சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Tuesday, January 31, 2006

கதை எண் 77 - எத்தனுக்கு எத்தன்

அப்புவிளை என்ற ஊரில் சிவா என்ற இளைஞர் இருந்தார். அவர் ரொம்பவும் அமைதியானவர், புத்திசாலி. ஒரு நாள் அவர்கள் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது அவரின் அப்பா, சின்னவயதில் அவர்களின் குடும்பம் பக்கத்து ஊரில் இருந்ததாகவும், அப்போ அந்த ஊரின் ஜமிந்தார் தன்னுடைய நண்பர் என்றும், தன்னை ஏமாற்றி அந்த ஜமிந்தார் அனைத்து சொத்துக்களையும், நகைகளையும் வாங்கிவிட்டதாகவும் சொன்னார்.

உடனே சிவா “ஏன் அப்பா, நீங்க ஏமாந்த சொத்துக்களை மீண்டும் வாங்க முயற்சிக்கவில்லையா?”

“ஜமிந்தார் பொல்லாதவர், மேலும் அவரிடம் நிறைய ஆட்கள் இருக்கிறார்கள், ஊர் மக்கள் அவர் என்ன சொன்னாலும் நம்புகிறார், அதான் ஏன் வீண்வம்பு என்று விட்டுவிட்டேன், இந்த ஊர் வந்து கஷ்டப்பட்டு சம்பாதித்து, இன்று நல்ல நிலையில் இருக்கிறோம்” என்றார்.

அதை கேட்டதும் சிவா ஒன்றும் சொல்லவில்லை, மனதில் ஏதோ கணக்கு போட்டார்.

கொஞ்ச நாளில் சிவா, மாறுவேடமிட்டு பக்கத்து ஊருக்கு சென்றார், செல்லும் முன்பு ஜமிந்தாரின் குடும்பம், மற்றும் அனைத்து விபரங்களையும் சேகரித்தார். ஜமிந்தார் கொடுமைக்காரர் என்றும், கடன் கொடுத்து அதிக வட்டி வாங்குவதும், வட்டி கட்ட முடியாதவர்களின் சொத்துக்களையும், நகைகளையும் பறிமுதல் செய்வதும், தன்னை எதிர்ப்பவர்களை கொலையும் செய்ய தயங்காதவர் என்றும் மக்கள் பயத்தோடு சொன்னார்கள்.

ஜமிந்தாரின் வயதான தாயார் ஊரின் பண்ணை வீட்டில் தனியாக தங்கியிருந்தார், கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் ஜமிந்தாரின் தம்பி ஒருவர் விபத்தில் மரணம் அடைந்து விட்டார்.

சிவா அந்த வயதான பாட்டியின் வீட்டின் கதவை தட்டினார். கதவை திறந்த பாட்டி “யாரப்பா நீ, ஏன் உன் உடை எல்லாம் ரத்தம் மாதிரி இருக்குது?

“ஆச்சி! நான் உங்க இளைய மகனின் நண்பன், நான் மேல் உலகத்திலிருந்து வருகிறேன், விபத்தில் இறந்த உங்க மகன் உங்களை பார்த்து விட்டு வரச் சொன்னார், நீங்க நம்புவதற்காக அவர் போட்டிருந்த உடையை போட்டு வந்திருக்கிறேன், ரத்தம் எல்லாம் விபத்தில் அடிபட்டதால் உண்டானது”

“அப்படியா அய்யா! என் மகன் அங்கே எப்படி இருக்கிறான், வசதிகள் எப்படி இருக்கின்றன?”

“பாட்டி! உங்க மகன் புதிதாக வந்ததால் அவருக்கு வசதியில் எதுவும் அங்கே இல்லை, ஆகையால் உங்களிடமிருந்து விலை உயர்ந்த ஆடைகள், நகைகள், பணம் எல்லாம் வாங்கி வரச் சொன்னார்”

“அய்யோ பாவம் என் மகன், இங்கே ராசா மாதிரி இருந்தான், அங்கே போய் இப்படி எல்லாம் கஷ்டப்படுகிறானா, இதோ என்னிடம் இருக்கும் அனைத்து நகைகள், பணம், உடைகள் எல்லாம் தருகிறேன், என் மகனிடம் சேர்த்து விடப்பா” என்றார்.

கொஞ்ச நேரத்தில் ஒரு பெரிய மூட்டையாக கட்டி கொண்டு வந்து கொடுத்தார்.

சிவா கிளம்புவதாக சொன்னதும் “அய்யா! நானும் விரைவில் அவனை பார்க்க வருகிறேன், கடவுள் சீக்கிரம் என்னை அவனிடம் அனுப்புவார் என்று அவனிடம் சொல்” என்றார்.

சிவா மனதில் “கடவுள் ஏன், உங்க மகன் ஜமிந்தாரே அனுப்பி வைப்பார்” என்று சொல்லிக் கொண்டு, விரைவாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

பின்னர் சிவா, நேராக ஜமிந்தாரின் வீட்டிற்கு முன்னால் போய் நின்றார். ஜமிந்தாரின் மனைவி மாடியில் வந்து வெளியே வேடிக்கை பார்க்க வந்த போது, சிவா அருகில் கட்டியிருந்த விலை உயர்ந்த பசுமாடுகளை ஏதோ பேசிக் கொண்டே கும்பிட்டார்.

அதை பார்த்த ஜமிந்தாரின் மனைவி கீழே இறங்கி வந்து சிவாவை பார்த்து “யாரப்பா நீ, ஏன் பசுக்களை கும்பிடுகிறாய், நீண்ட நேரம் என்ன பேசினாய்?”

“ஜமிந்தார் அம்மா, என் சகோதரிக்கு திருமணம், இந்த பசுக்களை திருமண விழாவுக்கு வரச் சொல்லி அழைக்கிறேன், அவர்கள் வந்தால் விலை உயர்ந்த இந்த தங்க நகைகளை பரிசாக கொடுக்கிறேன், ஆனால் இவை ஒன்றுமே சொல்லமாட்டேங்குது” என்று கூறி நகைகளை காட்டினார்.

ஆகா ஏதோ ஒரு ஏமாளி கிடைத்து விட்டான், தன்னுடைய பசுக்களை இவனுடன் அனுப்பி பரிசாக தங்க நகைகளையும் வாங்கி விடலாம் என்று நினைத்து, சிவாவைப் பார்த்து “தம்பி கவலை வேண்டாம், நான் என்னிடம் இருக்கும் 20 விலை உயர்ந்த பசுக்களையும் உன்னுடன் அனுப்பி வைக்கிறேன், நீ திருமணம் முடிந்ததும் நகைகளுடன் இங்கே கொண்டு வந்து விட்டு விடு” என்று கூறி 20 பசுக்களையும் சிவாவிடம் கொடுத்தார்.

உடனே சிவா ”ஜமிந்தார் அம்மா! இப்போ என்னிடம் இருக்கும் நகைகள், துணிகள் தூக்கிக் கொண்டு பசுக்களையும் ஓட்டிச் செல்வது கடினம், எனவே எனக்கு உங்களிடம் இருக்கும் அந்த சாரட்டு வண்டியையும் கொடுத்தால் நன்றாக இருக்கும்”

“பரவாயில்லை, குதிரைகள் பூட்டிய சாரட்டு வண்டியையும் எடுத்துக் கொள், திருமணம் முடிந்ததும், பசுக்கள், நகைகளுடன் வண்டியையும் கொண்டு வந்து விடு”

சிவா, உடனே அவை அனைத்தையும் பத்திரமாக ஊரின் எல்லையில் இருக்கும் மலையடிவாரத்தில் மறைவாக வைத்து விட்டு, மீண்டும் ஊருக்கு வந்தார்.

கொஞ்ச நேரத்தில் தாயாரையும், மனைவியையும் ஏமாற்றிய விசயத்தை அறிந்த ஜமிந்தார், ஏமாற்றியவனை பிடிக்க தன்னுடைய விலையுயர்ந்த குதிரையில் காட்டு வழியாக வேகமாக வந்தார்.

காட்டின் நடுவில் ஒரு இளைஞர் ஒரு சின்ன கூடையை கவிழ்த்து வைத்து அருகில் அமர்ந்திருப்பதை கண்டார்.

“ஏம்பா! இங்கே ஒருவன் பசுக்களுடன் போனதை பார்த்தியா?”

