சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Tuesday, February 21, 2006

கதை எண் 83 - கூடல் குமரனும், கொடிய வேதாளமும்

கூடல் மாநகரத்தில் குமரன் என்ற இளைஞர் இருந்தார், அவரது பெற்றோருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை, அவரது தாயார் தினமும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு என்று தனக்கு ஒரு குழந்தை வரம் கொடுக்குமாறு வேண்டிக் கொள்வார். இவ்வாறாக நீண்ட நாட்களாக வேண்டியும் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை, ஒரு நாள் அவரது தாயார் அம்மனை வேண்டியும் குழந்தை கிடைக்கவில்லையே என்ற வெறுப்பில் வேண்டிக் கொண்டிருக்கும் போது “தாயே! குட்டையோ, நெட்டையோ எனக்கு ஒரு குழந்தையை கொடு தாயே!, எங்களுக்கும் வயதாகி வருகிறது, கருணை காட்டு தாயே!” வேண்ட, அதுவரை அமைதியாக இருந்த அம்மன், அப்படியே ஆகட்டும் என்று வரம் கொடுத்து விட்டார்.

அடுத்த ஆண்டே அழகான ஆண் குழந்தை பிறந்தது, அக்குழந்தைக்கு அவர்கள் குமரன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். குமரன் மற்ற குழந்தைகளை விட உயரம் ரொம்ப கம்மியாக இருந்தார், இருந்தாலும் பெற்றோர் அன்பும், பண்பும் காட்டி வளர்த்தார்கள். குமரன் படிப்பிலும், விளையாட்டிலும், குறும்புத்தனத்திலும் சிறந்து விளங்கினார், எல்லோரும் உலகமகா சேட்டைக்காரன் என்று அழைக்கும் அளவுக்கு பெயர் எடுத்தார்.

கூடல் மாநகரத்தில் ஆட்சி செய்து வந்த மன்னரும் ரொம்பவும் நல்லவர், மக்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த போது ஒரு நாள் வெளிதேசத்திலிருந்து பறந்து வந்தது ஒரு வேதாளம்.

வேதாளம் என்றால் அது டிராகன் மாதிரியே இருந்தது, 50 யானைகளை கொண்டு செய்த மாதிரியான உடம்பு, பறக்க இறக்கைகள், நீண்ட வால், கால் நகங்கள் பெரியதாக, பெரிய யானை தூக்கிச் செல்லும் அளவுக்கு பலம் படைத்ததாக இருந்தது. வாயைத் திறந்தால் நெருப்பை கக்கும் தன்மை கொண்டதாக இருந்தது.

அவ்வாறு வந்த வேதாளமானது முதலில் கூடல் மாநகரத்தை ஒட்டிய கிராமங்களின் வயல்வெளிகளையும், தோப்புகளையும் தன் நெருப்பால் பொசுக்கியது, மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகளை மொத்தம் மொத்தமாக தூக்கி சாப்பிட்டது.

மொத்த மாநகரமே நடுங்கியது, பாதிக்கப்பட்ட மக்கள் அரசரை கண்டு கதறி அழுதார்கள், தங்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்கள். எதற்கும் அஞ்சாத அரசர், உடனே தன்னுடைய சேனாதிபதியை அழைத்து, உடனே ஆயிரம் வீரர்களை தயார் செய்து, அந்த வேதாளத்தை அழித்துவிட்டு வரச் சொன்னார். ஆயிரம் பேரும் மலையடிவாரத்தில் தங்கியிருந்த வேதாளத்தை கொன்று போட செல்லும் வழியிலேயே வேதாளத்தால் தாக்கப்பட்டு மலையின் மேல் சிறைவைக்கப்பட்டார்கள். மன்னரும் பெருங்கவலை அடைந்தார்.

