்தபடி "யாருடா உனக்கு இதெல்லாம் சொல்லித் தந்தது?" ஆனந்த ஆச்சரியத்தில் நான். அவள் முகத்தில் புன்னகை. அப்பாவையும் அம்மாவையும் பார்த்தாள். அப்பாவிற்கு சந்தோஷம். மெல்லத் தலையாட்டியபடி என் காதருகே வந்து "எங்க புவனா மிஸ்" என்று ரகசியம் பேசினாள்.

இதன் நடுவே, காட்பாடியருகே ஒரு சிறுவனிடம் சண்டையிட்டாளே அந்தக் குடும்பம் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கியது. அமுதா ஓடிச்சென்று அந்தப் பீப்பீயை அவனுக்குப் பரிசளித்து வந்தாள்.

"உனக்கு இதே தொழிலாப் போச்சு". அமுதாவின் அப்பா தன் பணத்தை இப்படியே விரயப்படுத்துகிறாள் என்று வருத்தப்பட்டார்.

"அங்கிள், நாம ஏதாச்சும் கேம் விளையாடலாமா?" என்றாள்.

நான் "இப்போ ஐந்து கண்ணாடிப் பொருள்களை சொல்லு பார்ப்போம்" என்றேன்.

"உங்க மூக்குக் கண்ணாடி" விழுந்து விழுந்து சிரித்தாள் கள்ளமில்லாமல். "ஜன்னல் கண்ணாடி" "கிஸான் பாட்டில்" "அப்புறம்..ம் ம்.. அதோ லைட் மேல கண்ணாடி" "அங்ங். அப்பா குடிப்பாரே அந்த old monk பாட்டில்.. .." நிசப்தம். எங்கள் உரையாடலை சுற்றி இருந்த அனைவரும் ரசித்துக் கொண்டிருக்க, அனைவருக்கும் ஆச்சர்யம்.

படால்..படால் என்று அமுதாவின் கன்னம் பதம் பார்க்கப்பட்டது. அவளைத் தன் பக்கம் இழுத்தார் அவள் அப்பா. "சார்.." என்று நான் தடுக்க..முறைத்தார்.

அமுதா அழுது அழுது தூங்கிவிட்டாள். கலகலவென இருந்த இடம் காலியானது போல இருந்தது.

கே.ஆர்.புரத்தில் வண்டி நின்றது. அந்தக் குடும்பம் இறங்கியது. இன்னமும் அம்மா தோள்மீது தூங்கியபடி அமுதா. பத்தடி நடந்த பின்னர், மெல்லக் கண்களைத் திறந்தவள் மெல்லிய சிரிப்பை என் மீது வீசிவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டாள்.

அந்தக் குட்டித் தோழியை இனி எப்போது காண்பேனோ என்ற ஏக்கம் மனதை நிறைத்தது.

-விழியன்

Thursday, April 20, 2006

கதை எண் 96 - தானத்தில் சிறந்தவர் கர்ணனே

ரொம்ப நாட்களாகவே பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.
அது, நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர்.

இருப்பினும் கர்ணனையே ஏன் எல்லாரும் தானம் செய்வதில் சிறந்தவன் என்று கூறுகின்றனர் என்பது தான் அது. இவர்கள் மனதில் உள்ள சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன் ஒரு நாள் பாண்டவர்களை அழைத்தார்.

தங்கமலை, வெள்ளி மலை என இரு மலைகளை உருவாக்கினார். பின் பாண்டவர்களை நோக்கி, "இங்கே பாருங்கள்! இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன்,'' என்று கூறினார்.

பீமனும், அர்ஜுனனும் மற்றவர்களும் அந்த இரு மலைகளில் இருந்து தங்கத்தையும், வெள்ளியையும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துத் தர தருமர் அதை உடனுக்கு உடன் நகர மக்களுக்குத் தானம் செய்தார். ஆனால், நகர மக்களில் பெரும் பகுதியினருக்கு அவ்வாறு தானம் செய்தும் தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லை. அதற்கு மாறாக அவ்விரு மலைகளும் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருந்தன.

மாலைப் பொழுது வந்ததும் இனி தங்களால் முடியாது என்பதை உணர்ந்த தருமர், "எங்களால் முடியாது கண்ணா!'' என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

உடனே கிருஷ்ணன் ஓர் ஆளை அனுப்பி கர்ணனை வரவழைத்தார்.

"கர்ணா! இதோ பார் இந்த இரண்டு மலைகளில் ஒரு மலை தங்க மலை. மற்றொன்று வெள்ளி மலை; இதை நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும். பொழுது சாய இன்னும் ஒரு நாழிகைப் பொழுதே உள்ளது. உன்னால் முடியுமா? யோசித்துச் சொல்,'' என்று கூறினார்.

