சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Tuesday, August 02, 2005

கதை எண் 25 - புதிர்கதை - ஏன் மணக்கவில்லை

Image hosted by Photobucket.com


சிம்மபுரத்து மன்னன் பிறைசூடன் பராக்கிரமசாலி; நியாயம் தவறாதவன். அவன் மனைவி எழில்கொடி. அவர்களுக்குப் பிறந்தது ஒரே பெண் குழந்தை. அவளுக்கு பவழா என்று பெயரிட்டு செல்லமாகவும் ஆண்பிள்ளையைப் போலவும் வளர்த்து வந்தனர்.

பவழா கல்வியோடு அரசகுமாரர்களுக்கான வில், வாட் போர் ஆகியவற்றில் நல்ல தேர்ச்சி பெற்றாள். அவள் வளர்ந்து திருமண வயதை அடைந்த போது அவளது பெற்றோர் அவளுக்கு விவாகம் செய்து வைக்க நினைத்தனர்.

அவர்கள் அதுபற்றி மகளிடம் கூறவே, ""நான் விவாகம் செய்து கொள்வதானால் என்னை எந்த அரசகுமாரன் வாட்போரில் தோற்கடிக்கிறானோ அவனைத் தான் மணப்பேன்,'' என்றாள்.

அந்த அறிவிப்பைக் கேட்டதும் பல அரசகுமாரர்கள் அவளை மணக்க வந்தனர். அவள் அந்நாட்டு மன்னனின் ஒரே மகளாதலால் அவளை மணந்து கொண்டால் அந்த நாட்டிற்கும் தாம் அரசராகிவிடலாமே என்ற ஆசையில்தான் வந்தனர். மேலும் அவள் பெண்தானே மிக எளிதில் வாட்போரில் அவளைத் தோற்கடித்துவிடலாம் எனவும் நினைத்து விட்டனர்.


வாட்போர் புரிய அவர்கள் களத்தில் இறங்கியபோது தான் பவழாவை வெல்வது எளிதல்ல என்பது அவர்களுக்குத் தெரியவந்தது.

தினமும் ஒரு அரசகுமாரனுடன் வாட்போர் என அவள் ஏற்பாடு செய்திருந்தாள். அவளுடன் வாட்போர் புரிந்த அரசகுமாரர்கள் எல்லாருமே தோற்றுப் போயினர்.

இந்தப் போட்டிகள் நடந்து கொண்டிருந்த போது சந்தனபுரி இளவரசன் சுவரூபன் மாறுவேடம் பூண்டு வேடிக்கை பார்க்கும் மக்களோடு சேர்ந்து பவழாவின் சுற்றும் முறைகளையும் தாக்குதல்களுக்குக் கையாளும் வழி முறைகளையும் கூர்ந்து கவனிக்கலானான்.

சில சமயங்களில் பவழாவின் அபார வாள்வீச்சைக் கண்டு சபாஷ் என்று கத்தினான். அப்போதெல்லாம் பவழா திரும்பிப் பார்த்து அப்படிக் கத்திய ரசிகன் யார் எனவும் பார்த்தாள்.

பவழாவின் வாட்போர் முறைகளை எல்லாம் நன்கு பார்த்த பிறகு அரசகுமாரனாக அவளுடன் போட்டியிட வந்தான். இருவருக்கும் வாட்போர் நடக்க நாளும் குறிப்பிடப்பட்டது.

போட்டி மிகவும் கடுமையாகவே இருந்தது. அப்போது தன்னை எதிர்ப்பவன் மிகவும் திறமை மிக்கவன் எனத் தெரிந்து கொண்டாள் பவழா.

அவனைத் தோற்கடிக்கத் தான் அதுவரை பயன்படுத்தாத ஒரு முறையை அவள் கையாள நினைத்த போது, வேறொரு முறையைக் கையாண்டு அவளது வாளைத் தட்டிவிட்டான் சுவரூபன். அது அவளது பிடியிலிருந்து நழுவி சற்று துõரத்தில் போய் விழுந்தது. பவழா தோற்றுப் போனாள்.

அப்போது அவள் அவனை கூர்ந்து கவனித்து, ""நீ இதற்கு முன் நான் மற்ற அரசகுமாரர்களோடு வாட்போர் புரிந்த போது மக்களிடையே மாறுவேடத்தில் பார்வையாளனாக அமர்ந்து வேடிக்கை பார்த்தவன்தானே. அப்போது சில சமயங்கள் சபாஷ் என்று கத்தி எனக்குப் பாராட்டுதல்களைத் தெரிவித்தவனும் நீதானே,'' என்றாள்.

""ஆமாம்!'' என்றான். அதைக் கேட்டதும் பவழா அவன் வெற்றி பெற்றதன் காரணம் தெரிந்து விட்டது.

""நான் உன்னை மணப்பது முறையல்ல. அதற்குக் காரணம் என்ன என்று நீயே யூகித்துக் கொள்,'' என்றாள்.

""நீ கூறுவது சரியே. நான் உன்னை மணப்பதும் முறையல்லதான்,'' என்று கூறி அவளை அவன் வணங்கிவிட்டு தன் நாட்டிற்கு திரும்பிச் சென்று விட்டான்.

தன் மகள் கூறியதைக் கேட்டுத் திகைத்துப் போயினர் பெற்றோர்.