உடனே மன்னர் உத்தரவின் படி ஊர் எங்கும் தண்டோரா போட்டு செய்தி சொல்லப்பட்டது, அதாவது “யார் அந்த கொடிய வேதாளத்தை உயிரோடோ அல்லது பிணமாகவோ கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு இராஜ்யத்தில் பாதியையும், தன் ஒரே மகளான இளவரசியையும் திருமணம் செய்து கொடுப்பதாக சொன்னார்”.

இச்செய்தியை கேட்டதும் வீரத்தீரம் மிக்க இளைஞர் பட்டாளம் கிளம்பியது, ஆனால் அதற்கு முன்பே கொடிய வேதாளம் அரசரின் அரண்மனைக்கு மேல் பறந்து வந்து அமர்ந்தது, உடனே ஊரே பயந்து நடுங்கியது, அரசரும் அசராமல் வெளியே வந்து அந்த கொடிய வேதாளத்த்துடன் மோத வந்தார்.

அப்போ அந்த வேதாளம் அனைவரையும் பார்த்து ஒரு பாட்டு பாடியது,

“வந்தேண்டா வேதாளம்
வரவேற்க தைரியமுண்டா
என்னை வெல்ல வழியுண்டு
வெல்லுவதும் எளிதில்லை
ஆயிரம் வாட்கள் கொண்டவனே
என்னை வெல்ல முடியும்,
இல்லாத பாலமேறி
என்னருகே வரமுடியும்
செய்யாத கோப்பையிலே
கொடுக்க வேண்டும் அமுதமே
அவ்வாறு செய்தால்
நானாவேன் உன் நண்பனாய்”


என்று உரக்கப்பாடி விட்டு பறந்து விட்டது.

வேதாளம் பாடிய பாட்டை அர்த்தம் தெரிந்துக் கொள்ள அனைவரும் முயன்றார்கள். அரசவை புலவர்களும் பலவகை அர்த்தங்கள் சொல்லி அரசருக்கு தலைவலியே வந்து விட்டது, ஆயிரம் வாட்களை ஒருவனால் எப்படி தூக்கிக் கொண்டு அத்தனை பெரிய வேதாளத்தை வெல்ல முடியும். இல்லாத பாலமேறுவதும், செய்யாத கோப்பை, அதிலும் அமுதம், ஒன்றுமே புரியாமல் விழித்தார்கள்.

நாடும், இளவரசியும் கிடைப்பார் என்ற குருட்டு தைரியத்தில் வேதாளம் தங்கியிருந்த மலையடிவாரத்தை நோக்கி சென்ற இளைஞர் பட்டாளம் வேதாளத்துடன் மோதி தோற்று அங்கே அடிமையாகி கிடந்தார்கள்.

அரசருக்கோ இனியும் வேதாளத்தை வெல்ல யாரும் வரமாட்டார்கள், இனிமேல் தானே முயற்சி செய்யவேண்டியது தான் என்ற நிலைக்கு வந்த போது, அரண்மனைக்கு நல்ல குட்டி குமரன் சென்றார்.

அரசரை பார்த்து “அரசே! நான் அந்த கொடிய வேதாளத்தை கொல்லப் போகிறேன், அதற்கு முன்பு எனக்கு உங்க ஆசிர்வாதம் தேவை” என்றார்.

அத்தனை வேதனையிலும் அவையில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்தார்கள், அவர்கள் குமரனின் சிறிய உருவத்தை பார்த்து கேலியாக சிரித்தார்கள், ஆனால் அரசரும் இளவரசியும் சிரிக்கவில்லை.

குமரனின் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் பார்த்து வியந்தார்கள், இத்தகைய தன்மை கொண்டவர்களால் தான் செய்யக்கரிய செயல்களை செய்ய முடியும் என்று நம்பினார்கள். அரசரும் தன் ஆசனத்தை விட்டு கீழே இறங்கி வந்து குமரனை கட்டிப்பிடித்து தன்னுடைய வாளை குமரனிடம் கொடுத்தார். இளவரசியும் ஏதாவது கொடுக்க நினைத்து திடிரென்று தன்னுடைய தலைமுடியில் ஒன்றை பிடுங்கி கொடுத்தார், குமரன் வாளையும் இளவரசி அன்பாக கொடுத்த தலைமுடியையும் பத்திரமாக வைத்துக் கொண்டார்.

