சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Monday, September 19, 2005

கதை எண் 34 - தன்னலமற்ற சேவை

Image hosted by Photobucket.com

முன்னொரு காலத்தில் வேங்கைபுரி என்ற நாட்டை வேந்தன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவர் தமது நாட்டில் இறைவனுக்காக மிகப் பெரிய ஆலயம் ஒன்றை அமைக்க எண்ணினார். இதுவரை எவருமே கட்டியிராதவாறு மிக அழகிய கோயில் கட்டுவதன் மூலம் தமது புகழ் பல்லாண்டு காலம் புகழுடன் விளங்கும் என்பது அவருடைய விருப்பம்.
இதற்காக நாடெங்கிலுமிருந்து கைதேர்ந்த சிற்பிகளை வரவழைத்தார். கோயில் கட்டுவதற்கான கற்களையும் பாறைகளையும் கொண்டு வரச் செய்தார்.

சிற்பிகள் வேலையைத் தொடங்கினர். கல்லுளிகளின் ஓசை கேட்கலாயிற்று. கோயில் வேலை துரிதமாக நடைபெற்று வந்தது. மன்னன் நாள்தோறும் கோயில் வேலையை வந்து பார்வையிடுவார். நாளுக்கு நாள் கோயில் கட்டும் வேலை வளர்ச்சி பெறுவது கண்டு உள்ளம் பூரிப்படைந்தான்.

பல நாட்களுக்குப் பின்னர் ஒரு வழியாகக் கோயில் கட்டி முடிந்தது. அழகிய கோபுரமும் கோபுரத்தில் உள்ள சிற்பங்களும் பார்ப்பவர் உள்ளத்தைப் பரவசமடையச் செய்யும்படியாக விளங்கின. மன்னன் இதனைக் கண்டு பூரிப்படைந்தான். கோயில் பணி பூர்த்தியானதும் மிகப் பெரிய சலவைக்கல் ஒன்றில் கோயிலைக் கட்டிய தனது பெயரைப் பொன்னால் பொறிக்கச் சொன்னான். அதனைக் கோபுர வாசற்படியில் எல்லோர் கண்களிலும் படும்படியாகப் பதித்து வைக்கச் சொன்னான்.

அன்று இரவு அரசன் துõங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு கனவு கண்டான். கனவில் இறைவன் தோன்றினார். மன்னன் கட்டிய கோயிலும் தோன்றியது. அதில் மன்னன் பெயர் பொறிக்கப் பெற்ற சலவைக் கல்லும் இருந்தது.

இறைவன் நேரே மன்னன் பெயர் பொறிக்கப்பட்டிருந்த சலவைக் கல்லின் அருகே சென்றார். மன்னன் பெயரை அழித்துவிட்டு வேறு யாரோ ஒரு பெண்மணியின் பெயரை எழுதிவிட்டுச் சென்றார்.

மன்னன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். நேரே கோயிலுக்குச் சென்றான். சலவைக் கல்லைப் பார்த்தான். அவனுக்குத் துõக்கிவாரிப் போட்டது. ஆம், அவன் பெயர் அழிக்கப்பட்டு யாரோ ஊர் பேர் தெரியாத ஒரு பெண்மணியின் பெயர் அதில் பொறிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட அரசனுக்கு ஒருபுறம் அவமானமாகவும் மறுபுறம் வேதனையாகவும் இருந்தது. "இவ்வளவு பாடுபட்டுப் பெரும் பொருள் செலவு செய்து இந்தக் கோயிலைக் கட்டினேன். முடிவில் என்னுடைய பெயர் பொறிக்கப்படாமல் வேறு யாரோ ஒரு பெண்மணியின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறதே!' என்று வேதனையடைந்தான். காவலர்களை அனுப்பி அந்தச் சலவைக் கல்லில் பெயர் பொறித்துள்ள பெண்மணியை எங்கிருந்தாலும் தேடி அழைத்து வருமாறு கட்டளையிட்டான்.

காவலர்களும் நகர் பூராவும் சுற்றித் திரிந்து கடைசியில் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள ஒரு குடிசையில் தன்னந்தனியாக வசித்து வந்த ஒரு மூதாட்டியை அழைத்து வந்தனர். அவள் பெயர் தான் அந்தச் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டிருந்தது.

அந்த மூதாட்டியைப் பார்த்த அரசன், ""அந்தச் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர் உங்களுடையதுதானா?'' என்று கேட்டான்.

கிழவி கண்களை நன்கு துடைத்துக் கொண்டு சலவைக்கல்லைப் பார்த்தாள். பிறகு, ""ஆம் அரசே அது என்னுடைய பெயர் தான்... தவறுதலாகப் பொறிக்கப் பட்டுவிட்டது போல் இருக்கிறது!''

""இல்லை அம்மா, என் பெயர் தான் முதலில் அந்தச் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டது. இறைவனே வந்து என் பெயரை அழித்துவிட்டுத் தங்கள் பெயரை இதில் பொறித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அதன் காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை,'' என்றான் அரசன்.