“ஆமாம் அய்யா, ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஒருவன் போவதை பார்த்தேன், ஏன் என்னாச்சு”

“அவன் என் தாயாரையும், மனைவியையும் ஏமாற்றி என் நகைகள், பணம், பசுக்களை எடுத்துக் கொண்டு போகிறான், அவனை பிடிக்க வேண்டும்”

“அப்படியா, என்ன அநியாயம், வேகமாக போனால் அவனை பிடிக்கலாம், ஆனால் உங்களால் அத்தனை வேகமாக போக முடியுமா? வேண்டும் என்றால் ஒன்று செய்யுங்கள், நீங்க உங்க குதிரையை கொடுங்க, நான் போய் பிடித்து வருகிறேன், ஆனால் நீங்க இந்த கூடையில் இருக்கும் கிளியை மட்டும் விட்டு விடாதீங்க, எங்க எஜமானன் என்னை கொன்றே விடுவார்”

உடனே ஜமிந்தார் தன்னுடைய குதிரையை சிவாவிடம் கொடுத்தார், பின்னர் சிவா “நான் போய் பிடிக்கிறேன், ஆனால் என்னை யாரும் நம்பமாட்டாங்க, எனவே நீங்க உங்க உடை, மற்றும் ஜமிந்தாருக்குரிய நகைகளை எனக்கு போட்டு விடுங்க, அப்போ தான் மத்தவங்களும் நம்புவாங்க, அவனையும் பிடிக்க வசதியாக இருக்கும்”

உடனே ஜமிந்தார் தன்னுடைய உடையை எல்லாம் கழட்டி கொடுத்து விட்டு, சிவாவின் உடையை உடுத்திக் கொண்டு, அந்த கூடையை பத்திரமாக பார்த்துக் கொண்டிருந்தார்.

சிவாவோ வேகவேகமாக மலையடிவாரம் வந்து அங்கே இருந்த பசுக்கள், சாரட்டு வண்டி எல்லாவற்றையும் ஓட்டிக் கொண்டு தன்னுடைய சொந்த ஊருக்கு போய் சேர்ந்தார்.

காட்டிலோ இரவு முழுவதும் சிவா ஏமாற்றியவனோடு வருவார் என்று காத்திருந்து கிழிந்த உடையோடு இருந்த ஜமிந்தார் கூடையை தூக்கி பார்த்தால், அதில் ஒன்றுமே இல்லை, மீண்டும் எத்தன் தன்னையும் ஏமாற்றி விட்டானே என்று புலம்பிக் கொண்டே நடந்து ஊருக்கு போய் சேர்ந்தார் ஜமிந்தார்.

சிவா, பசுக்கள், சாரட்டு வண்டி, மற்றும் குதிரையை விற்று பணமாக்கி, நகைகளுடன் வீடு போய் சேர்ந்தார்.

தன் தாய், தந்தையிடம் தங்களை கஷ்டப்படுத்திய ஜமிந்தாரை ஏமாற்றி இழந்த பணத்தை மீண்டும் சம்பாதித்ததை சொன்னார். எத்தனுக்கு எத்தன் உலகில் உண்டு என்பதை சிவா பொல்லாத ஜமிந்தாருக்கு உணர்த்தி விட்டார், தனக்கு கஷ்டம் வரும் போது ஊர் மக்கள் யாருமே கவலைப்பாடாததை கண்ட ஜமிந்தாரும் மனம் திருந்தி விட்டார். அனைவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்.

Thursday, January 26, 2006

கதை எண் 76 - ஜெரி சொன்னா கேட்கணும்

ஒரு முறை புளியங்குடி காட்டில் மழை பெய்யாததால் மரம், செடி, கொடிகள் எல்லாம் வாடி கருகின. நீர் நிலைகள் வற்றி விலங்குகள் தவித்தன.

பறவைகள் நான்கு திக்கிலும் பறந்து சென்று செழிப்பான இடத்தைத் தேடின.
அப்படிச் சென்ற பறவைகளில் ஒரு ஜோடி கழுகுகளும் இருந்தன.

இரண்டு கழுகுகளும் வெகுதுõரம் பறந்து தாங்கள் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சுப் பொரித்து குதுõகலமாக குடும்பம் நடத்தத் தகுதியான மரம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு வரும் பொழுது, ஒரு தோப்பு அவற்றின் பார்வையில் பட்டது.

தோப்பில் நிறைய மரங்களிருந்தன. அவற்றில் ஒரு மரம் கிளையுடன் செழித்து வளர்ந்திருந்தது. ஆனால், அது வயதான மரம். அந்த மரத்தில் யாருமே கூடு கட்டவில்லை, ஏன் என்றும் தெரியவில்லை.

யாருமே இல்லாததால் தாங்களே முழுமரத்தையும் உபயோகிக்கலாம், வேறு யாரையும் இனிமேல் அனுமதிக்கக்கூடாது என்று நினைத்து, அம்மரத்தில் கூடு கட்டலாமென்று இரு கழுகுகளும் தீர்மானித்தன. அதன்படியே பலமான குச்சிகளைக் கொண்டு வந்து கூட்டைக் கட்டின. கூடு பலமாக, பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொண்டு அங்கு முட்டை இட்டு, குஞ்சு பொரிக்கலாமென்று அவை பேசிக் கொண்டன.

அப்போது அம்மரத்தடியில் வளை தோண்டி வசிக்கும் ஜெரி எலி ஒன்று வெளியே வந்து, மேலே கூடு கட்டிக் கொண்டிருக்கும் கழுகுகளைப் பார்த்தது. அதன் முகத்தில் கவலை குடி கொண்டது.

""கழுகுகளே... மேலே என்ன செய்கிறீர்கள்?'' என்று கேட்டது ஜெரி.

""கூடு கட்டுகிறோம்!'' என்றது ஆண் கழுகு.

""இந்த மரத்திலேயா தங்கப் போறீங்க?'' என்று கேட்டது ஜெரி.

""ஆமாம்! அதற்காகத் தான் கூடு கட்டுகிறோம். தங்குவதோடு, முட்டையிட்டு குஞ்சும் பொரித்துக் கொள்ளப் போகிறோம்!, குஞ்சுகள் வந்தப் பின்பு அவைகள் இம்மரத்தின் மேலேயே கூடு கட்டும், இனிமேல் இது எங்களுக்கு மட்டுமே சொந்தமான மரம்'' என்றது பெண் கழுகு.

""நீங்கள் கூடு கட்டி குஞ்சு பொரிப்பது பற்றி மிகவும் சந்தோஷம்... ஆனால்?'' என்று இழுத்தது ஜெரி எலி.

""என்ன ஆனால் என்று இழுக்கிறாய்?'' என்று கேட்டது ஆண் கழுகு.

""நீங்கள் வேறு ஒரு மரத்தில் கூடு கட்டக்கூடாதா?''

""ஏன் இந்த மரத்துக்கு என்ன?''

""இந்த மரம் வயதான மரம். நான் இதன் கீழ் பூமியில் வளை தோண்டி வசிக்கிறேன். அதனால் இம்மரத்தின் வேர் எப்படிப்பட்டது என்று எனக்குத் தெரியும். இம்மரம் பார்ப்பதற்கு பெரியதாக இருக்கிறதே தவிர, இதன் வேர்கள் எல்லாம் பூமியில் பலம் குன்றியுள்ளன. இம்மரம் பலமான காற்றை தாங்குமா என்பது சந்தேகம்தான். அதனால் தான் சொல்கிறேன்!'' என்றது ஜெரி.

""நாங்கள் இங்கேதான் கூடு கட்டி குஞ்சு பொரித்து இருப்போம்... அற்ப ஜீவன் நீ...! யோசனை கூறவோ, அறிவுரை கூறவோ உனக்கு என்ன தகுதி இருக்கிறது?'' என்றது ஆண் கழுகு.

""என்னமோ எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். கேட்டால் கேளுங்கள்; கேட்காவிட்டால் போங்கள்!'' என்றது ஜெரி.

""அதிகமாகப் பேசினால், உன்னையே கொத்தி சாப்பிட்டு விடுவேன்...! வாயை மூடிக் கொண்டு போ!'' என்றது பெண் கழுகு. பேசியதோடு இல்லாமல் எலியின் மீது பாய இரண்டு கழுகுகளும் ஆக்ரோஷமுடன் "சர்'ரென்று பறந்து வந்தன.

வளைக்குள் பாய்ந்து சென்று அவைகளிடமிருந்து தப்பிவிட்டது ஜெரி.
கூட்டை பலமாக கட்டியப்பின்பு மூன்று முட்டையிட்டு குஞ்சு பொறிக்க காத்திருந்தன, சில நாட்களில் மூன்று கழுகு குஞ்சுகள் முட்டையை விட்டு வெளியில் வந்தன. ஆண் கழுகும், பெண் கழுகும் குஞ்சு கழுகுகளைப் பார்த்து, பார்த்து மகிழ்ந்தன.

சில நாட்கள் சென்றன. ஒரு நள் மாலையில் இரு கழுகுகளும் உணவு தேட வெளியே சென்றன, அப்படியே வெகுதூரம் போய் விட்டன.

அப்போ முதலில் லேசாக ஒரு காற்று வீசிற்று. பிறகு அது கொஞ்சம் பலமானது. பிறகு இன்னும் கொஞ்சம் பலமானது; அப்புறம் மிக மிக பலமாகி புயலாக உருவெடுத்தது.