தைரியமாக வீட்டுக்கு சென்று அன்னையிடமும் அப்பாவிடமும் ஆசிர்வாதம் வாங்கினார், பெற்றோரும் தங்கள் பிள்ளையால் கண்டிப்பாக சாதிக்கமுடியும் என்று நம்பிக்கை ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைத்தார்கள்.

குமரன் தன்னுடைய குட்டிக்குதிரையில் ஏறி மலையடிவாரம் போகத் தொடங்கினார், போகிற வழியில் ஒரு மரத்தடியில் தங்கி இளைப்பாரலாம் என்று நினைத்து குதிரையை அங்கே நிறுத்தினார்.

அங்கே ஒரு பெரிய தேன்கூடு தரையில் கிடந்தது, தேனீக்கள் எல்லாம் அங்கே இங்கே என்று பறந்துக் கொண்டிருந்தது, அதைக் கண்டு இரக்கப்பட்ட குமரன், அந்த தேன்கூட்டை கையில் எடுத்து மரத்தின் மேல் வைத்தார், உடனே தேன் கூட்டிலிருந்து வெளியே வந்த இராணித்தேனி குமரனிடம் பேசியது “இரக்கக்குணம் படைத்த இளைஞரே! நாங்கள் நீண்ட நாட்களாக இங்கே தரையில் தான் கிடைக்கிறோம், ஆனாலும் யாருமே எங்களை மரத்தின் மேல் வைக்க நினைக்கவில்லை, அதற்கு பதில் துன்புறுத்தவே செய்தார்கள், பல வீரர்கள் எங்களைத் தாண்டி சென்று தான் வேதாளத்திடம் சரணடைந்து விட்டார்கள். ஆனால் நீங்களோ அவ்வாறாக இல்லை, எனவே உங்களுக்கு உதவ நாங்களும் தயார், எனவே எங்களை உங்களுடனே கொண்டு செல்லுங்க” என்றது.

குமரனும் மகிழ்ச்சியோடு தேன் கூட்டை தன் பையில் வைத்துக் கொண்டார். குமரன் வருவதை அறிந்த வேதாளம் குமரனின் உருவத்தை கண்டு கேலியாக சிரித்தது, என் கால் நகம் உயரம் கூட நீ இல்லை, எப்படி என்னை வெல்வாய் என்று கூறியது. குமரனும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது, அம்மனின் அருளும் இருக்கிறது, என்று கூறி சண்டைக்கு போனார். அப்போ ராணீத்தேனி “குமரன், ஆயிரம் வாட்கள் கொண்டு வெல்ல வேண்டும் என்றால் என்னிடம் இருக்கும் ஆயிரம் வீரத்தேனிகளை கொடுக்கிறேன், அவை உங்க வாள் மீது அமர்ந்துக் கொள்வார்கள், நீங்க வாளை தூக்கி வேதாளத்தின் முகத்தை பார்த்து வீசுங்க, மீதியை என் வீரர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றது.

குமரனும் தன் வாளை உயர்த்த, தேன் கூட்டிலிருந்து ஆயிரம் தேனீக்கள் வாளை சுற்றி அமர்ந்தது, உடனே குமரனும் தன் வாளை தூக்கி வேதாளத்தை நோக்கி வீசினார், உடனே ஆயிரம் தேனீக்களும் அந்த வாளை தூக்கிக் கொண்டு வேதாளத்தின் முகத்தை நோக்கி கொண்டு சென்று, அவை அனைத்தும் தனித்தனியாக பிரிந்து வேதாளத்தின் கண்களை குறிவைத்து கொட்டியது, ஆயிரம் தேனீக்கள் கொட்டியதால் கண் பார்வை தெரியாமல், கண்கள் வீங்கி, வலியில் வேதாளம் துடிதுடித்தது.

