சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Tuesday, September 13, 2005

கதை எண் : 31 - ஒற்றுமை

ஒரு வயல் வரப்பில் மூன்று கொக்குகள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்தன. எங்கு சென்றாலும், ஒற்றுமையுடன் சென்றன. இரை தேடச் சென்றாலும் கிடைத்த இரையை கூடி பகிர்ந்து உணவு உண்டு வாழ்ந்து வந்தன.

இந்த ஒற்றுமை மற்ற விலங்கினத்துக்கும், பறவைகளுக்கும் பொறாமையாக கூட இருந்தது.


நரி ஒன்று, அந்த மூன்று கொக்குகளையும் பிரித்தே தீருவேன் என்று சபதமிட்டபடி களம் இறங்கியது.

ஒரு நாள் மூன்று கொக்குகளும் வயல் வரப்பில் இரை தேடிக்கொண்டிருந்தன. நரி தன் சூழ்ச்சியை பயன்படுத்த திட்டமிட்டது.

அதன்படி முதலில் மூன்று கொக்கு களிடமும் நட்பை ஏற்படுத்திக் கொண்டது. சிறிது நாட்கள் சென்ற பிறகு, தனிமையில் இருந்த ஒரு கொக்கிடம் சென்றது. "கொக்கு நண்பரே! இவ்வளவு அழகாக இருக்கும் நீங்கள், அவலட்சணத்தின் ஒட்டு மொத்த உருவமாக திகழும் உங்கள் நண்பர் கொக்குகளுடன் எப்படி நட்பு பாராட்ட முடிகிறது? உங்கள் அழகுக்கும் அந்தஸ்துக்கும் இது ஏற்ற காரியமா?" கேட்டது.

இதனை கேட்ட கொக்குவிற்கு நரி சொன்னது உண்மையோ என்ற சந்தேகம் ஏற்பட, "என்ன செய்வது! எல்லாம் என் நேரம்" என்றது. வந்த காரியம் முடிந்த திருப்தியில் உடனே நரி அவ்விடம் விட்டு சென்றது.

நரி இப்போது இரண்டாவது கொக்குவிடம் சென்றது. "கொக்கு நண்பரே எப்படி உள்ளீர்?" வினாவியது நரி.

"நலம் நரி நண்பரே", என்று பதிலுக்கு கூறியது கொக்கு. இரண்டாவது கொக்குவிடம் இப்போது தன் சூழ்ச்சியை தொடங்கியது நரி. "கொக்கு நண்பரே! நீர் எவ்வளவு அறிவு உடையவர். எந்த குளத்தில் எவ்வளவு மீன்கள் உள்ளன என்பதை உம் அறிவால் கண்டுபிடித்து விடக் கூடியவர் நீர். அவ்வளவு அறிவு உடைய நீர் ஒன்றும் தெரியாத உங்கள் நண்பர் கொக்குகளுடன் நட்பு கொள்வதா?" என்று சூழ்ச்சியை கிளப்பிவிட்டது.

நரி கூறிய வார்த்தைகளால், இரண்டாவது கொக்குவிற்குள் சிந்தனை எட்டிப்பார்க்க நரி தான் வந்த வேலை முடிந்த திருப்தியில் கிளம்பிப் போனது.

இதோடு நில்லாமல் மூன்றாவது கொக்குவிடம் சென்றது நரி. வழியில் மூன்றாவது கொக்கிடம், "கொக்கு நண்பரே! நீங்கள் எவ்வளவு வீரம் படைத்தவர். இரை பிடிப்பதிலும்! பறப்பதிலும், எவ்வளவு வீரம் படைத்தவர். இவ்வளவு வீரம் உடைய ஒன்றுக்கும் உதவாத உமது மற்ற 2 நண்பர் கொக்குகளுடன் சுற்றித் திரிந்ததில் உமது வீரமே உமக்கு மறந்திருக்குமே" என்று கொக்கிடம் கேட்டது.

நரியின் சூழ்ச்சியால் அந்த மூன்று கொக்கு களுக்குள் நாளடைவில் பகைமையும், யார் பெரியவன் என்ற சண்டையும் ஏற்பட்டது. ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டுக் கொண்டன. இதனால் ஒற்றுமையுடன் இருந்த மூன்று கொக்குகள் தனித்தனியே பிரிந்தன.

நடந்ததை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்த கிளி ஒன்று, மூன்று கொக்குகளையும் சந்தித்து நரியின் சதித் திட்டத்தை சொல்லி முடித்தது. `அடப்பாவி!' எங்கள் ஒற்றுமைக்கு உலை வைத்து விட்டானே! நல்ல நட்பை இழந்தோமே! என்று வருந்தின.

"முன்பின் தெரியாதவர் வந்து திடீரென தேவையில்லாமல் புகழ்ந்தால் அதற்கு மயங்கி விடக்கூடாது. அப்படி மயங்கும் பலவீனம் ஒருவருக்குள் இருந்தால் அவரை மற்றவர்கள் விரைவில் தங்கள் வசப்படுத்திவிட முடியும். உங்கள் மூவர் விஷயத்தில் அதுதான் நடந்தது. இனியாவது இப்படி திடீர் புகழ்ச்சிக்கு மயங்காதீர்கள்" என்று அறிவுறுத்தியது கிளி.

அதற்கு பின் மூன்று கொக்குகளும் மறுபடியும் நட்புடன் இருந்து வந்தன.

0 மறுமொழிகள்:

Post a Comment

<<=முகப்பு