புயல் வரத்தொடங்கியதை அறிந்த இரு கழுகுகளும் வேகமாக தங்கள் கூட்டிற்கு வர நினைத்தன, ஆனால் காற்றில் அவற்றால் பறக்க முடியவில்லை. அன்று இரவு முழுவதும் ஒரு மலைக்குகையில் பதுங்கி இருந்தன.

மறுநாள் காலையில் வேகவேகமாக தங்கள் குஞ்சுகள் இருக்கும் மரத்திற்கு வந்து பார்த்த போது, அவற்றின் இதயமே நின்று போய்விட்டது.

ஆமாம், அங்கே இருந்த அந்த பெரிய வயதான மரம், அடியோடு சாய்ந்து விழுந்து கிடந்தது, மரக்கிளைகள் எல்லாம் நொறுங்கி தூள் தூளாகியிருந்தது, அதை பார்த்த இரு கழுகுகளும் தங்கள் 3 குஞ்சுகள் இறந்து போய் விட்டதே, சின்ன எலி அன்றே சொன்னது அதை கேட்காமல் தங்கள் அருமை குஞ்சுகளை இழந்து விட்டோமே என்று கதறி அழுதன.

அப்போ அங்கே வந்த ஜெரி எலி "இப்போ அழுது என்ன பயன், அன்றே நான் சொன்னதை கேட்டிருந்தால் இப்படி நடந்திருக்குமா, என் உருவத்தை பார்த்து, நான் சொன்ன நல்ல விசயத்தை ஏளனம் செய்தீங்களே!" என்றது.

உடனே கழுகுகள் "உண்மை தான், எங்களை மன்னியுங்கள், உங்கள் பேச்சை கேட்காததால் எங்கள் குழந்தைகள் இறந்து போய்விட்டன" என்றன.

உடனே ஜெரி "உங்க குழந்தைகள் இறந்து போனதாக யார் சொன்னார்கள்"?

பெண் கழுகு "அதோ அந்த பெரிய மரம் அடியோடு சாய்ந்து கிடக்கிறது, அதன் அடியில் தான் எங்கள் குழந்தைகள் நசுங்கி போயிருப்பாங்க".

ஜெரி "கவலை வேண்டாம் என் அருமை நண்பர்களே! காற்று பலமாக அடிக்கத் தொடங்கியதும், நான் என் குரங்கு நண்பன் கபீஷிடம் சொல்லி, உங்கள் குழந்தைகளை அருகில் இருக்கும் மலைக்குகையில் பத்திரமாக பார்த்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறேன், அங்கே தான் அனைத்து பறவைகள், விலங்குகள் இருக்கின்றன, வாங்க போய் உங்க அருமை குழந்தைகளை பார்க்கலாம்" என்றது.

அதைக் கேட்ட இரு கழுகுகளுக்கும் ஆனந்த கண்ணீர், இருவரும் ஜெரியிடம் மீண்டும் மன்னிப்பு கேட்டு, நன்றியை சொன்னார்கள்.

உடனே மலைக்குகைக்கு சென்று அங்கே கபீஷிக்கும் நன்றி சொல்லி, தங்கள் குழந்தைகளை கட்டி பிடித்து முத்தமிட்டு மகிழ்ந்தார்கள். அன்று முதல் அந்த கழுகுகளும், நம்ம ஜெரி எலியாரும், கபீஷ் குரங்காரும் நல்ல நண்பர்கள்.

Saturday, January 21, 2006

கதை எண் 75 - கருணை கொண்ட உள்ளம், கடவுள் வாழும் இல்லம்

மகாத்மா காந்தியடிகளின் மானசீகக் குரு என்று கூறப்பட்ட டால்ஸ்டாய் அடிகளின் படைப்பில் இது ஒரு கதை . "What men live by". என்பது அவரிட்ட பெயர். ===========================================
இக்கதை நிகழ்ந்த புலம் மாஸ்கோ. மார்டீன் ஒரு செம்மான், ஏழை. குறைந்த வருவாயில் வாழ்ந்து வருபவன். மனைவியின் தேவைக்காக 'பர்' கோட் ஒன்று வாங்க விழைந்து இயலாமையால், அதற்குப் போதிய பண வசதி(ரூபிள்) இன்மையால் கொஞ்சம் ரொட்டி வாங்கிக் கொண்டு விட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தான்.

வழியில் இருந்த சர்ச் முற்றத்தின் ஊடாக நுழைந்து அந்தி மாலைப் பொழுதில் வந்து கொண்டிருந்த போது யாரோ முக்கி முனகும் சப்தம் கேட்டது. முகம் தெரியாதபடி பனி பெய்துகொண்டிருந்ததால் சற்று நெருங்கி அவன் சென்றுபார்த்தான்.

இளைஞன் ஒருவன் அரைகுறை உடையுடன் அங்கே விழுந்து பனியில் விரைத்துச் சுருண்டு கிடந்தான். இரக்கமும் கருணையும் மேலிட தன் மீது அணிந்து கொண்டிருந்த நீண்ட மேலங்கியைக் கழற்றி அந்த இளைஞனை அணைத்துத் தூக்கி அணிவித்து ஒரு வாடகை வண்டியில் ஏற்றித் தன்வீட்டிற்கு அழைத்து வந்தான்.

தன் குடும்பத்துக்கே பத்தாத நிலையில் வேற்றுநபர் ஒருவரை விருந்தாக அழைத்து வருவது என்ன விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அவனுக்கு நன்கு தெரியும். மனைவியின் மன நிலையைப் பற்றியும் எதிர்வினைகள் பற்றியும் யோசித்தான்.

வீட்டு வாயிலில் கணவனுடன் விருந்தாளி ஒருவனைப் பார்த்த அவள் அன்று ஏனோ வழக்கத்துக்கு மாறாக அமைதியாய் நடந்துகொண்டதோடன்றி அவனது உணவிற்காக எக்கேள்வியும் எழுப்பாமல் ஓட்ஸ் கஞ்சி தயாரித்து சூடாகக் கொடுத்தாள். சோர்வுற்றிருந்த விருந்தாளி பேச்சு மூச்சின்றி இருந்தவன் அவளது முகத்தைப் பார்த்து ஒருஇளநகை செய்துவிட்டு கஞ்சியைக் குடித்தான். கிழிசல் பாய் ஒன்றில் உறங்கிப் போனான்.

வந்தவனைப்பற்றிய விவரம் தெரியாத அவள் விழித்தபோது அவனைப்பற்றி நாளை தெரிந்து கொள்வோம் என்றான் மார்ட்டீன். மறுநாள் விடிந்தது, வந்தவன் பேசவும் இல்லை. உணவுகொடுத்தபோது உண்டான். மறுப்பதில்லை. இரு நாட்கள் கழிந்தன. அவனை என்ன செய்வது?பெரும்பாரமாய் அவனை தொடர்ந்து ஆதரிப்பதா? செய்வதறியாது தயங்கிக் குழம்பி நின்றான். சரி ஒருவாரம் வைத்திருந்து வெளியே அனுப்பிவிடலாம் என்று நினைத்து தன் சுயவேலையினைத் தொடர ஆரம்பித்தான்.

சிறிய வீடாதலின் மார்ட்டீன் தோல் தொழில் வேலைசெய்யும்போது விருந்தினன் அருகிருந்து கவனித்துக் கொண்டிருந்தான். அவனது கவனம் தெளிவாக இருந்தது. அவன் கருவிகளை யெடுத்து தோலை கச்சிதமாக வெட்டி மார்ட்டீன் செய்யும் அளவுக்கு சுத்தமாகச் செய்யத் தலைப்பட்டான். மேலும் அவன் மார்டினையும் விட விரைவாகவும் சிறப்பாகவும் அழகாகவும் அற்புதமாகவும் வடிவமைத்து காலணிகள், பர்ஸ், கைப்பைகள் என்று வித விதமாக தைத்து குவித்தான். அவனுக்கு சோர்வும் இல்லை பேச்சும் இல்லை.சரி பிறவிச் செவிட்டு உமையனாகவிருப்பான் என்று முடிவுக்கு வந்தனர். உண்ணும் நேரத்தில் கொடுத்தால் குடிப்பான். தாமதமானாலும் ஏனென்று கேட்பதில்லை. புதியவனின் கையால் தயாரான பொருட்கள் மிக விரைவில் விற்றதோடு, நல்ல பெயரும் பெற்று, பொருளின் தரம் அனைவரையும் கவர்ந்தது.

மார்ட்டின் செல்வாக்கு உயர்ந்தது. களங்கமற்ற வந்தவன் குழந்தையற்ற இல்லத்திற்கு வரம் பெற்ற குழந்தையாக, வாழவைக்க வந்த தெய்வமாகக் கருதப்பட்டான். வசதிகள் பெருகிடச் செல்வம் செழிக்க மார்ட்டீன் பெரிய வர்த்தகனாயினான். அவனது தயாரிப்புகள் விரும்பி வாங்கப்பட்டன. பெரிய கடைத்தெருவில் அலங்கார பெட்டிவைத்து புதிய உத்திகளுடன் வணிகப் புகழோடு முக்கியமான ஒரு நபர் என வாழத் தலைப்பட்டான்.