இனியும் குமரனும் மோதுவது சரியில்லை என்று பயந்த வேதாளம் தன் இருப்பிடத்தை நோக்கி பறந்து சென்று விட்டது. வேதாளத்தை கொட்டிய ஆயிரம் தேனிக்களும் வீரமரணம் அடைந்தது, அது குமரனுக்கு கஷ்டமாக இருந்தது, கண்களில் கண்ணீர் வந்துவிட்டது, உடனே ராணித்தேனி “குமரன், தேனீக்கள் வாழ்க்கையில் தினம் தினம் எங்களுக்கு வீரமரணம் உண்டு, கவலைப்பட வேண்டாம், அடுத்த காரியத்தை பற்றி சிந்திப்போம்” என்றது.

வேதாளம் இருந்த மலை உச்சிக்கும், குமரன் இருந்த இடத்திற்கும் இடையே பெரிய பாதாளம் இருந்தது, அதை எப்படி தாண்டுவது என்று தெரியாமல் குமரன் விழிக்க, ராணித்தேனீ “நண்பரே! உங்களிடம் நூல், கயிறு போன்று ஏதாவது இருக்கிறதா என்று கேட்டது”, உடனே குமரனுக்கு இளவரசி கொடுத்த தலைமுடி நினைவுக்கு வந்து, அதை எடுத்து ராணித்தேனியிடம் கொடுத்தார்.

ராணித்தேனீ தன் தளபதி தேனியை அழைத்து, இந்த தலைமுடியை மலை உச்சியில் கட்டி வருமாறு சொல்லி, மறுமுனையை குமரனை பிடிக்கச் சொன்னது, என்ன ஆச்சரியம், தளபதி தேனீ பறக்க பறக்க இளவரசியின் தலைமுடியானது நீண்டுக் கொண்டே சென்றது, இறுதியில் மலை உச்சியில் முடிச்சி போட்டு வர, குமரன் மறுமுனையை தன் குதிரையின் மீது கட்டி, பின்னர் அந்த தலைமுடியை பிடித்து தொங்கிக் கொண்டு, மலை உச்சியை அடைந்தார்.

ஒருவழியாக மலை உச்சியில் வேதாளம் இருந்த இடத்தை தேடி போன போது, வேதாளத்தின் கண்கள் எல்லாம் வீங்கி, கடுமையான வலிகள் துடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த குமரனுக்கு கோபத்திற்கு பதில் வேதாளத்தின் மேல் இரக்கம் தோன்றியது. பாவம் வேதாளம் கெட்டக் குணம் என்றாலும் வலியால் துடிப்பதை பார்க்க மனசு இல்லாமல் எப்படி உதவுவது என்று யோசித்தார்.

உடனே ராணித்தேனீ, வேதாளத்தின் வலி நீங்கி மீண்டும் கண் பார்வை வர ஒரே ஒரு வழியுண்டு, நாங்க சேமித்து வைத்திருக்கும் தேனை குடித்தால் கண்பார்வை வரும்” என்றது.

உடனே குமரன் தேனை பிடித்து கொடுக்க பாத்திரம் போல் ஒன்றும் இல்லையே என்று யோசித்தார், தூரத்தில் வேதாளம் சாப்பிட்டு போட்ட பெரிய யானையின் மண்டையோடு கிடந்தது, அதை எடுத்து வந்து ராணித்தேனி கொடுத்த தேனை பிடித்து, வேதாளத்தின் மீது ஏறி, அதன் வாயில் தேனை ஊற்றினார்.

உடனே வேதாளத்தின் வலி நீங்கி கண் பார்வை வந்தது, நெருப்பாக இருந்த அதன் கண்கள் கருணை கொண்டதாக மாறியது.

