சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Saturday, October 15, 2005

கதை எண் 47 - ஜனாதிபதி அப்துல்கலாம்

குழந்தைகளா, இன்று தன் 75வது பிறந்த நாள் கொண்டாடும் நம்ம ஜனாதிபதி அப்துல் கலாம் அய்யா அவர்களுக்கு நம்முடைய வாழ்த்துகளை தெரிவிக்கலாமா.

நேரு மாமா குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மாமா, அன்பான மாமா. நம்ம ஜனாதிபதி மாமாவும் குழந்தைகளுக்கு மிக மிக பிடித்தவர், அவருக்கும் குழந்தைகள் மிகவும் பிடிக்கும். பள்ளி மாணவர்களுக்கு நல்ல நல்ல அறிவுரைகளையும், நம்பிக்கையையும், சாதனை படைக்க வழியும் காட்டுகிறார்.

அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை பார்க்கலாமா?

ராமேஸ்வரம் தீவில் ஜைனுல்லாபுதீன், ஆஷியம்மா என்போருக்கு அருமை புதல்வனாக 1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ந்தேதி அப்துல்கலாம் அவர்கள் பிறந்தார்கள்.

அவரது தந்தையார் அனைவராலும் விரும்பப்பட்டவர், தினமும் பிரார்த்தனை செய்து, நோயாளிகளை குணப்படுத்துவார்.

அவரது குடும்ப நண்பராக இருந்தவர் பஷி லட்சுமண சாஸ்திரி அவர்கள். அவரது புதல்வர் பெயர் ராம்நாத சாஸ்திரி. அப்பாவைப் போலவே அப்துல் கலாம் ராமநாத சாஸ்திரிக்கு நல்ல நண்பர். பள்ளியில் இருவரும் பக்கத்தில் தான் அமர்ந்திருப்பார்கள். சாஸ்திரி நெற்றியில் விபூதியுடன் குடுமி வைத்திருப்பார், அப்துல் கலாம் தலையில் குல்லா வைத்திருப்பார்.

ஒரு நாள் அங்கே வந்த புதிய ஆசிரியர், எப்படி ஒரு இந்துவும், முஸ்லீமும் ஒன்றாக இருக்கலாம் என்று நினைத்து, அப்துல் கலாமை கடைசி பெஞ்சில் உட்கார சொல்லிவிட்டார்.

அப்துல் கலாமும் ஒன்றும் சொல்லாமல் கடைசி பெஞ்சில் போய் அமர்ந்துக் கொண்டார், ராமநாத சாஸ்திரிக்கு அழுமை அழுமையாக வந்தது.

இருவரும் மாலையில் வீட்டிற்கு சென்றதும் தங்கள் அப்பாக்களிடம் சொல்ல, உடனே அவர்கள் இருவரும் புதிய ஆசிரியரை வரவழைத்து, "சின்ன வயது பிள்ளைகள் மனதில் இப்படி பாகுபாடு எல்லாம் ஏற்ப்படுத்தக்கூடாது" என்று அறிவுரை சொல்லி, யார் தடுத்தாலும் எங்க புள்ளைகள் ஒரே பெஞ்சில் தான் அமர்வார்கள். இனிமேல் ஏதாவது இது மாதிரி செய்தால், வேலையே போய் விடும் என்று சொன்னப் பின்பு புதிய ஆசிரியர் மனம் திருந்தினாராம்.

நான்காம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள் அப்துல் கலாம் ஏதோ தெரியாத்தனமாக வேறு வகுப்பில் நுழைய, அங்கே பாடம் நடத்திக் கொண்டிருந்த ராம கிருஷ்ண ஐயர் என்ற வாத்தியார், கடும் கோபம் கொண்டு, அப்துல் கலாமின் கழுத்தை பிடித்து குனிய வைத்து, பிரம்ப்பால் அடித்து விட்டார். அப்துல் கலாமோ அழுதுக் கொண்டு, மன்னிப்பு கேட்டு வந்து விட்டார்.

கொஞ்ச நாளிலேயே அப்துல் கலாம் நன்றாக படித்து கணக்கு பாடத்தில் 100க்கு 100 வாங்கினார். அடுத்த் நாள் அசெம்பிளியில் அனைத்து மாணவர்கள் முன்னாலிலும் அப்துல் கலாமைப் பற்றி சொல்லி, அடி கொடுத்ததையும் சொல்லி, இன்றோ 100க்கு 100 மதிப்பெண் வாங்கியிருக்கிறார், எதிர்காலத்தில் மிகப் பெரிய ஆளாக வருவார் , நாட்டுக்கு பெருமை சேர்ப்பார் என்று பாராட்டினார்.