இரண்டு வருடங்கள் கழிந்தன.

ஒருநாள் காலையில் ஒரு சீமாட்டி தன்னுடைய விலை மிகுந்த கோச்சு வண்டியில் மார்ட்டீன் கடைக்கு வந்தாள். அவள் அழைத்து வந்த இரு பெண் குழந்தைகளில் ஒருத்தியின் இடது காலில் சிறிது ஊனம் தென்பட்டது.

இருகுழந்தைகளும் அச்சில் வார்த்தது போன்று இருந்தனர். அழகின் முழுமைப் பிம்பங்களாய் இருந்தனர்.. குழந்தைகளின் கால் அளவுகளை எடுத்துக் கொண்டு வேலையைத் தொடங்கினான் இளைய பணியாளன்.. அழகிய வடிவில் சிரிய தோற்றத்துடன் காலணிகளைத் நேர்த்தியாகத் தைத்தான்.

இடைப்பட்ட நேரத்தில் வந்த சீமாட்டி மார்ட்டீனுடன் உரையாடிக் கொண்டிருந்தாள். தன் செல்வநிலை பற்றியும், தான் இளமையில் ஏற்பட்ட மணம்பற்றியும், கைவிட்டு இறந்த கணவன்பற்றியும், வாழ்வில் ஏற்பட்ட தனிமையும் பிறர் சூழ்ச்சியும் ,ஏற்படுத்திய வேதனை நிகழ்ச்சிகளையும் நினைவு கூர்ந்தாள். பின்னர் இக்குழந்தைகளைப் பற்றியும் பேசினாள் அனாதையாய் விடப்பட்டு தாயை இழந்த இவர்களைத் தான் எடுத்துவளர்த்து வருவதால் மட்டுமே உயிர்வாழ விரும்பியதாகவும் குறிப்பிட்டாள்.

அக்குழந்தைகளைப் பெற்ற ஒரு ஏழை பிரசவத்தின் போதே இறந்து போனதையும் அவளின் வறிய நிலையில் தான் அவளுக்கு உதவ நேர்ந்ததையும் குழந்தைகளை வளர்க்க வேண்டிய கடப்பாடு உருவானதையும் கூறினாள். அதுவே இன்று வாழ்வில் குறிக்கோளாக அமைந்தது பேரின்பம் என்றாள். முடித்து மெருகேற்றிய காலணிகளின் அமைப்பும் நேர்த்தியும் அனைவரையும் கவர்ந்தன. ஊனமான காலுக்கான காலணியும் மிகவும் கச்சிதமாக அமைந்ததில் சீமாட்டி உழைப்பாளியை மிகவும் பாராட்டி பரிசுகளுடன் சேர்த்து கூலியும் கொடுக்க முற்பட்டாள்.

காலணிகளுக்கான விலையை வாங்கவேண்டாம் என்று தன் சைகை மூலம் மார்டீனுக்குக் காட்டினான் இளையன். வேண்டுகோள் விடுத்த தன் இளையனை ஆச்சரியத்துடன் பார்த்தான் மார்ட்டீன். மறுத்தமைக்குக் காரணம் தெரியாவிட்டாலும் அவனுடைய விருப்பத்தை ஏற்று பலவந்தமாக சீமாட்டியின் கட்டாயத்தினைப் புறக்கணித்து, "இந்த இரண்டு ஆண்டுகளில் இன்று தான் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். தன்னலம் பாராது என் குடும்பத்திற்காகவே உழைக்கும் இவனுடைய ஒரே ஒரு விருப்பமான செயல் இதுவே.

முதன் முறையாக இவனது உள்ளத்திலும் ஆசைகளும் இணக்கமும் உண்டு என்பதை உங்கள் குழந்தைகள் வருகை வாயிலாகத் தெரிந்து கொண்டேன். எனவே என்னை மன்னித்துவிடுங்கள் அடுத்து நீங்கள் வரும்போது நான் உங்களின் அன்புக் காணிக்கையை ஏற்றுக்கொள்வேன்" என்று வினயமாகப் பேசி இளையனின் விருப்பப்படி கூலி வாங்காமலேயே சீமாட்டியை வழியனுப்பிவைத்தான் மார்ட்டின்.

மேலும் இரு ஆண்டுகள் வேகமாகக் கழிந்தன. ஒருநாள் மாலை ஆடம்பரமாய் ஒரு செல்வந்தர் தன்னுடைய அருமையான கோச்வண்டியில் வந்து இறங்கி " மார்டீன் என்பவர் யார் ?"என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்து அமர்ந்தார்.

உயர்ந்த உருவமும், கனத்த உடல் அமைப்பும், வாழ்க்கையின் செழுமையயும் முழுதுணர்ந்து நுகர்ந்த பெருமையும் அவர் முகத்தே தெற்றென விளங்கின. சுற்றமும் மற்றோரும் கைகட்டி நிற்கும் பெரியதொரு தலைமைப் பொறுப்பு வகிக்கும் உயர்மட்ட மனிதனாய் அவர் காணப்பட்டார். விலையுயர்ந்த ஆடை அணிகலன்களும் மிடுக்கும் அவரைப் பற்றிய பெருமையையும் அச்சத்தையும் தோற்றுவித்தன. அவருடம் வந்த பணியாளன் ஒரு பெரிய சுமையைக் கொண்டுவந்து மேசையின் மீது வைத்தான். அதில் ஒரு அழகான பதனிடப்பட்ட தோல் சுருள் இருந்தது.

"மார்டீன், உன்னுடைய வேலை நுணுக்கம் பரவலாய்ப் பேசப்படுவதால் உன்னை நாடி நான் வந்திருக்கின்றேன். நான் வேட்டைக்கு சென்றிருந்தபோது ஒரு அபூர்வமான மிருகத்தைப் பார்த்தேன். அது என்னைத் தாக்க வந்த போது தான் அதனை நான் முதன்முறையாகப் பார்த்தேன் அது ஒரு அதிசய ஆட்கொல்லி மிருகம். இடையே நடந்த போராட்டத்தில் பலமான காயங்களுடன் நான் வெறிகொண்ட அதனை அழித்து அதன் தோலை பதப்படுத்திப் பக்குவப்படுத்தச்செய்து கொண்டு வந்திருக்கின்றேன். உயரிய தன்மையுடனும் அழகிய வேலைப்பாடுகளுடனும் தரமான ஒரு ஜோடி பூட்ஸ் செய்யவேண்டும். இந்தத் தோல் மீண்டும் கிடைக்க வாய்ப்பே இன்மையால் போதிய கவனமும் கருத்தும் செலுத்தி சீர்ிய முறையில் அதைச் செய்து தரவேண்டும்.

நான்கு நாட்களில் இதோ இந்தப் பணியாளன் வருவான் அவனிடம் கொடுத்து அனுப்பிவிடு." கூலி என்னவென்பதைக் கேட்காமலேயே ஒரு பெருந்தொகைப் பணத்தை மேஜையின் மேல் வைத்தார் செல்வந்தப் பிரமுகர்.

அடாவடித்தனமானதும் அதிகாரவர்க்கத்தின் தன்நலம் மட்டுமே கருதும் பாங்கும் போக்கும் மார்ட்டீனுக்கு அறவே பிடிக்கவில்லை. இப்படிப் பட்டதொரு அதிகாரப் பணி இதுவரை நடந்ததே இன்மையால் மனம் வெதும்பிப் போய் வேலையை மறுக்கவும் அச்சம் கொண்டதுடன், அதை வெளிப்படுத்திக் கூறவும் துணிய முடியவில்லை. மறுத்துக் கூறி அவருடய கோபத்திற்கு ஆளானால் விளைவு என்னவாக இருக்கும் என்பதும் அவனது அச்சத்தை அதிகரிக்கச் செய்தது. மேலும் நேரடியாக மறுப்பதகு அச்சம் மட்டுமே காரணம் என்பது ஏற்றுக் கொள்ளமுடியாத ஒரு பேச்சு.

தயக்கத்துடன் இளையனின் முகத்தினைப் பார்த்தான் மார்ட்டின். அவனுடைய முகம் தெளிவாகவும் இருந்தது; மேலும் அவன் செல்வந்தரை நோக்கி ஒரு புன் முறுவலும் செய்தான். தன் முகம் நோக்கிய மார்ட்டீனிடம் வந்த வேலையை விட வேண்டாம் என்றும் வாங்கிப் போடுமாறும் நயனமொழியிலும், சைகையின் மூலமும் உணர்த்தினான். விடை பெறும் போது மீண்டும் வலியுறுத்தி பூட்ஸ் மிகவும் கச்சிதமாக அமையவேண்டும் என்றும் குறித்த நாளில் தவறாமல் தான் அனுப்பிவைக்கும் பனியாளன் வசம் தந்துவிடவேண்டும் என்றும் கட்டாயப்படுதி விட்டுச் சென்றார் செல்வந்தர்.

