சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Thursday, September 22, 2005

கதை எண் 36 - துணிச்சலான சிறுவன்



விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது பழமொழி.

சின்ன வயதிலேயே அந்தச் சிறுவன் மிகவும் துரு துருவென்று இருப்பான்.ஒருநாள் அவனும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு மரத்திலே ஏறி, மரக்கிளையில் இருந்து தலை கீழாகத் தொங்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

விபரீதமான இந்த விளையாட்டைப் பார்த்த அந்தப் பையனுடைய தாத்தா, பையன்கள் கீழே விழுந்தால் உயிருக்கு ஆபத்தே என்று நினைத்தார். உடனே அனைவரும் கீழிறங்கி வாருங்கள் என்று சப்தம் போட்டார்.

அவர்கள் வந்ததும், " இந்த மரத்திலே ஒரு பேய் இருக்கிறது. இப்படி மரத்தில் ஏறி விளையாடினால் அது உங்கள் அடித்துக் கொன்றுவிடும். அதனால் மரத்தில் ஏறாமல் கீழேயே விளையாடுங்கள்" என்று பயமுறுத்தினார்.

இதைக் கேட்டு எல்லா சிறுவர்களும் பயந்துவிட்டார்கள். நமது சுட்டிப் பையனும் சரி சரி என்று தலையை ஆட்டினான். ஆனால், அவர் அந்தப் பக்கம் போனதும், மறுபடியும் மரத்திலே ஏற ஆரம்பித்தான்.

அவனது நண்பர்கள், "ஐயையோ...ஏறாதே....பேய் உன்னை அடித்துவிடும்" என்று கத்தினார்கள். " இந்த மரத்திலே பேய் இருக்கிறதாக தாத்தா சொன்னார்...சரிதான். ஆனாலப்படிப் பேய் இருந்திருந்தால் இன்னேரத்துக்கு அது நம்மை அடித்துக் கொன்றிருக்கும். தாத்தா சும்மா நம்மைப் பயமுறுத்தியுள்ளார்." என்று சிறுவர்களுக்குப் பதில் கூறினான்.

அதற்கு மற்ற சிறுவர்கள், " அது சரி...உன் தாத்தா சொன்னபோது...சரி என்று தலையை ஆட்டினாயே...அது ஏன்?" என்று கேட்டதற்கு, "எதிர்த்துப் பேசினால் அவர் மனது கஷ்டப்படுமே. அதனால் தான் அவரை சமாதானப்படுத்த சரி என்றேன்".


குழந்தைகளா, மரத்தில் ஏறிய அந்தப் பையன் யார் தெரியுமா?.....

எண்ணற்ற இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் சுவாமி விவேகானந்தர்தான், அந்தச் சிறுவன். அதோ படத்தில் இருக்கிறார் தானே, அவரே தான். அவரைப் பற்றி நிறைய கதைகல் இருக்கின்றன, விரைவில் சொல்கிறேன்.

4 மறுமொழிகள்:

At 2:53 PM, September 22, 2005, Blogger தகடூர் கோபி(Gopi) மொழிந்தது...

பரஞ்சோதி,

http://dinamalar.com/2005sep21/flash.asp

உங்கள் முயற்சியை தினமலர் மற்றும் ஒரு பெரிய வாசிப்பு வட்டத்துக்கு அறிமுகம் செய்துள்ளது.

வாழ்த்துக்கள்!!

 
At 12:04 AM, September 24, 2005, Blogger சிவா மொழிந்தது...

நல்லா கதை சொல்கிறீர்கள். தொடரட்டும் உங்கள் சேவை. இனி நான் தொடர்ந்து உங்கள் கதைகளை பார்க்கிறேன். நன்றி.

 
At 7:16 AM, September 24, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

மிக்க நன்றி கோபி.

சிறுவர் பூங்கா தொடங்கியவுடன் வாழ்த்து கூறியவராச்சே நீங்க.

என்னுடைய நண்பர்களின் அம்மாக்கள் சொன்னாங்க "யப்பா, நீ சிறுவர் பூங்காவை தொடங்கின நேரம் கல்யாணமே வேண்டாம் என்ற என் பையன் உடனே கல்யாணம் செய்து வைங்க என்று சொல்லிட்டான்" என்றார்கள்.

(புது மாப்பிள்ளையான உங்களுக்கும், ஜென் கதை புகழ் கங்காவுக்கும் என் வாழ்த்துகள்)

 
At 7:19 AM, September 24, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

நன்றி சிவா,

தமிழ்மணத்தில் புதியவர்கள் வரிசையில் உங்கள் பெயர் பார்த்தேன், வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று உங்கள் தளத்திற்கு வருகை தந்தேன். நன்றாக அமைந்துள்ளது, பாராட்டுகள்.

 

Post a Comment

<<=முகப்பு