சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Saturday, October 22, 2005

கதை எண் 48 - முல்லா நஸ்ருத்தீன்

முல்லா பற்றிய சிறிய விபரம்

முல்லா நஸ்ருத்தீன் என்பது அவருடைய முழுபெயர். இதில் முல்லா என்பது அறிஞர் - கல்விமான் என்பதைக் குறிக்கும் சிறப்பு அடைமொழியாகும். இவர் துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் ஆவார். துருக்கியிலுள்ள எஸ்கி ஷஹர் என்பது அவருடைய பிறந்த ஊர் எனக் கூறப்படுகின்றது. அந்த ஊரில் முல்லாவின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் மக்கள் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.

முல்லா நஸ்ருத்தீன் சிறந்த கவிஞர், சிறந்த நகைச்சுவையாகக் கவிதை எழுதுவதிலும் பேசுவதிலும் வல்லவர் ஆவார். இவருடைய இந்த புகழுக்கு அவர் எழுதிய கதைகள் சான்றாகும். இவருடைய கதைகள்யாவும் அவருடைய வாழ்க்கையில் நடந்தவற்றை ஒட்டியதாக இருந்தது.

முல்லாவின் உடைவாள் *

முல்லா ஒரு தடவை அயல்நாட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது.

அந்தக் காலத்தில் எவ்வளவு தொலைதூரமாக இருந்தாலும் கழுதையின் மீது சவாரி செய்துதான் செல்ல வேண்டும்.

முல்லா செல்ல வேண்டியிருந்ததோ பயங்கரமான காட்டு வழி. அங்கு கள்வர் பயமும் உண்டு. முல்லா நீண்ட தொலைவு பணயம் புறப்பட்ட செய்தியை அண்டை வீட்டுக்காரர் அறிந்து மிகவும் கவலைப்பட்டார்.

அவர் முல்லாவை நோக்கி முல்லா அவ்வளவு நீண்ட தூரம் பயணம் செய்கிறீர்களே. வழியில் கள்வர் பயம் அதிகமாயிற்றே. நீர் பாதுகாப்பாகச் செல்ல ஏதாவது ஏற்பாடு செய்து கொண்டீரா ? என்று கேட்டார்.

“கள்வன் என்னை என்ன செய்வான் ? என்னிடம் அப்படியொன்றும் பணம் காசு கிடையாதே ? “ என்றார் முல்லா.

“கள்வனுக்கு அதெல்லாம் கணக்கில்லை. உம்மிடம் காசு இல்லை என்றால் உமது கழுதையைப் பிடுங்கிக் கொள்வான். கழுதை இல்லாமல் உங்களால் தொடர்ந்து எவ்வாறு பயணம் செய்ய முடியும் ? “ என்று அண்டை வீட்டுக்காரர் கேட்டார். அவர் சொன்னதில் இருந்த உண்மையை முல்லா உணர்ந்து கொண்டார்.

“நீங்கள் சொல்வது சரிதான் நான் என்ன செய்வது ? பிரயாணத்தைத் தவிர்க்க முடியாதே ? “ எனக் கவலையுடன் கூறினார் முல்லா.

“கவலைப்படாதீர்கள் என்னிடம் நல்ல உடைவாள் ஒன்று இருக்கிறது. அதைக் கையோடு எடுத்துச் செல்லுங்கள். திருடன் எதிர்ப்பட்டால் இந்த உடைவாளைப் பயன்படுத்தி அவனை விரட்டிவிட்டுக் கழுதையைக் காப்பாற்றுங்கள் “ என்ற கூறி உடைவாளையும் அவரிடன் அளித்தார்.

முல்லாவுக்கு வாள் எடுத்துச் சண்டை போட்டுப் பழக்கம் இல்லை என்றாலும் அண்டை வீட்டுக்காரர் அன்போடு தருவதை மறுக்கக் கூடாதே என்று அவருடைய உடைவாளை வாங்கி இடுப்பில் கட்டிக் கொண்டார். பிறகு அவர் பிரயாணத்தைத் தொடர்ந்தார். ஒரு காட்டு வழியாக முல்லா கழுதைமீது அமர்ந்து சென்று கொண்டிருந்தார். நான்கு திருடர்கள் அவரை வழிமறித்துக் கொண்டனர்.

“கிழவனாரே, உம்மிடம் உள்ள விலை உயர்ந்த பொருளைக் கொடுத்துவிடும். உம்மை உயிரோடு அனுப்பி விடுகிறோம் “ என்று திருடர்கள் கேட்டனர்.

“என்னிடம் காசு பணமெல்லாம் ஏதுவும் கிடையாதே நான் ஒரு பரம ஏழை” என்றார் முல்லா.

“அப்படியானால் உம்முடைய கழுதையை எங்களிடம் ஒப்படைத்து விட்டு நடந்து செல்லும் “ என்ற கள்வர்கள் மிரட்டினர்.

“கழுதை இல்லாமல் இந்த வயதான காலத்திலே என்னால் நடந்து செல்ல முடியுமா ? “ என்று கூறிச் சிறிது யோசனை செய்தார் முல்லா.

“ஒரு ஏற்பாடு செய்யலாம் என்று இருக்கிறேன். உங்களுக்கு திருப்பதியாக இருக்கும் என்று தோன்றுகிறது” என்றார் முல்லா.

“என்ன யோசனை ? “ என்று கள்வர்கள் கேட்டனர்.