வந்த பிரமுகரின் பேச்சுக்களையும் தோரணையையும் அறவே வெறுத்த மார்ட்டீன் நடந்து முடிந்த சம்பவத்தையே அசைபோட்டுக் கொண்டிருந்தான். சற்று வெளியில் உலாவிவிட்டு திரும்பவந்த மார்ட்டினுக்கு தலையில் பேரிடி ஒன்று விழுந்துவிட்டாற் போன்றதோர் சம்பவம் அங்கு காத்திருந்தது.

செல்வந்தரின் அன்புக்குப் பாத்தியப்பட்ட பாடம் செய்யப்பட்டிருந்த அரிய பிராணியின் தோலினில் செல்வந்தருக்கான தரமான பூட்ஸ் செய்யப்படாமல் சாதாரண செருப்புகள் ஒரு ஜோடி மெருகேற்றி அலங்கார வேலைப்பாடுகளுடன் பணி நிறைவு செய்து அருமையாக கண்ணாடிப் பெட்டியில் காட்சிக்கு வைக்கப்பட்டதோடு அவரது முகவரி எழுதப்பட்டிருந்த ஓர் அட்டையையும் அதன் மேல் கோர்த்துக் கட்டப்பட்டிருந்தது.

நெருப்பினை மிதித்தது போன்று மார்ட்டீன் துவண்டுபோனான். நல்லவன், வல்லவன், வாழவழி வகுத்துத் தந்தவன், பேராளன்,தேடாமல் வந்தச் செல்வக்குமரன் என்றெல்லாம் யாரைப்பற்றி வந்தவர் போனவரிடமெல்லாம் வாயாரப் புகழ்ந்து கொண்டிருந்தானோ அந்த இளையன் தான் தோன்றித்தனமாய் செய்திருக்கும் செயல் மார்டீனுக்கு மிகவும் அச்சத்தைக் கொடுத்து காலடியினில் தரை விலகியதாக உணரத் தலைப் பட்டான்.

அவன் முன் நின்று கொண்டு,"ஏனடா நீ இங்கு என் வாழ்வினில் வந்தாய்? வறியநிலையினில் இருக்கும் போது நான் நிம்மதியாக விருந்தேன். வகையான வசதிக்கும் வாழ்வுக்கும் ஆளாக்கிப் பின்னர் மொத்தமாகக் என்னைக் குழி தோண்டிப் புதைக்கும் நோக்கம் உனக்கு எப்படியடா வந்தது? மக்கட் செல்வம் அற்ற எங்களுக்கு மகனாய் வந்தாய் என்று மதித்து இறுமாந்திருந்த எங்கள் குடும்பம் இன்றோடு அழிந்திட வழி வகுத்துத் தந்துவிட்டு ஏதும் அறியாதவன்போல் பேச்சு மூச்சற்று வாளாவிருக்கின்றாயே!. ஆழ்ந்து எங்கள் உரையடலை நீ வழக்கம் போல் கேட்டிருப்பாய் என்றுதான் எண்ணியிருந்தேன். வந்த கடுங்கோபி விரும்பிய தொன்றிருக்க வேண்டாத ஒன்றை வடிவமைத்துக் கொடுத்துவிட்டாயே? புரிதலில் தவறு நேர்ந்ததா, அன்றி நீ சரியாகப் புரிந்துகொண்டாயா என்பதை நான் சோதித்து அறியாதுவிட்டுவிட்டேனா? மாற்றுத் தோலும் எங்கிருந்தும் எப்படியும் பெறமுடியாத இச் சூழ்நிலையில் யாது செய்வேன்? தெய்வமே! ஊமையையும் செவிடனையும் நம்பி மோசம் போனேனே!" என்று புலம்பினான்.

என்னதான் திட்டிவைதாலும் அழுது புரண்டாலும் இளையனைப் பொறுத்தமட்டில் புரிந்து கொள்ள முடியாது என அவனுக்கு நன்கு தெரியும் என்றாலும் உபாயம் ஏதும் தெரியாமல் தலைவிதியென்று கூறும் நிலை இதுதான் போலும்! என்று நினைந்து கைகளை ஊன்றி மேசையின் மீது கவிழ்ந்தான்.

மனைவியை அழைத்துப் பேசினான். வீடு கடை அனைத்தையும் துறந்து இரவோடு இரவாக எங்கோ கண்காணாது போய்விடலாம் என்றும் பணியாளன் வந்து 'பூட்ஸ்-ஜோடி கேட்கும் போது இவனே இருந்து பதில் கூறிக்கொள்ளட்டும் எனத் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்துமுடிக்க கணவனும் மனைவியும் இயங்க ஆரம்பித்தனர்.

வறுமையில் வாடியதும் எங்கிருந்தோ வந்த ஒருவனால் வாழ்வு தலை தூக்கி நிமிர்ந்துவும், இடைப்பட்ட காலத்தினில் வாழ்க்கையை வசதியாய் அமைத்து அதனைப் பாதியில் தட்டிப்பறித்ததுவும் நெஞ்சில் நிழலாட அத்தியாவசியப் பண்டங்களை சிறிது எடுத்து கொண்டு அதிகாலையில் பனி நீக்கும் அரசுத்துறை வாகனம் வந்து கதவு திறக்க வழிகிடைத்தவுடன் பிறர் அறியாது வெளியில் சென்றிட உத்தேசித்து செயலில் இறங்கினர் அத் தம்பதியர்.

வாயில் கதவு தட்டப்படும் ஒலி கேட்டது. யாரோ வாடிக்கையாளர் வந்திருப்பர் என்று வேண்டா வெறுப்புடன் மார்ட்டீன் எழுந்து கதவினைத் திறந்தான்.

அன்று தோல் சுருளைச் சுமந்து வந்த பணியாளன் கருத்து நெடிதுயர்ந்து நின்றான்.அவசர நிமித்தமாய் பரபரக்க இரண்டு நாட்களுக்கு முன்னமேயே வந்தது அவனுக்கு மேலும் பன்மடங்கு அதிர்ச்சியைத் தந்ததால் பொறியில் சிக்கிய எலிபோன்று அவன் திகைத்தான்.

வந்தவன் கேட்டான்" ஐயா பணி முடிந்து விட்டதா? மிகவும் அவசரத்தேவை என்பதால் ஓடோடி வந்துள்ளேன்." வாயிழந்து பேச்சிழந்து நாக்கு மேலணத்தில் ஒட்டிக் கொள்ள, பயத்தில் உறைந்து மார்ட்டீன் வந்தவனின் முகத்தையும் அதில் தோன்றும் பேரவசரக் குறிப்புகளையும், அவனால் விளையப் போகும் பிரளயத்தையும், குறித்த காலக் கெடுவிற்கு முன்னமேயே வந்து தன்னை ஒறுக்கப்போகும் பணியாளன் வடிவில் கூற்றுவனே வந்துள்ளதாக நினைந்து பேயறைபட்டவன் போன்று பதில் ஏதும் இல்லாதவனாக மலங்க மலங்க விழித்தான்.

ஐயா என் அவசரம் உங்களுக்குப் புரியவில்லையா? காரியங்கள் மிஞ்சிவிட்டன. கனவான் இறந்து போய்விட்டார். அவரின் புனித உடல் மாதாகோயில் முற்றத்தில் காத்திருக்கின்றது. நல்லடக்கம் நிகழ்வதற்காக என்னை எதிர்பார்த்து அங்கே உற்றாரும் மற்றோரும் குழுமியுள்ளானர். அவர் ஆசையாக அணிவதற்காகச் செய்யப்பட்டுள்ள புதிய பூட்ஸ் ஜோடியினை வெளியே எடுத்து அதனைப் பிரித்து சாதாரணச் செருப்பாக அதே அளவினில் மாற்றிக் கொடுங்கள். உங்கள் பணியினைத் துரிதப்படுத்தி நான் விரைந்து சென்றடைய தயவு கூர்ந்து விரைந்து செயற்படுங்கள். அளவிறந்த பணிகள் அங்கே தேங்கியுள்ளன" என்றான் பணியாள்.

மார்ட்டீன் கவனம் திரும்பி அவன் கூறிய சொற்களின் முழுமையினைப் புரிந்து கொள்ள சற்று அவகாசம் தேவைப்பட்டது. அதற்குள் உள்ளிருந்து வந்த மார்டினின் வளர்ப்பு மகன் அலங்காரப் பெட்டகத்தினின்றும் ஒரு ஜோடி உரிய புதிய செருப்பை யெடுத்து வந்திருந்தவனிடம் காட்டிக் கொண்டிருக்கும் போதே கைகளினின்றும் அதைப் பறித்துகொண்டு ஓடிப் போக விழைந்தவன் போல் வந்திருந்த பணியாளன் ஏற்கனவே அது ஒரு பணி முடிந்த பொருட்கள் வரிசையில் அடைக்கலம் புகுந்திருந்ததைப் பார்த்து, அது முடிக்கப்பட்டு சில நாட்கள் ஆகிவிட்டன என்பதை எண்ணித் திகைத்தான்.