உங்களுக்கான கேள்வி? ஏன் பவழா அவனை மணக்கவில்லை? காரணம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

8 மறுமொழிகள்:

At 8:28 AM, August 02, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

வாங்க வாங்க பொதிகை நாடன் அவர்களே!

மன்னிக்கவும், தவறு நிகழ்ந்து விட்டது, நான் சரி செய்து விட்டேன்.

உங்களுக்கு காரணம் தெரிந்தும் பதில் சொல்லாமல் சென்று விட்டீங்க.

 
At 12:32 PM, August 02, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

பொதிகை நாடன் அவர்களே!

மிக அருமையாக, பொருத்தமான விடையை சொல்லியிருக்கீங்க. பாராட்டுகள்.

இந்த புதிர் துரோணர், ஏகலைவன் கதையை போன்றது.

 
At 8:59 PM, August 02, 2005, Blogger vin மொழிந்தது...

என்னங்க சொல்றீங்க? கணவன் மனைவிக்கிட்ட இருந்து கத்துக்க கூடாதுன்னு பெரியவங்களுக்கு ஒரு தப்பான கருத்து இருக்கிற மாதிரி தோணுது :-)

btw உங்களது வலைத்தளம் பார்த்தேன். எளிய தமிழில் சிறுவர் சிறுமியருக்கு பல நல்ல கதைகள். பாராட்டுகள்.

-Vinodh
http://visai.blogspot.com

 
At 10:39 PM, August 02, 2005, Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady மொழிந்தது...

பரஞ்சோதி,
குரு சிஷ்யன் உறவாகுவதால் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வில்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், மற்றொரு காரணம் அவளுடைய பலம், பலவீனங்களை முன்பே அருகிலிருந்து பார்த்து விட்டு சண்டையிட்டு ஜெயித்ததால், நேர்மையான முறையில் தன்னுடைய வெற்றி அமையவில்லை என்பதனாலேயே அவன் இளவரசியை மணந்து கொள்ள வில்லை.

வினோத்
திருமணம் ஆனபின் மனைவியிடம் இருந்து கற்பதில் தவறில்லை. திருமணம் செய்யவதற்கு குறுக்கு வழியில் முயல்வது சிறந்த ஆண்மகனுக்கு நாளைய அரசனுக்கு நல்லதாகத் தோன்றவில்லை.

 
At 5:31 AM, August 03, 2005, Blogger யாத்ரீகன் மொழிந்தது...

இதை குறுக்கு வழி என்று ஏன் கருத வேண்டும்.. ?? கவனித்து உள்வாங்கிக்கொண்டு தானே சென்றான்...

 
At 6:29 AM, August 03, 2005, Blogger vin மொழிந்தது...

"திருமணம் ஆனபின் மனைவியிடம் இருந்து கற்பதில் தவறில்லை." திருமணத்திற்கு முன் வருங்கால மனைவியிடம் கற்றுக் கொள்ளக் கூடாதா? :-)

நீங்க குறுக்கு வழின்னு சொன்னது வேணும்னா ஒகே, அது கூட ராஜ தந்திரம்னு சொல்லலாம் :-)

-Vinodh
http://visai.blogspot.com

 
At 8:15 AM, August 03, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

நன்றி வினோத், செந்தில், கங்கா அவர்களே!

இந்த கதையானது குழந்தைகளின் பார்வையில் சுவரூபன், இளவரசியை குருவாகவே பார்க்க வேண்டும்.

குரு என்றால் தனி மரியாதை அதுவும் இறைவனுக்கு இணையாக பார்க்க வேண்டும். தமிழிலில் சுந்தரகாண்டம் என்ற சினிமாவில் கூட பாக்யராஜ் குரு, சிஷ்யை காதல், திருமணம் தவறு என்று சொல்லியிருப்பார்.

அதே பெரியவர்களுக்கான கதையாக பார்த்தால் கண்டிப்பாக இளவரசியை அவன் திருமணம் செய்யலாம். திருமணமாகிய ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் என்றால் அது மனைவியை சொல்லலாம்.

என்னுடைய வெற்றிக்கு பின் என் மனைவி இருக்கிறார், அவர் வழியாக நிறைய கற்றேன் என்பதை பெருமையாக சொல்லவும் தயங்க மாட்டேன்.

இப்படிப்பட்ட கதையும் உண்டு.

ஒருவர் மிகப்பெரிய ஞானி, அவரைச் சுற்றி அவரது சிஷ்யக்கோடிகள் சூழ்ந்து பேசும் போது,

ஒருவர் கேட்டார் "அய்யா! நீங்க எப்போ சாமியார் ஆக வேண்டும் என்று தீர்மானம் செய்தீங்க"

அவர் "அதுவா, ஞானம் வந்ததும்"

சிஷ்யன் "அய்யா, ஞானம் வந்தது என்று சொல்லுறீங்க, எப்போ எங்கே ஞானம் வந்தது"

அவர் "நான் திருமணம் செய்ததும் ஞானம் வந்தது, என் மனைவி பெயர் ஞானம்".

சிஷ்யர்கள்: ????###@@@@

 
At 4:44 PM, August 03, 2005, Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady மொழிந்தது...

ஹா ஹா :-) விவாதம் பலமாக போய்க் கொண்டிருக்கிறது.
பரஞ்சோதி உங்கள் நகைச்சுவையும் நன்றாக உள்ளது.

 

Post a Comment

<<=முகப்பு