அடி கொடுத்து, திட்டியவரையே பாராட்ட வைத்த அப்துல் கலாமின் முயற்சியும், நம்பிக்கையும் மகத்தானது.

குழந்தைகளா! நாமும் தேர்வில் தோல்வி கண்டாலோ, தெரியாமலோ அல்லது தெரிந்தோ செய்த தவறான நடத்தையால் தண்டிக்கப்பட்டாலோ, நாம் அதனை உடனே சரி செய்யப் பாடுபட வேண்டும், மற்றவர்கள் பாராட்டும் வகையில் நடந்துக் கொள்ள வேண்டும். அப்போ தான் வாழ்க்கையில் சாதிக்க முடியும்.

6 மறுமொழிகள்:

At 3:12 AM, October 16, 2005, Anonymous Anonymous மொழிந்தது...

என்றும் எந்தன் இன்பத் தமிழினமே!
எழுச்சி கொண்டே நீபுறப் படுவாய்!
இன்றுவரை ஈழத்தில் எம்மினம் ஆற்றுகின்ற
ஏற்றமிகு புரட்சிதனை எண்ணிப் பார்த்திடுவாய்!
தென்றலாள் தமிழன்னை தரணியிலே தலைநிமிர
தேன்தமிழ் மக்கள் திக்கெலாம் கூடிநின்று
ஒன்றிணைந்து ஒரேகுரலில் உறுதிமொழி எடுத்தே
உலகே வியந்திட அலையெனத் திரண்டார்!
காலையிற் கண்விழித்துக் கைத்தொலை பேசியில்
கடல்கடந்த விடயங்கள் கலந்துரை யாடியே
நாலுவேளை நாவினுக்கு நல்சுவை விருந்தொடு
நளினமா யுடையணிந்து தளர்நடை பயின்று
சாலையோரம் மகிழுந்தில் சற்றே பவனிவந்து
சந்திகளிற் கூடிநின்று தர்க்கம் புரியும்நாம்
காலநேரம் கருதியெம் கவனத்தைத் திசைதிருப்பிக்
கண்மணியாம் திருநாட்டில் செலுத்த விழைந்திடுவோம்!
ஏடுகளைப் புரட்டிப்பார் எழில்மிகு காட்சிகள்
இணையிலா எம்மினத்தின் எழில்மிகு தோற்றங்கள்
கூடியே திரண்டுளார் குவலயத்தில் யார்க்குமிலா
குணம்படைத் தோரிவர் குன்றேறி நின்றோர்பார்!
பேடொன்று முட்டைதனை இட்டவுடன் தானங்கு
பெரிதாகக் குரலிட்டு கூவுதல் போல்நாமும்
சாடையாய்ச் சிறுதொகை தாமிங்கு வழங்கிச்
சாதித்தோம் என்றே சாற்றுதல்தான் நன்றோ?
தமிழன்னை சிறைமீட்கத் தன்னுயிர் நீத்த
தன்னிகரில் திலீபனின் தூய திங்களிது!
உமிழ்நீர் வற்றியே உலர்ந்து உலகறிய
உயிர்நீத்த அளப்பரிய கொடைதனை அறிவாயே!
தமக்கென வாழாத் தமிழுக்காய் நாட்டிற்காய்த்
தம்முயி ரைத்தற் கொடையாய்த் தானீந்தும்
எமக்காய் இவ்வுலக இன்பங்கள் துறந்த
எண்ணிலா மாவீரர் தீரர்கள் எத்தனைபேர்?
பொங்குதமிழ் நிகழ்ச்சிதனிற் பூங்காவிற் கூடினோம்
பொய்க்கவில்லை தம்பிபார்த் தீபன் புகன்றவுரை!
எங்குமுள்ள தமிழரெலாம் ஒன்றிணைந்து கூவுகின்றாh
எதிரியின் முகத்திரை அழித்திட முனைகின்றார்!
கங்குலது கழிந்திட வேண்டுமெனச் சீறியே
கடல்கடந்த நாட்டினிலும் நம்தமிழன் கூடுகின்றான்
சங்கமித்துச் சாடுகின்றான் சிங்களத்தின் சீரற்ற
செயல்களைத் தேசங்கள் தாமறிந் திடவே!
செந்தமிழர் நாட்டினிலே சேனையென ஒன்றிணைந்தார்
சேதிதா னறிவாயோ துணைப்படை யெழுச்சி!
பைந்தமிழர் பயில்கின்றார் பகைதனை விரட்டவே
பாசறை புகுந்திடப் பண்புசால் பெண்களும்
வந்தோரை வரவேற்கும் வண்டமிழ் ஈழத்தில்
வளமான மண்ணதிலே வானம திர்ந்திட
முந்தி விழுந்து முதியோரும் இளையோரும்
மூச்சாய்ப் பயிற்சிதனில் முனைந்து நிற்கின்றார்!
யாழ்நகரில் நேற்றிருந்த பொங்குதமிழ் அறிவாயா?
யாப்புறுத்தி முழங்கினார்! யாதுமே செய்யிலாக்
காழ்ப்புடன் சிங்களம் கலங்குதல் காண்பாயவர்
கைகட்டி வாய்பொத்தும் காலம் தூரமில்லை!.
சூழ்ச்சிதான் புரிந்தார் சூதினாலவர் தொலைந்தார்
சூரியத் தலைவனின் சுடரினிற் சாய்வார்!
தாழ்ச்சியுமவர்க் கேயன்றித் தமிழனுக் கல்லவே
தங்கத் தமிழன்னை தவவலிமை அறிவாயே!
ஆதலின் புறப்படுவாய் அன்புடைத் தமிழா!
அன்னிய நாடுகளின் அறியாமை நீக்கிடவே
ஈதலில் ஒப்பிலா எம்தலைவன் உள்ளவரை
எம்மினம் அஞ்சாது இம்மியும் அசையாது
மோதலில், வென்றவர்நாம் மூத்த இனமெனவும்
முன்மொழிந்து நிற்போம். முட்டுக்கள் நீக்கெனச்
சாதலிலும் இறுதியாய்த் தமிழீழமே மூச்செனச்
சாற்றியே அவர்பால் சத்தியம் செய்வோம்!
ஐப்பசித் திங்களிது அளவான குளிர்காலம்
ஐ.நா சபைக்கோர் அன்பான வேண்டுகோள்
கைப்பட எழுதிநாம் கடுகியே அனுப்புவோம்!
காரணம் தடைக் கெதுவெனக் கேட்போம்!
எப்பகையும் எமக்கில்லை எவருக்கும் தீயரில்லை
உட்பகை தாம்புரிந்த உண்மைதனைப் புரியாது
தப்பாக எம்மீது சாற்றிடும் பொய்யுரையைத்
தகர்த்திடக் கூடுவோம் பூங்காவிற் பேசுவோம்!
பி.இரயாகரன்