குமரனை நோக்கி “அய்யா! நீங்க நம்பிக்கையுள்ள மாவீரர் மட்டுமல்லாது மிக்க இரக்கம் கொண்டவர், இனிமேல் நான் உங்கள் அடிமை. தேவலோகத்தை சேர்ந்த நான் முன்பு ஒரு காலத்தில் தவம் செய்த முனிவரை தொந்தரவு செய்ததால் சாபமிட்டு விட்டார், அதன் பரிகாரமாக உங்கள் வீரச்செயலாலும் அன்பாலும் என் சாபம் நீங்கும் என்றார். இன்று எனக்கு சாபவிமோசனம் கிடைத்து விட்டது, உங்களுக்கு நான் உதவப் போகிறேன்” என்று கூறியது.

கொஞ்ச நேரத்தில் அழகிய தேவதூதனாக மாறியது வேதாளம், அதே நேரம் குமரனும் அழகிய தோற்றத்துடன் ஆறடி உயரம் கொண்ட மாவீரராக மாறிவிட்டார். தேவதூதன் நிறைய பொக்கிஷங்களையும், தன்னால் உயிழந்த அனைத்து உயிர்களையும், ஆயிரம் தேனிக்களையும், சிறைபிடித்த வீரர்களையும் திருப்பி கொடுத்தார். உதவி தேவைப்படும் போது வந்து உதவுவதாக உறுதி கூறி விடைபெற்றார்.

குமரன் அனைவரோடு வெற்றிமகனாக கூடல் நகரம் திரும்பினார், ஊரே விழாக்கோலம் பூண்டது. அரசரும் இளவரசியும் குமரனை வரவேற்க நகரின் எல்லைக்கே வந்தார்கள். குமரனின் புதிய தோற்றத்தை கண்டு அவரது பெற்றோரும் மகிழ்ந்தார்கள், மக்கள் அனைவரும் வாழ்த்தி வரவேற்றார்கள்.

குமரனுக்கும் இளவரசிக்கும் திருமணம் ஆகி ஒரு குட்டி இளவரசியும் பிறந்தார், அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

10 மறுமொழிகள்:

At 12:41 PM, February 21, 2006, Blogger யாத்ரீகன் மொழிந்தது...

என்னதான் ஹாரிபாட்டர்க்கு அத்தனை வரவேற்பு இருந்தாலும் இந்த சின்ன கதையில இருந்த சுவாரசியம் இருந்த மாதிரி தெரியல... இந்த மாதிரி கதைகளை படிக்கையில், சின்ன வயதிலே படிச்ச பூந்தளிர் நியாபகம் வருது... உங்கள் பணி தொடரட்டும் பரஞ்சோதி....

 
At 6:25 PM, February 21, 2006, Blogger இலவசக்கொத்தனார் மொழிந்தது...

கூடல் குமரன்னு படிச்ச உடனே நம்மாளை பத்தி என்ன எழுதியிருக்கீங்கன்னு பாக்க வந்தேன். விஷயம் வேற. கதை நல்லாவே இருக்கு.

 
At 9:20 AM, February 22, 2006, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

வாங்க யாத்திரீகன்,


உங்க கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.

இன்னும் மாயாஜாலம் கலந்து எழுத நினைத்தேன், ஆனால் கதை ரொம்பவும் நீண்டுவிடும் என்று நினைத்து விட்டு விட்டேன்.

அங்கே இங்கே படித்ததை வைத்து பெரிய மாயாஜாலத் தொடர்கதை எழுதவும் நினைத்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் பார்க்கலாம்.

 
At 12:16 PM, February 22, 2006, Blogger b மொழிந்தது...

மிக நல்ல ஆனால் பெரிய கதை பரம்ஸ். கூடல் குமரன் என்றதும் குமரன் மல்லி நடராஜன் ஞாபகம் வந்தார்.

 
At 12:25 PM, February 22, 2006, Blogger யாத்ரீகன் மொழிந்தது...