உடனே கர்ணன், "இதில் யோசிக்க என்ன இருக்கிறது இப்போதே செய்து காட்டுகிறேன்,'' என்று கூறி அங்கிருந்த இருவரை அழைத்து, "இதோ பாருங்கள்! நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்,'' என்று கூறி தனது தர்மத்தை முடித்து விட்டுக் கிளம்பினான்.

பாண்டவர்கள் அசந்து போயினர். அவர்களை ஒரு அர்த்தப் பார்வையுடன் பார்த்து சிரித்தார் கிருஷ்ணன். தர்மருக்கும் பரந்த மனசு தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவரைக் காட்டிலும் தான தருமம் செய்வதில் பரந்த மனசு உடையவன் கர்ணனே என்பதை சொல்லாமல் பாண்டவர்களுக்கு உணர்த்திவிட்டார் கிருஷ்ணன்.

Monday, April 17, 2006

கதை எண் 95 - புத்தி பலம்

புத்தூர் என்ற ஊரில் இளங்கோ என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் உடல் வலிமையே இல்லாதவன். ஆள் பார்ப்பதற்கு சுமாரான உடல் கட்டு கொண்டவனாக இருந்தாலும், அவனால் கடினமான வேலைகள் எதையும் செய்ய முடியாது. ஆனால், பிறரது பலத்தை தனக்குப் பயன்படுத்தி காரியம் சாதித்துக் கொள்வதில் அவனை மிஞ்ச யாராலும் முடியாது.

இளங்கோவுக்கு மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்களும் இளங்கோவை போல் உடல் வலிமையற்றவர்கள் என்று நினைத்து விடக்கூடாது. அவர்கள் மிகவும் பலசாலி.

"தினமும் உடற்பயிற்சி செய்து உடலை பலப்படுத்தி என்ன பிரயோஜனம்? மூளையை பலப்படுத்துங்கள். அது தான் வாழ்க்கைக்கு உதவும்!'' என்று சொல்லிச் சிரிப்பான்.

அதற்கு அந்த மூவரும், "இளங்கோ! உடலை பலப்படுத்தினால் போதும், மூளை தானே பலப்பட்டு விடும். மூளை வலிமையை விட உடல் வலிமையால் உலகத்தில் நிறைய சாதிக்க முடியும். ஹூம்... நோஞ்சான் பயலான உனக்கு உடலைப் பற்றி என்ன தெரியும்!'' என்று சொல்லி சிரிப்பர்.

இப்படியாக அவர்கள் நல்ல நண்பர்களாகவே இருந்து கொண்டிருந்தனர்.

ஒரு நாள் இளங்கோ தனது மளிகைக் கடைக்குத் தேவையான சாமான்களை சந்தைக்குச் சென்று வாங்கி மூட்டை மூட்டையாகக் கட்டி சிறு வண்டியில் வைத்து மிகவும் சிரமத்துடன் இழுத்து வந்து கொண்டிருந்தான்.

வழியில் ஒரு பெரிய மேடு குறுக்கிட்டது. அவன் உடலில் பலம் இல்லாததால் அந்த மேட்டின் மேல் சரக்கு வண்டியை இழுக்க முடியாமல் மிகவும் திணறினான். யாராவது ஒருவர் உதவிக்கு வந்தால் வண்டியை எளிதாக மேட்டின் மேல் ஏற்றி விடலாம் என்று நினைத்த அவன், வண்டியை நிறுத்தி விட்டு யாராவது வருகிறார்களா என்று மேட்டின் மீது ஏறி நின்று பார்த்தான்.

அப்பொழுது—
எதிர் திசையில் இருந்து அவனது மூன்று பலசாலி நண்பர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த இளங்கோவுக்கு ஒரு யோசனை தோன்றியது.

"விடுவிடு'வென்று கீழே இறங்கி, தன்னிடம் இருந்த கயிற்றின் ஒரு முனையை வண்டியில் கட்டினான். கயிற்றின் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு மறுபடியும் மேட்டிற்கு ஓடி வந்தான்.

அதற்குள் நண்பர்கள் அவனை நெருங்கி வந்து விட்டனர். உடனே இளங்கோ கயிற்றின் முனையைப் பிடித்தபடியே அவர்களை நெருங்கினான்.

"எனதருமை நண்பர்களே! உங்களுக்கும் எனக்கும் ஒரு போட்டி!'' என்றான் இளங்கோ.

"என்ன போட்டி நோஞ்சான்?'' என்று கேட்டனர்.