ஏதும் புரியாத மர்மக் கும்பலுக்குள் சிக்கிக் கொண்டது போன்று ஒவ்வொருவரையும் ஏற இறங்கப் பார்த்ததோடன்றி நீண்ட விடை கூறிவிட்டு அவசர நிமித்தமாய்ப் பறந்தான். நடப்பனவெல்லாம் என்ன? மார்ட்டினின் மனைவியும் வந்து சேர்ந்தாள்.

பூட்ஸை மாற்றித் தைக்க நேரம் பிடிக்கும் என்று வந்தவன் நினைத்திருக்க அதை முன் கூட்டியே செருப்பாய்த் தைத்துப் போட்ட வளர்ப்பு மகனை அச்சத்துடன் நோக்கினான் மார்ட்டீன்.

நடந்த நிகழ்வும் வந்தவன் கூறிய மரணச் செய்தியும், எவ்வித உணர்வும் அற்றவன், எதையுமே புரியமாட்டாதவன் என்று தான் நினைத்திருந்த மூங்கை யார்? அவனால் இத்துணை வசைமொழிகளை எவ்வாறு தாங்கிக் கொள்ள முடிந்தது? அனைத்தும் புரிந்தவனா? இப்பெற்றியுடையவனைத் தரந்தாழ்த்தி விட்டோமா? என்று கழிவிரக்கம் கொண்டு நொந்தான் மார்ட்டீன்.

ஓடிச் டென்று இளைஞனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு 'ஹோ' வென்று அழுது விம்மினான் மார்ட்டீன். கண்ணீர் சொரிய நின்றுகொண்டிருந்த மார்டீனின் மனைவி மகனின் கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டு கதறி அழுதாள். உப்பற்றுக் கொடுத்தாலும் மருக்காது வாங்கி உண்ட அவனின் பெருந்தன்மையை அவள் நினைந்தாள்.

இனிய சங்கீத ஒலியினில் அன்பையும் கனிவையும் இழைத்து ஆதார ஸ்ருதி வருடலைத் தரும் தொனியில் "மார்ட்டீன்" என்று யாரோ கிணற்றுக்குள் இருந்து அழைப்பதுபோன்று ஒரு குரல் கேட்டது.

வெளியே வானம் கருத்து இடியும் மின்னலும் மழையும் மிகுந்து புயற்காற்றின் கடுமையால் சன்னல்திரைகளைக் கிழித்து படபட என்று கதவுகள் அடித்து ஒருவர் பேசுவது பிறருக்குக் கேட்க்காத வண்ணம் இரைச்சல் அதிகரித்தமைால் என்ன நடக்கின்றது என்பது எவரும் அனுமானிக்க முடியாமல் கலப்படமாக பேரிரைச்சல் மட்டுமே நிறைந்திருந்தது.

அத்தனை பேரிரைச்சலுக்கு மத்தியில் ஒரு இனிய சுனாதம் அனைத்து ஒலிகளையும் ஆழத்தின் கீழமுக்கி, வெள்ளத்தில் எதிர் நீச்சல் செய்யும் கருநாகம் போல் துல்லியமாக , ஆனால் மிக கூர்மையான மகுடி நாதம் போன்று சுண்டி இழுத்து மதுரமாய் ஒலித்தது. "அன்புடைய மார்ட்டீன்". குரல் வந்த அறையின் வடகிழக்கு மூலையினில் புதியவன் ஒருவன் நின்றிருந்தான்.

பொன் பஞ்சுப் பொதியலாய் ஒளி உமிழும் தாரகையாய், அன்பின் வடிவாய், அடைக்கலம் தரும் நற்கருணைப் பேராறாய் அவன் வசீகரித்து நின்று கொண்டு இருகை நீட்டி மார்ட்டீனை அழைத்தான். சுயம் அற்றுப் போய் பேரலையில் அல்லாடும் மரக்கட்டையென தள்ளாடி நின்ற மார்ட்டீன் மதுர வாசக அழைப்பின் விசையில் காந்தத்தால் ஈர்க்கப் பட்ட இரும்புத்துண்டு போன்று அவன் முன் கைகட்டி வாய் புதைத்து வணங்கி நின்றான். அவன் பின்புறத்தே அவனது மனைவியும் உள்ளீீடற்றுப் போய் நடைப் பிணமாய் நின்றுகொண்டு உரையாடலைச் செவிமடுத்தாள்.

"என்னை நன்கு பார் மார்ட்டீன். நீங்கள் இருவரும் இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.உங்கள் இருவரிடமும் பயிற்சி பெறும் மாணவனாகச் சில ஆண்டுகள் தங்கிப் பழகித் தவம் புரிந்து கண்டறியாதன கண்டேன்.

நான் கற்றுக்கொண்டவை இயற்கையின் சாரம். அன்புத் தெய்வம் போன்று என்னை ஆதரித்தீர்கள். பயிற்சிமுடிந்தமையின் நான் உங்களைவிட்டு செல்கின்றேன்.எனக்கு விடை கொடுங்கள். உங்கள் வாழ்வு மேலும் சிறக்க நான் இறைவன் அருள் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்." என்றான், கருமை நிறம் மறைந்து தெய்வீக ஒளிசூழ நின்றுகொண்டிருந்த அத் தேவதூதன்.

பேரிடராய், மரணவாயிலுக்கு இட்டுச்செல்லும் ஒரு சம்பவம் திசைமாறி கற்பனைக்கும் எட்டாத வகையில் எங்கோ தடம்பதித்துச் செல்வது வேடிக்கையாகவும் புரியாமலுமிருந்தது. மார்ட்டீன் சொன்னான்.

"ஐயா! நீங்கள் பேசுவதெல்லாம் என் சிற்றறிவுக்கு எட்டாத, விளங்காத புதிர்கள். விவரித்துக் கூறினாலும் அறிந்து கொள்ளவியலாதவை. எனக்கு ஒரு சிறுதகவல் மட்டும் சொல்லுங்கள். நீங்கள் யார்? தெய்வீகத் தோற்றம் இப்போது உங்களிடம் வரக்காரணம் யாது? அன்று அனாதையாய் வீழ்ந்துகிடந்த மர்மம் என்ன? ஏழையின் வீட்டில் அரைப்பட்டினியுடன் சில ஆண்டுகள் ஏன் தங்கியிருக்கவேண்டிய தாயிற்று? இங்கு பயிற்சி பெற்றதாகச் சொன்னது என்ன? வறுமையின் பிடியில் சிக்கிய தோல் தொழிலாளியின் அடிமையாய்க் காட்சிதந்து உழன்று என்னையும் அதிரப் பேச வைத்து ஒன்றுமே அறியாத ஊமையாய் நடந்த நாடகத்தில் கண்ட முடிவென்ன? "

நெகிழ்வான உண்மை உரிமையுடன் மாட்டீனின் கேள்விகளுக்கு மனமுவந்து அத் தேவ தூதன் கடமையாய்க் கொண்டு பதிலிறுத்தான். "எனதருமை மார்ட்டீன்! நான் விரைந்து சென்று இறைவன் பால் என் வணக்கத்தைத் தெரிவித்து என்பணியினைத் தொடர வேண்டும். என்றாலும் உண்மையின் தேடலாய் களங்கமற்ற உங்கள் ஐயங்களைத் தவிர்ப்பது என்கடமையாகும்" சற்று நிறுத்தி மீண்டும் அவன் சொன்னான்.

" அன்று வந்த இரட்டையர் சிறுமிகள் நினைவிருக்கிற தன்றோ? அக்குழந்தைகளின் தாயின் உயிர் பிரியவேண்டிய அன்னாளில் அவள் மரணத்துடன் போராடித் தவித்தாள். அவள் படும் அவஸ்தைகளை நேரில் பார்த்து உயிரைக் கவர்ந்து செல்ல வந்த நான் புதியதாய்ப் பிறந்த இரட்டைக்குழவிகள் தனிமைப்பட்டு இவ்வுலகில் அழிந்து போகும் என்று கருதி கருணை காட்டித் தாயின் உயிரைச் சிலகாலம் விட்டுவைக் கலாகுமா வென்று வேண்டுகோளை இறைவனனின்முன் வைத்தேன். அதற்கு இறைவன் திட்டமிட்டபடி வேறு ஒரு தூதனை அனுப்பி அத்தாயின் உயிரை எடுத்து வரச்செய்துடன் என்னைச் சபித்து," நீ பூவுலகில் சிலகாலம் தங்கி, உலகம் எதனால் நிலைபெற்றிருக்கின்றது? மனிதர்களுக்கு என்ன கொடுக்கப்பட்டிருக்கின்றது? என்ன கொடுக்கப்படவில்லை? என்பதை அறிந்துகொண்டு வந்துசேர்வாயாக என்று கூறவும் தெய்வீக ஆற்றல் குறைந்து நான் மாதாகோயில் முற்றத்தில் வீழ்ந்தேன்."

