சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Tuesday, November 29, 2005

கதை எண் 65 - பெரியவங்க சொன்னா கேட்கணும்

அந்தியூர் என்ற காட்டில் புறாக்கள் கூட்டமாக சேர்ந்து ஒரு ஆலமரத்தில் வாழ்ந்து வந்தன, அவற்றில் ஒரு வயதான புறாவும் உண்டு, புறாக்கள் எல்லாம் இரை தேடி வந்து மரத்தில் அமரும். அப்போ வயதான புறா தன் அனுபவங்களை கூறும், அப்போ நிறைய புறாக்கள் பழங்கதைகள் சொல்லி எங்களுக்கு ஏன் வீணாக அறிவுரை சொல்லுறீங்க, நாங்களே யோசிக்கும் அளவுக்கு எங்களுக்கும் அறிவு இருக்குது என்று உதாசினப்படுத்துவார்கள். சிலருக்கு உண்மையிலேயே ஆபத்து வந்தால் அப்போ அந்த வயதான புறா தான் நல்ல வழி காட்டும்.

ஒரு நாள் அனைத்து புறாக்களும் சேர்ந்து உணவு தேடி சென்றன. அப்போ ஓரிடத்தில் பறவைகளைப் பிடிக்க வேடன் ஒருவன் வலை விரித்திருந்தான், அதன் அடியில் பெரிய பெரிய நெல்மணிகளை கொட்டியிருந்தான்.

அப்போ புறாக்கள் அனைத்தும் அந்த நெல்மணிகளை சாப்பிட திட்டமிட்டன, ஆனால் வயதான புறா அது வேடம் விரித்த வலை, நாம் போய் நெல்லை சாப்பிட்டால் மாட்டிக் கொள்வோம், எனவே வேற இடத்தில் இரைத் தேடலாம் என்றது, ஆனால் மற்றவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. வலையில் மாட்டாமல் நெல்மணிகளை சாப்பிட போகிறோம் என்று கூறி வலையின் மீது சாமர்த்தியமாக அமர்ந்து சாப்பிட்டன, ஒரு புறாவும் வலையில் மாட்டவில்லை, அப்போ வயதான புறாவைப் பார்த்து கேலி செய்தன மற்ற புறாக்கள்.

திடிரென்று ஒரு குண்டு புறா நிலைத் தடுமாறி ஒரு புறா மேல் விழ, அனைத்தும் சரிந்து நிலை குலைய, அவற்றின் கால்கள் வலையின் பின்னிக் கொண்டன, அவ்வளவு தான் அனைத்து புறாக்களும் வலையில் மாட்டிக் கொண்டன.

அவ்வளவு தான் அனைத்தும் என்ன என்ன முயற்சியோ செய்தன, ஆனால் ஒன்றும் முடியவில்லை. வலையானது தரையோடு சேர்த்து அடிக்கப்படிருந்தது.

உடனே அனைத்துப் புறாக்களும் வயதான புறாவை பார்த்து மன்னிப்பு கேட்டு, தங்களை காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என்றன.

வயதான புறா “என் ஒருவனால் உங்கள் அனைவரையும் விடுவிக்க முடியாது, அதற்கான சக்தியும் என்னிடம் இல்லை, ஆனால் என்னுடைய வயதான அனுபவத்தால் கிடைத்ததை வைத்து ஒரு வழி சொல்கிறேன், அதன்படி நடந்தால் தப்பிக்கலாம் என்றது.

மற்ற புறாக்கள் கண்டிப்பாக சொல்லுங்க, இதுவரை உங்கள் அனுபவங்களை உதாசினப்படுத்தியதற்கு மன்னியுங்க என்றன.

வயதான புறா “இன்னும் கொஞ்ச நேரத்தில் வேடன் வருவான், அவன் வரும் போது நீங்க யாரும் உயிரோடு இருப்பது போல் காட்டிக் கொள்ளக்கூடாது, மரணம் அடைந்த மாதிரி விழுந்து கிடக்க வேண்டும்.”

“அவனும் செத்துப் போன புறாக்கள் தானே என்று உங்களை தரையில் போடுவான், கடைசி புறாவை போடும் வரை அமைதி காக்க வேண்டும், கடைசி புறாவைப் போட்டதும், நான் வேகமாக வந்து வேடனை கொத்துவேன், அவன் நிலை குலைந்தவுடன் நீங்க அனைவரும் உடனே பறந்து தப்பிவிடுங்க”

அனைத்து புறாக்களும் வயதான புறாவை வணங்கி, அது சொன்னது போல் செத்துப் போனது போல் நடித்தன, அங்கே வந்த வேடனும் அனைத்தும் செத்து கிடப்பதைக் கண்டு, தண்ணீர் குடிக்காததால் ஒருவேளை அனைத்தும் இறந்து போயிருக்கும் என்று நினைத்து, ஒவ்வொரு புறாவையும் வலையில் விடுவித்து கீழே போட்டான். கடைசி புறாவையும் போட்டு நிமிர்ந்து நிற்கவும், நம்ம வயதான புறா வேகமாக பறந்து வந்து வேடனின் தலையில் கொத்தியது, திடிரென்று நடந்த இந்த சம்பவத்தால் வேடன் பயந்து கண்களை மூடிக் கொண்டு, தலையின் மேல் கைகளை வீசினான்.

அவ்வளவு தான் அந்த சந்தர்ப்பத்தில் அனைத்து புறாக்களும் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்பது போல் தப்பி பறந்தோடின.

பின்னர் அனைத்து புறாக்களும் ஆலமரத்தில் கூடி, வயதான புறாவை போற்றின, பெரியவங்க சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் இருக்கும், அவர்கள் சொல்வதை கேட்டு நடந்தால் துன்பமே வராது என்பதை புரிந்துக் கொண்டோம், இனிமேல் உங்கள் அறிவுரைப் படியே நடப்போம் என்று உறுதி கூறின. தினமும் வயதான புறாவின் அறிவுரைகள் கேட்டு நடந்து,. ஆபத்தில்லாமல் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்.

4 மறுமொழிகள்:

At 11:42 AM, November 29, 2005, Blogger ஜயராமன் மொழிந்தது...

தங்கள் கதைகள் மிகவும் அருமை.

தேர்ந்தெடுத்த முத்தாய்ப்பான கதைகள். குழந்தைகளின் கற்பனை வளத்திற்கு மிக எடுப்பான தீனி. நற்பண்புகளை மனதில் ஆழமிடும் தரமான கதைகள்.

மின்வலைகளில் மிக தேர்ந்த போற்றுதற்குரிய முயற்சி.

தினசரி படிக்கிறேன்.

வாழ்த்துக்கள்.

ஜயராமன்

 
At 12:22 AM, November 30, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

ஜயராமன் அவர்களுக்கு எனது நன்றிகள்.

உங்களது வாழ்த்துகள் என்னை ஊக்கப்படுத்துகிறது.

நிரஞ்சன் எப்படி இருக்கிறார்?

 
At 5:11 PM, December 08, 2005, Blogger கீதா மொழிந்தது...

அட! இந்தக் கதையும் நான் படிச்சிருக்கேன். நீங்க எங்கருந்து எடுத்திங்க.

 
At 8:16 PM, December 08, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

சகோதரி கீதா,

நான் பல ஆண்டுகளாக எங்கே சிறுவர் கதைகள் படித்தாலும் உடனே சேமித்து வருகிறேன், அதில் அப்போ அப்போ எடுத்து படித்து, கொஞ்சம் மாற்றி இங்கே கொடுக்கிறேன்.

 

Post a Comment

<<=முகப்பு