"உங்களுக்கும், எனக்கும் கயிறு இழுக்கும் போட்டி. நீங்கள் மூன்று பேரும் இந்த முனையைப் பிடித்துக் கொண்டு இழுங்கள். நான் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு இழுக்கிறேன். யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம்!'' என்றான் இளங்கோ.

அதைக் கேட்டு அந்த மூன்று பலசாலி நண்பர்களும் "ஹா... ஹா... ஹா...!'' என்று பலமான சிரிப்புச் சிரித்தனர்.

"நோஞ்சான் பயலான உனக்கும், பலசாலிகளான எங்களுக்கும் கயிறு இழுக்கும் போட்டியா? வெளியே சொன்னால் எங்களுக்குத்தான் அவமானம். போய் வேறு ஏதாவது வேலையிருந்தால் பார்!'' என்றனர் அவர்கள்.

"இதோ பாருங்கள். ஆளைப் பார்த்து எடை போடாதீர்கள். எனக்குள் இருக்கும் பலம் உங்களுக்குத் தெரியாது. நீங்கள் உண்மையான பலசாலிகளாக இருந்தால் என்னோடு போட்டியிடுவீர்கள். நீங்களோ போலி. பலசாலிகள் போல வேஷம் போடுகிறீர்கள்!'' என்று அவர்களைச் சீண்டிவிட்டான்.

"சுண்டைக்காய் பயலே! எங்கள் பலத்தையா போலி என்றாய். உனக்குப் பாடம் கற்பித்தால்தான் புத்தி வரும். பிடி மறுமுனையை ஒரே ஒரு இழுதான். நீ எங்கோ பறந்து சென்று மண்ணைக் கவ்வப் போகிறாய்!'' என்று சொல்லிவிட்டு கயிற்றின் ஒரு முனையைப் பிடித்தனர்.

இளங்கோ மேடு ஏறிப் போய் மறுபடியும் இறக்கத்தில் இறங்கி வண்டியில் கட்டப்பட்டிருந்த கயிறை இறுக்கமாகப் பிடித்தான்.

"ம்! இழுக்கலாம்!'' என்று கத்தினான்.

அந்த மூன்று நண்பர்களும் இளங்கோதான் கயிறு இழுப்பதாய் நினைத்துக் கொண்டு மிகச் சாதாரணமாய் இழுத்தனர். அவர்கள் நினைத்தது போல் அது அவ்வளவு சாதாரணமாய் இழுபடவில்லை.

திடீரென்று "இளங்கோவுக்கு பலம் இருக்கிறதோ' என்ற சந்தேகம் அவர்களுக்கு உண்டாயிற்று. ஆகவே, கயிற்றை இறுக்கமாகப் பிடித்து இழுத்தனர். ஆனால், இழுப்பது மிகவும் கடினமாக இருந்தது.

மூன்று பேர் முகத்திலும் திகில் பரவியது. ஒரு நோஞ்சான் பயலிடம் தோற்றுப் போனால் அது எத்தனை அவமானம் என்று நினைத்த அவர்கள், தங்கள் பலங் கொண்ட மட்டும் கயிறை இழுத்தனர்.

எதிர்ப்பக்கமிருந்த இளங்கோ, தான் இழுப்பதை மெல்ல மெல்ல விட்டுக் கொண்டே இருந்தான்.

வண்டி இப்பொழுது மெல்ல மேட்டில் ஏறத் துவங்கியது.

இளங்கோ தான் மெல்ல பலத்தை இழந்து மேலே வருகிறான் என்று நினைத்த அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகியது. "இந்த நோஞ்சான் பயலுக்கு ஏது இவ்வளவு பலம்' என்று நினைத்தவாறே மீண்டும் கயிறை வேகமாக இழுத்தனர்.

கடைசி நேர இழுவையில் சரக்கு வண்டி மேட்டின் மேலே ஏறிவிட்டது. அதைப் பார்த்துக் கொண்டு சிரித்தபடி வந்தான் இளங்கோ.

அவர்களுக்கு அப்பொழுதுதான் விஷயமே புரிந்தது. இவ்வளவு நேரம் நாம் இழுத்தது இளங்கோவின் வண்டியை என்று.

மூவர் முகத்திலும் அசடு வழிந்தது. இறக்கத்தில் இறங்கி அவர்களிடம் வந்த இளங்கோ, ""மூளை பலம் என்பது இது தான்,'' என்று சொல்லி நமுட்டு சிரிப்பு சிரித்துவிட்டு, தனது வண்டியை சமதளத்தில் மிகவும் லாவகமாக இழுத்துக் கொண்டு போனான்.