""நான் இந்தப்பக்கம் வந்தது கூட இல்லை... அப்படியிருக்க இதில் என் பெயர் ஏன் பொறிக்கப்பட்டிருக்கிறது?'' என்று வியப்புடன் கேட்டாள் கிழவி.

""தாயே, இந்தக் கோயில் பணியில் நீங்கள் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இறைவன் தங்கள் பெயரை இதில் பொறித்திருக்கமாட்டார். தாங்கள் செய்த தொண்டு என்னவென்று கூறுங்கள்!'' என்றான் அரசன்.

நெடுநேரம் யோசனை செய்து பார்த்த கிழவி, ""மன்னா! இந்தக் கோயில் பணிக்காக நான் ஒன்றும் செய்யவில்லை ஆனால், ஒன்று மட்டும் செய்திருக்கிறேன். இந்தக் கோயில் கட்டுவதற்கான கற்கள் மரங்கள் முதலியவற்றை ஏற்றிவரும் வண்டிகள் நாள்தோறும் என் வீட்டுப் பக்கமாகத் தான் வரும். அந்த சமயத்தில் வண்டியோட்டிகளுக்குத் தாகந்தீரத் தண்ணீர் கொடுப்பேன்; மோர் கொடுப்பேன். குதிரைகளுக்குச் சிறிது புற்களை கொடுத்து தண்ணீர் காட்டுவேன். அவ்வளவுதான் நான் செய்தது,'' என்றாள் கிழவி.

""தாயே! நான் வெறும் புகழுக்காக இந்தக் கோயிலைக் கட்டினேன். தாங்களோ புகழை விரும்பாமல் தொண்டு செய்தீர்கள். எனவே, தான் என் பெயரை அழித்துவிட்டு இறைவன் தங்கள் பெயரைப் பொறித்துள்ளார். தன்னலமற்ற தங்கள் தொண்டினை இந்தக் கோயிலில் உள்ள சலவைக்கல் என்றென்றும் எடுத்துக் காட்டும். வாழ்க தங்கள் புகழ்!'' என்று கூறிய மன்னன், அந்தக் கிழவிக்கு நிறைய பொருள் பரிசாகக் கொடுத்து அனுப்பினான்.

6 மறுமொழிகள்:

At 11:21 PM, September 19, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

படித்தவர்கள் கருத்துக்கள் கூறவும்.

(சோதனை பதிவு)

 
At 5:14 AM, September 20, 2005, Blogger யாத்ரீகன் மொழிந்தது...

பகட்டாக கட்சி ஆரம்பிப்பவர்களும் படிக்க வேண்டிய கதை பரஞ்சோதி.. ;-)

 
At 7:19 AM, September 20, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

சரியாக சொன்னீங்க செந்தில். கட்சி மட்டுமல்லாது, வாழ்க்கையில் கூட நிறைய ஆடம்பரம், பகட்டாக வாழ்ந்து, அனைத்தும் இழந்து, அடுத்த தலைமுறை வாடி, வதங்க வைக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்கு நன்றி செந்தில்.

 
At 3:29 PM, September 23, 2005, Blogger Ramya Nageswaran மொழிந்தது...

என் குழந்தைகளுக்கு தினமும் சொல்ல கதைகளின் களஞ்சியமே இருக்கிறதே!! மிக்க நன்றி பரஞ்சோதி.

 
At 7:26 AM, September 24, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

மிக்க நன்றி சகோதரி,

அப்போ உங்க குழந்தைகள், உங்ககிட்ட "அம்மா, அம்மா, பரஞ்சோதி மாமா சிங்கப்பூர் வருவாங்களா?, வந்தால் கதை சொல்லுவாங்களா?" என்று கேட்டிருப்பாங்களே!"

சகோதரி நான் சொல்லித் தெரியவேண்டியது இல்லை, இருந்தாலும், வெளிநாடுகளில் வசிக்கும் பெற்றோர் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிப்பது கிடையாது, நீங்க நிறைய நேரம் அவர்களோடு இருங்கள், பேசுங்கள், நல்ல நண்பியாக இருங்கள், குழந்தைகள் கண்டிப்பாக சாதனையாளர்களாக வருவார்கள்.

அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

 
At 7:50 AM, September 24, 2005, Blogger Ramya Nageswaran மொழிந்தது...

அன்பாக சகோதரி என்று அழைத்ததில் மிக்க மகிழ்ச்சி.. நேற்றிரவே இந்தக் கதையை சொல்லிவிட்டேன்..உங்க வலைத்தளத்தையும் காண்பிக்கிறேன். அப்போ நிச்சயமா நீங்க சொன்ன மாதிரி கேப்பாங்க!!

நீங்க நினைப்பது சிலருக்கு வேண்டுமானால் பொறுந்தலாம் சகோதரரே... ஆனா பொதுவாக எல்லா நாடுகளிலும் பெற்றோர்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட பாடுபடுகிறார்கள் என்பது தான் நான் பார்த்த வரை உண்மை.

வாழ்த்துக்களுக்கு நன்றி.

 

Post a Comment

<<=முகப்பு