அட சூப்பர் ஐடியா.... ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றேன்... வாண்டுமாமா என்று முன்பொருவர் இருந்தார், இதுவரை அவரோட கதைகளை அடிசிக்க எதையும் படிக்கலை, அவரோட கதை எவ்வளவு பெரியதாயினும்..... படிச்சிருப்பீங்கனு நினைக்குறேன்.... அதை எதிர்பார்திருப்பதுபோல... பயங்கர ஆவலோட இருக்கேன்..

 
At 5:54 PM, February 22, 2006, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

வாங்க வாங்க இலவசக்கொத்தனார் அவர்களே!

உங்க பதிவுக்கு அடிக்கடி வருவேன், நீங்க தான் எங்க மூளையை கொத்தி, சுறுசுறுப்பாக மாத்துறீங்களே!

நான் இப்போ என் நண்பர்களை கதையில் வரும்படியாக செய்கிறேன், அதான் இந்த முறை குமரன்.

விரைவில் இராகவன் அண்ணா எல்லாம் வருவார். அவருக்காக ஒரு சூப்பர் கதை இருக்குது.

அப்புறம் பெயரை பார்த்தாவது குமரன் வருவாரா என்று பார்த்தால், ஆளையே காணவில்லையே.

 
At 6:15 PM, February 22, 2006, Blogger இலவசக்கொத்தனார் மொழிந்தது...

பரஞ்சோதி,
நம்ம பக்கம் வரும் போது ஒரு உள்ளேன் அய்யா போட்டீங்கனாதானே தெரியும்.
குமரனும் இந்த மாதிரி சைலண்ட்டா வந்து பாத்துட்டு போயிட்டரோ என்னவோ.

 
At 6:45 PM, February 22, 2006, Blogger குமரன் (Kumaran) மொழிந்தது...

நீங்க பதிவு போட்ட கொஞ்ச நேரத்துலயே வந்து பார்த்தேன் பரஞ்சோதி. என்னடா பரஞ்சோதி நம்மளைப் பத்தி ஏதோ கதையெழுதியிருப்பார் போல இருக்கேன்னு வந்தேன். வந்து மேலோட்டமா பார்த்ததுல கூடல் குமரன் நான் இல்லைன்னு தெரிஞ்சது. அப்பிறம் படிக்கலாம்ன்னு விட்டுட்டேன். இப்ப தான் முழுசும் படிச்சேன். ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. என் சொந்தக் கதைய இந்தக் கதையில அங்க அங்க கொஞ்சம் பயன்படுத்தியிருக்கீங்களோன்னு தோணுச்சு. கடைசி வரியில உறுதியாத் தெரிஞ்சிருச்சு. :-)

இப்ப எல்லாம் வலைப்பக்கத்திலேயே பதிவுகளைப் படிக்க நேரம் கிடைப்பதில்லை. அதனால் பிரிண்ட் அவுட் எடுத்து பேருந்திலோ வீட்டிலோ படிக்கிறேன். அதனால் சில நேரம் பின்னூட்டம் தர முடிவதில்லை.

 
At 2:08 AM, February 24, 2006, Blogger சிவா மொழிந்தது...

ரொம்ப நல்லா இருந்தது பரஞ்சோதி! முழுக்கதையும் சுவாரஸ்யமா போனது. நம்ம குமரன வேற உள்ள இழுத்து போட்டுட்டீங்க :-)). நடத்துங்க..நடத்துங்க..அடுத்தது ராகவனா...அதை படிக்க போறேன்.

 
At 3:17 PM, March 14, 2006, Blogger கைப்புள்ள மொழிந்தது...

நல்ல கதை...வலைப்பதிவுலக ஹீரோக்கள் கதைகளுக்குக் குழந்தைகளின் ரியாக்ஷன் எப்படி இருந்தது என தெரிந்துக் கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

 

Post a Comment

<<=முகப்பு