“என்னிடம் ஒரு உடைவாள் இருக்கிறது கழுதைக்குப் பதிலாக அதைப் பெற்றுக் கொண்டு என்னை விட்டு விடுகிறீர்களா ? “ என்றார் முல்லா.

கள்வர்கள் உடைவாளை வாங்கிப் பார்த்தனர் விலை மதிப்புள்ள அருமையான வாள் அது. கள்வர்களின் தொழிலுக்கும் அது பயன்படும். அதனால் அவர்கள் மகிழ்ச்சியோடு உடை வாளைப் பெற்றுக் கொண்டு முல்லாவை கழுதையுடன் தொடர்ந்து போக அனுமதித்தனர்.
பிரயாணத்தை முடித்துக் கொண்டு முல்லா ஊர் திரும்பினார்.

வீட்டுக்கு வந்த முல்லாவை அண்டை வீட்டுக்காரர் மகிழ்ச்சியுடன் வரவேற்று “பிராயணம் எவ்வாறு இருந்தது” என விசாரித்தார்.

“எதிர்பார்த்ததைவிட நன்றாக இருந்தது” என்றார் முல்லா.

“வழியில் கள்வர் தொல்லை ஏதாவது ஏற்ப்பட்டதா ? “ என அண்டை வீட்டுக்காரர் கேட்டார்.

“அதை ஏன் கேட்கிறீர்கள். நான்கு திருடர்கள் வந்து என்னை வளைத்துக் கொண்டார்கள்.

நல்ல வேளையாக நீங்கள் கொடுத்த உடைவாள் இருந்தது. அதை உபயோகித்து நிலமையைச் சமாளித்து விட்டேன் “ என்றார் முல்லா.

“உடைவாளைப் பயன்படுத்தி அந்தக் கள்வர்களை விரட்டி அடித்திருப்பீர் என்று நினைக்கிறேன் “ என்றார் அண்டை வீட்டுக்காரர்.

“உங்கள் உடைவாள் தான் என் உயிரைக் காப்பாற்றி கழுதையை மீட்டுத் தந்தது. உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன் “ என்று முல்லா அண்டை வீட்டுக்காரருக்கு நன்றி கூறினார்.

“உடைவாள் உங்களிடம் பத்திரமா இருக்கிறதல்லவா ? இனி உமக்கு உடைவாள் தேவைப்படாது. கொடுத்து விடுங்கள் “ என்றார் அண்டை வீட்டுக்காரர்.

“உடைவாள் என்னிடம் ஏது ? “ அதைத்தான் அவர்களிடம் கொடுத்துவிட்டேனே என்றார் முல்லா.

“கள்வனிடம் கொடுத்து விட்டீரா ? அவர்களிடம் ஏன் உடைவாளைக் கொடுக்க வேண்டும். உடைவாளைக் கொண்டு சண்டைபோட்டு கள்வர்களை விரட்டியிருப்பீர் என்றல்லவா நான் நினைத்தேன்” என்று வியப்பும் திகைப்பும் தோன்றக் கேட்டார் அண்டை வீட்டுக்காரர்.

காட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சியை முல்லா விரிவாக எடுத்துச் சொன்னார். அண்டை வீட்டுக்காரருக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

6 மறுமொழிகள்:

At 8:35 PM, October 22, 2005, Anonymous Anonymous மொழிந்தது...

அருமை.

எல்லோராலும் எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. அவரவர்க்கென்று ஒரு தனித் திறமை உள்ளது. முல்லாவினால் அந்த உடைவாளின் துணை கொண்டு திருடர்களிடமிருந்து தம்மை காப்பாற்றிக்கொள்ள முடிந்தது, போரிட்டல்ல அவருக்கே உரிய அறிவு நுட்பத்தினால்.

அருமையான கருத்தைச் சொல்ல்லும் கதை.

 
At 1:44 AM, October 25, 2005, Blogger பாலராஜன்கீதா மொழிந்தது...

அன்புள்ள பரஞ்சோதி அவர்களுக்கு,

நான் கேட்டுக்கொண்டிருந்தபடி, கதையைப் பேச்சுத் தமிழிலிருந்து உரைநடைத் தமிழாக மாற்றி எழுதியதற்கு நன்றிகள்

என்றென்றும் அன்புடன்,

பாலராஜன்கீதா

 
At 5:18 PM, October 25, 2005, Blogger G.Ragavan மொழிந்தது...

அருமையான கதை பரஞ்சோதி.

 
At 9:56 PM, October 26, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

நன்றி கீதா,

உங்க கருத்து மிகவும் அருமை.

சில இடங்களில் வீரத்தை விட விவேகத்தை உபயோகிப்பதே சாலச் சிறந்தது.

 
At 9:58 PM, October 26, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

நன்றி பாலராஜன் கீதா,

உரைநடையை விட பேச்சு வழக்கே எனக்கு எளிதாக இருக்கிறது, இருந்தாலும் தாங்கள் கேட்டுக் கொண்டப்படி முடிந்தவரை கொடுக்கிறேன்.

மேலும் என்னிடம் இருக்கும் ஆங்கில சிறுவர் கதை தொகுப்பை தூயத்தமிழிலில் அதுவும் உரைநடையில் உங்களால் மொழிப்பெயர்த்து கொடுக்க முடியுமா?

 
At 10:02 PM, October 26, 2005, Blogger பரஞ்சோதி மொழிந்தது...

நன்றி இராகவன் அண்ணா.

தொடர்ந்து படித்து கருத்துகள் கூறுங்கள்.

 

Post a Comment

<<=முகப்பு