தேவதூதன் மேலும் தொடர்ந்தான்," கருணையோடு உன் மனைவி எனக்கு அன்று ஓட்ஸ் கஞ்சி தரும்போது என் நண்பன் உடன் நின்று கொண்டிருந்தான்.அவன் முகம் பார்த்து முறுவலித்தேன். அன்றையத் தேர்வில் அவள் கண்டம் தப்பித்தாள். அக்கருணை பிறக்கவில்லையெனின் அவளின் உயிர் அன்று பறிபோயிருக்கும்."

"குழந்தைகட்குக் காலணிதைக்கவந்த சீமாட்டி தாயினு மேலாக அக்குழந்தைகளை ஆதரித்து அன்புகாட்டிச் செல்வச் சிறப்புடன் பராமரித்து வருகிறாள் என்பதை இறைவன் எனக்குக் காட்டியருளினார். அத்தாய் பிழைத்திருந்தால் அச்சிறுமிகள் வறுமையிலேயேதான் வாடியிருப்பார்கள்."

"உலகையே விலை பேசும் செல்வப்பிரமுகரின் கோச்சிலேயே நண்பன் வரக்கண்டேன். சற்று நேரத்தில் உயிர் பிரியும் தன்மை நெருங்கிவந்துள்ளமை அறியாத அவர் வேட்டைப் பிராணியின் நிலையையும் பூட்ஸ் விரும்புவதையும் ஆரவாரமாகத்தெரிவித்து வாங்கிச் செல்லக் கெடுவைத்துப் பேசினார். அவர் இறக்கும்போது அவருக்கு பூட்ஸ் அணிவித்து நல்லடக்கம் செய்யப் போவதில்லை. அவர் விருப்பத்திற்கு மாறாக செருப்பு மட்டுமே வழக்கமுறைமைப்படி தேவை யென்பதால் செருப்பைத் தைத்துப் போட்டேன்."

"உலகம் அன்பினால் நிலை பெற்றிருக்கின்றது என்பதையும், அன்புகூர்ந்து பிறருக்குத் தொண்டு புரியும் தன்மை மக்களுக்குக் கொடுக்கப்பட்ட செல்வம் என்பதையும், மரணம் என்று எப்படி சம்பவிக்குமென்று அறிய முடியாதவாறு இறைவனால் மறைக்கப்பட்டிருக்கின்றது என்பதையும் உங்களுடன் வசிக்கும் போது நான் அறிந்து கொண்ட பாடம்" என்று கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றான் தேவதூதன்.

நன்றி: வெ.சுப்ரமணியன்.

Thursday, January 19, 2006

கதை எண் 74 - பைபிள் கதைகள் (1)

எருசலேம் பெரிய கோவிலில் பஸ்கா பண்டிகை நடைபெற்றது.

வியாழன் இரவு, தாம் கைது செய்யப்படக் கூடும் என்று இயேசு எதிர்பார்த்தார்.
சாதாரணமாக, பஸ்கா பெருவிழா காலத்தில், வீடுகளில் பஸ்கா விருந்து நடைபெறும். இயேசுவும் சீடர்களும் தங்கியிருந்த மேல்மாடியில் பஸ்கா விருந்து ஆயத்தமாக இருந்தது.

யூதர்கள் நம்மைப் போல, தரையில் உட்கார்ந்து சாப்பிடமாட்டார்கள், யூதர்கள் படுத்துக் கொண்டு சாப்பிடுவர். பக்கவாட்டில் சாய்ந்து கொண்டு சாப்பிடுவர். இப்படி அவர்கள் சாப்பிடுவதால் சாப்பாட்டுக்கு முன்பு கைகளையும் பாதங்களையும் அலம்பிக் கொள்வர். சாப்பிடுவதற்கு முந்தி பாதங்களை அலம்ப வேண்டும் என்பது அவர்கள் மதச்சட்டம் சார்ந்த ஒழுங்கு.

பஸ்கா விருந்து ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. இயேசு வீட்டுச் சொந்தக்காரரோடு கீழே பேசிக் கொண்டிருந்தார்.

இயேசு வந்ததும் விருந்து சாப்பிட வேண்டியது தான் பாக்கி. இந்த நேரத்தில், சீடர்களுக்குள் ஒரு சின்ன தகராறு.

யூத வழக்கப்படி, விருந்து நடக்கும் போது பிரதான விருந்தாளி ஒருவர் இருப்பார். பிரதான விருந்தாளிக்கு வலது பக்கமும் இடது பக்கமும் அமர்ந்து விருந்து சாப்பிடுபவர்கள், மற்ற விருந்தாளிகளை விட பெரியவர்களாக மதிக்கப்படுவர்.
இயேசு பிரதான விருந்தாளி! இயேசுவுக்கு இடப்பக்கம் யாருக்கு... இயேசுவின் வலது பக்கம் யாருக்கு. அந்த இடத்தில் உட்காரும் தகுதி பெற்ற பெரியவர் யார்? இதில்தான் தகராறு ஆரம்பித்தது.

""நான்தான் வயதில் பெரியவன். எனக்கு தான் வலது பக்கம்,'' என்றார் பெரியவர் பேதுரு.

""நம்ப கூட்டத்திலேயே நான் தான் கடைக்குட்டி ஆகவே நான்தான்,'' என்றான் எல்லோரிலும் இளையவனாகிய யோவான்.

""நம்ப கூட்டத்தின் பணப் பொறுப்பு என்னிடம்... எனக்குத்தான் முதலிடம் என்றான்,'' யூதாஸ்.

இப்படி ஆளுக்கு ஆள் எனக்கு தான் எனக்குத்தான் என்று சொல்ல ஆரம்பித்து ஏதோ அடிதடி நடப்பதுபோல கூச்சல் கேட்டது மேல் அறையில்.
இயேசு மாடிப்படி ஏறி வந்தார். இவர்கள் போட்ட கூச்சலில் இயேசுவுக்கு விஷயம் விளங்கியது. இயேசு மாடி அறைக்குள் நுழைந்தார். கூச்சலும் குழப்பமும் அடங்கியது. நிசப்தம் நிலவியது. யாரும் எதுவுமே பேசவில்லை.

உள் அறைக்குப் போனார். மேலங்கியைக் கழற்றினார். சீடர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இயேசு என்ன செய்கிறார்?

யாருக்குமே தெரியவில்லை! என்ன என்று கேட்க யாருக்கும் துணிவும் வரவில்லை.

அறைக்குள் போன இயேசு திரும்பி வந்தார். ஒரு நீளமான துணி அவர் கையில் இருந்தது. அந்தத் துணியின் ஒரு பகுதியை இடுப்பில் கட்டினார். இன்னொரு பகுதி நீளமாகத் தொங்கியது.

தாலமும் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்றார். இரண்டையும் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு சீடன் கிட்டேயும் போனார். கீழே குனிந்து மண்டியிட்டு தாலத்தைக் கீழே வைத்து, சீடனின் காலை எடுத்து தாலத்தில் வைத்தார். கூஜாவிலிருந்து தண்ணீர் ஊற்றி பாதங்களைக் கழுவினார். இடுப்பில் கட்டியிருந்த துணியினால் பாதங்களைத் துடைத்தார்.

இப்படி ஒவ்வொருவர் பாதங்களையும் இயேசு கழுவினார். சீடர்கள் வாயடைத்து நின்றனர். காற்றுக் கூட அசையாத மவுனம் நிலவியது. இந்த சீடர்கள்தான், யார் பெரியவன் என்று அவர்களுக்குள்ளே சண்டை போட்டுக்கிட்டவுங்க. ஆனால், எல்லாருக்கும் பெரியவர் பிரதான விருந்தினரான இயேசு, எல்லார் பாதங்களையும் கழுவுகிறார்.

இயேசு பேதுருவிடம் வந்தார். இவர்தானே, இயேசுவுக்கு வலதுபக்கம் வேணும்ன்ணு கேட்டவரு!

இயேசு, பேதுருவின் காலைத் தொட்டவுடன், வெடுக்கென்று காலை பின்னால் இழுத்துக் கொண்டார் பேதுரு.

""ஆண்டவரே... குருநாதா அபச்சாரம் அபச்சாரம். ஆண்டவரும் போதகருமாகிய தாங்கள் இந்த அற்பனின் கால்களைத் தொட்டு பாதங்களைக் கழுவலாமா? நான் சம்மதிக்கமாட்டேன்,'' என்று சொன்ன பேதுருவின் குரல் கம்மிவிட்டது.

இயேசு அமைதியாக திரும்பவும் பேதுருவின் பாதங்களைத் தொட்டு, கட்டாயமாக எடுத்து தாலத்தில் வைத்தார்.

""பேதுரு... உன்னை நான் கழுவ வேண்டும். இல்லையென்றால் உனக்கு என்னுடன் பங்கில்லாமல் போய்விடுமே,'' என்றார் இயேசு.