 
At 3:34 AM, October 16, 2005, Blogger அன்பு மொழிந்தது...

அருமையா விஷயத்தைப் பகிர்ந்துகொண்டீர்கள், மிக்க நன்றி.

 
At 5:36 PM, October 16, 2005, Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady மொழிந்தது...

பரஞ்சோதி,
அப்துல் கலாமின் "அக்னிச் சிறகுகள்" (Wings of Fire) புத்தகத்தினை ஆங்கிலத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த தடவை இந்தியப் பயணத்தின் போது வாங்கி வந்து விமானப் பயணத்தின் போது படித்துக் கொண்டு வந்தேன். ஒவ்வொருவரும் வாங்கி படிக்க வேண்டிய புத்தகத்தில் முக்கியமான புத்தகம்.
அவருடைய பிறந்த நாளின் போது சரியான கதையை பிரசுரித்தமைக்கு நன்றி.

 
At 12:02 AM, October 19, 2005, Anonymous Anonymous மொழிந்தது...

அருமை. நம்பிக்கையூட்டும் வழிகாட்டி அவர். நன்றி

 
At 1:29 AM, October 19, 2005, Blogger Unknown மொழிந்தது...

அப்துல்கலாம் பற்றிய கதைக்கு நன்றி பரஞ்சோதி

 
At 11:05 PM, October 19, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

நன்றி பி.இரயாகரன், அன்பு, கங்கா, கீதா மற்றும் கல்வெட்டு அவர்களே!

 

Post a Comment

<<=முகப்பு