முடிந்தது! எல்லாருடைய கால்களையும் இயேசு கழுவி, துடைத்து முடித்தார். தாலத்தையும் ஜாடியையும் எடுத்துக் கொண்டு உள் அறைக்குப் போனார். இடுப்பில் கட்டியிருந்த நீண்ட துணியை எடுத்துக் காயப் போட்டு விட்டு, அவருடைய அங்கியை எடுத்து அணிந்து கொண்டார். திரும்பி விருந்து நடக்கும் அறைக்கு வந்தார்.
மவுன முகம் இன்னும் கலையவில்லை!

சீடர்கள் பிரமிப்பில் இருந்தனர்.

""என்னை ஆண்டவர் என்கிறீர்கள்... சிலர் போதகர் என்கிறீர்கள். என் செயலைக் கவனித்தீர்களல்லவா?

""ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் பாதங்களைக் கழுவினேனானால்... நீங்கள் ஒருவர் பாதங்களை ஒருவர் கழுவ வேண்டும்! இதற்கான மன நிலை உங்களுக்கு இருக்க வேண்டும்!

""என்னை குருவாக நீங்கள் ஏற்றுக் கொண்டது உண்மையானால் குருவுக்கு மிஞ்சியவனல்ல சீடன்! வேலைக்காரன் எஜமானை விட பெரியவன் ஆகிவிட முடியாதே! இவற்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். என்னை முன் மாதிரியாக வைத்து நீங்களும் பிறருக்கு சேவை செய்து வாழுங்கள்,'' என்றார்.

சீடர்களின் தலை கவிழ்ந்திருந்தது. அவர்கள் உள்ளம் உயர்ந்திருந்தது. சேவை செய்வதில் முதல் இடம் பெற வேண்டும் என்ற உண்மையை சீடர்கள் கற்றுக் கொண்டனர்.

இயேசு தன் வாழ்நாள் எல்லாம் பணிவு, தாழ்மை, அன்பு, நேர்மை இவைகளுக்கே முன்னுரிமை கொடுத்தார். நாமும் நம்மை தாழ்த்தியவர்களாக வாழும் போது உயர்வு நிச்சயம் உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.

Saturday, January 07, 2006

கதை எண் 73 - சோழ நாட்டு வீரச்சிறுவன்

சோழநாட்டை குலோத்துங்கன் என்ற மன்னன் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தார். இவர்தான் "சுங்கம் தவிர்த்த சோழன்' என்று வரலாற்றில் பேசப்படும் மன்னர். சோழ மரபிற்கு ஒரே வாரிசு.

குலோத்துங்கன் ஆட்சியில் கல்வியில் சிறந்த புலவர்கள் அரசனை நாடிப் பொன்னும் பொருளும் பெற்றுச் சென்றனர். அதே போல் வீரர்கள் தங்கள் வீரத்தைக் காட்டிப் பரிசுகள் பல பெற்றனர். நாடெங்கிலும் திருவிழாக்கள் கோலாகலமாய் நடந்தன. மன்னன் செங்கோல் தவறாது ஆட்சி நடத்தி வந்தார்.

அக்காலத்தில் கடோத்கஜன் என்ற மாளவ நாட்டு மல்லன் ஒருவன் நாடெங்கும் போரிட்டு வெற்றிக்கொடி நாட்டி வந்தான். வட இந்தியாவில் பல மல்லர்களை ஜெயித்த அவன் தென்னகத்திற்கும் விஜயம் செய்தான்.

மற்போரில் மட்டுமல்லாமல், வில்வித்தைகளிலும், வாட்போரிலும் வாகை சூடிவந்தான். அவன் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே வீரர்கள் நடுநடுங்கினர்.

அவனை எதிர்த்துப் போரிட்டுத் தோற்ற வீரர்களின் தலைகளை மொட்டை அடித்து அவர்களைத் தன் அடிமைகளாக்கினான். தான் செல்லும் தேசங்கள் தோறும் அவர்களைப் பரிவாரங்களாக அழைத்துச் சென்றான். அதனால் சிறந்த வீரர்களும் கூட அவனை எதிர்க்க அஞ்சினர்.

சோழநாட்டிற்கு வந்த அவன் மன்னன் குலோத்துங்கனைக் கண்டு ""என் சவாலை ஏற்கக் கூடிய வீரர்கள் உம் நாட்டில் உள்ளனரா?'' என்று ஆணவத்துடன் கேட்டான்.

மன்னன் பறை முழங்கி வீரர்களுக்கு இச்செய்தியை அறிவித்தார்.
சோழநாடு வீரத்தில் என்றும் சோடை போனதில்லை. வீரர்கள் பலர் திரண்டனர். விற்போருக்கும், மற்போருக்கும் நாட்கள் குறிக்கப்பட்டன.
அன்று அரண்மனை மைதானத்தில் மன்னர் முன் ஆயிரக் கணக்கானோர் கூடினர். போட்டி ஆரம்பமாயிற்று.

முதல் நாள் வாட்போர்—
பத்துக்கும் மேற்பட்ட சோழநாட்டு வீரர்கள் கடோத்கஜனிடம் வரிசையாகத் தோற்றனர். அவர்களால் பத்து நிமிடம் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை.
தோற்ற வீரர்களை கடோத்கஜனின் ஆட்கள் கூடாரத்திற்கு இழுத்துச் சென்று உடனுக்குடன் மொட்டை போட்டு அவமானப்படுத்தி அடிமையாக்கினர்.

மறுநாள் மற்போர்—
சோழநாட்டின் மானத்தைக் காக்க வீரன் ஒருவன் இன்றாவது வருவானா என்று மன்னன் ஏங்கிக் கொண்டிருந்தார்.

கடல் அலையெனத் திரண்டிருந்த கூட்டத்தில் சிங்கமெனக் கர்ஜித்தான் கடோத்கஜன். அவனது திண்ணிய தோள்களும், விம்மிப்புடைத்த மார்பும், வலிமைபொருந்திய கால்களும், தினவெடுத்த கைகளும், அனல்கக்கும் பார்வையும் அனைவரையும் அச்சமுறச் செய்தன.

கோதாவில் நின்று கொக்கரித்த அவனை எதிர்க்க யாரும் முன்வரவில்லை.

""மன்னா! உம்மிடம் மலைபோல் படையிருந்தும் என்னை எதிர்க்க எந்த மல்லனும் வரவில்லை. பார்த்தீர்களா என பராக்கிரமத்தை?'' என்று இறுமாப்புடன் சொன்னான்.

மன்னன் வெட்கித் தலைகுனிந்தான்.

அதே நேரத்தில்—

""இதோ, நானிருக்கிறேன்,'' என்று கூட்டத்தில் ஒரு குரல் எழுந்தது.
அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.

பத்து வயது சிறுவன் ஒருவன் திறந்த மார்புடன் வெளியே வந்தான்.

""ஏய் சிறுவனே, நீயா எனக்கு எதிரி? மூட்டைப் பூச்சியை நசுக்குவது போல் நசுக்கிவிடுவேன். உயிர் பிழைக்க ஓடிவிடு,'' எனக் கர்ஜித்தான் கடோத்கஜன்.

என்ன ஆச்சரியம்! கண் சிமிட்டும் நேரத்தில் பறந்து சென்ற சிறுவன், மல்லனின் தோள்களில் அமர்ந்து தன் வலக்கையை நீட்டி அவன் கழுத்தில் மின்னலாய் ஒரு வெட்டு வெட்டினான். அவ்வளவுதான்... கடோத்கஜனின் கழுத்து நரம்பொன்று சுளுக்கி வலப்பக்கம் 45 டிகிரி கோணத்தில் முகம் பின்புறம் திரும்பிக் கொண்டது. அவனது விழிகள் சுழன்றன. கற்சிலையாய் அசைவற்று நின்றான்.

தோள்களிலிருந்து கீழே குதித்த சிறுவன் மல்லனின் இடது காலை வாரி அவனை மண்ணைக் கவ்வச் செய்தான்.

கூட்டம் ஆரவாரித்தது. சிறுவனைத் தலை மேல் துõக்கி வைத்துக் கூத்தாடியது.

யாரிந்தச் சிறுவன்?

உடலின் நரம்புகளின் ஓட்டம் அறிந்து இன்ன நரம்பைத் தட்டினால் இப்படி ஆகும் என்று கூறும் வர்ம சாஸ்திரக் கலை நிபுணர் வரகுணபதியின் மகன் கபிலன் தான் அவன்.

கடோத்கஜினின் மனைவியும், மக்களும் மன்னனிடம் மன்னிப்புக் கேட்க, சிறுவன் கபிலன் கழுத்து நரம்பில் மற்றுமொரு தட்டு தட்டிவிட்டு தலைக்கோணலைச் சரியாக்கினான்.

கடோத்கஜன்வெட்கித்தலைகுனிந்தான். அவனுடைய ஆணவம் அன்றோடு அழிந்தது. தான் அடிமைபடுத்தி இருந்த ஆட்களை எல்லாம் அன்றே விடுதலை செய்து அனுப்பி வைத்தான்.