சிறுவர் பூங்கா

சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.

Wednesday, October 26, 2005

கதை எண் 51 - அனகோண்டனும் ஊர்மிளாவும்

அனகோண்டன் என்ற பெயர் கேட்டால் மஞ்சளாறு காட்டில் சிறுத்தைகளும், புலிகளும் கூட பயப்படும்.

மலைப்பாம்பு இருபது அடிக்கும் நீளமாக மரங்களின் கிளைகளில் படர்ந்து இருக்கும் தனது அழகிய உடம்பும், கரும்புள்ளிகளும் அதற்கு பெருமையாக இருந்தது. கரும்பழுப்பு, பழுப்பு என்று பல நிறங்களில் மலைப்பாம்புகள் இருக்குமே தவிர இப்படி லட்சணமான கரும்புள்ளிகளுடன் பார்ப்பது ரொம்பவும் அரிது.

மலைப்பாம்புகள் பொதுவாக பறவைகள், முயல் போன்ற சிறிய பிராணிகளைப் பிடித்து உண்ணும். சில சமயம் மான் போன்ற சற்றுப் பெரிய விலங்குகளைக் கூடத் தாக்கும்.

ஆனால் அனகோண்டன் சற்று வித்தியாசமானது. காட்டெருமைக்கன்று, சிறுத்தை போன்றவற்றைக் கூட தனது அனகோண்டன் பிடியில நொறுக்கி எடுத்துவிடும். அதனால் அதற்கு அனகோண்டன் என்று பெயர் வழங்கி வந்தது.

அனகோண்டன் தனது தலையை ஒரு கிளையின் மீது வைத்தபடி ஆற்றங்கரையையே பார்த்துக் கொண்டு இருந்தது.

மிரண்டு மிரண்டு ஆற்றங்கரையில் வரும் ஊர்மிளா மான் குட்டி அதன் கண்ணில் பட்டது. நீண்டு கிடந்த தனது உடலை வேகமாக தன்னை நோக்கி இழுத்தது.

அநேகமாக அந்த மான்குட்டி மிகவும் குறுகலாக ஓடும், அந்த ஆற்றைக் கடந்து வரலாம். அப்படிக் கடந்து வந்தால் அனகோண்டன் இருக்கும் வழியாகத்தான் வரவேண்டும்.

அந்த ஊர்மிளாமான் ஆற்றில் இறங்கியது. அனகோண்டன்யில் வாயில் நீர் சுரந்தது. அனகோண்டன் மீதமுள்ள தனது உடலை கிளையில் சுற்றி தனது தலையை மட்டும் தொங்க வைத்தபடி அசையாமல் இருந்தது. பார்வை மட்டும் ஆற்றில் இறங்கிய மான் மீது இருந்தது.
ஆற்றில் மான் நீந்தியது.

இதே மரத்திலிருந்துதான் அனகோண்டன் ஒரு நாள் ஒரு சிறுத்தையை மடக்கிப் பிடித்தது. ரப்பர் போன்ற தனது உடம்பை கயிறு போல் பாவித்து இறுக்கிய வேகத்தில் சிறுத்தையின் எலும்புகள் மடமடவென்று முறிந்தன.

மான் கரையேறி விட்டது. அனகோண்டன் அசையாமல் இருந்தது. அந்த மரத்திற்கு அருகாமையில வந்த பாதையில் சுற்றிப் பார்த்தபடி நடந்து வந்தது ஊர்மிளா மான்குட்டி, அது குழப்பத்தில் இருந்தது. சொல்லி வைத்ததுபோல் அந்த மரத்தடியில் வந்து நின்றது, மேலே இருந்த அனகோண்டனை பார்கக்வில்லை. அனகோண்டன் மான்குட்டியில் கழுத்தில் மாலையாய் விழுந்தது.

"அம்மா" என்று கதறியது மான்குட்டி. எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து போனது. அப்படி இப்படி கூட அசையாமல் நின்றது.

அனகோண்டனுக்குக் கூட ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. ஊர்மிளாவின் முகத்தைப் பார்க்க பாவமாக இருந்தது. அதற்குள் அனகோண்டன் ரப்பர் போன்ற நீண்ட தனது உடலால் மானைச் சுற்றிது. மான் தேம்பி அழுதது. அதன் கண்களில் கண்ணீர் வழிந்தது.

அனகோண்டன் இப்படி திடீர் தாக்குதல் நடத்தும் போது எந்த ஒரு மிருகமும் இதனிடம் தப்பிக்க போராட்டம் நடத்துமே தவிர இப்படி அழுது ஆர்ப்பாட்டம் செய்யாது.

"ஆமாம்.... ஏன் அழுகிறாய்" என்றது அனகோண்டன்.

ஊர்மிளா மான் தனது அழுகையை நிறுத்திவிட்டு உறுதியான குரலில் சொன்னது.

"இப்போது சாவு என்பது நிச்சயமாகி விட்டது. சாகும் முன்னர் அம்மாவின் உயிரைக் காப்பாற்றிய பெருமையாவது என்னைச் சேரும். நீங்கள் மனது வைத்தால் எனக்கு உதவலாம்" என்றது.

"நான் எப்படி உதவ முடியும்?" என்றது.

"மொட்டச்சி அம்மன் பாறைக்குச் சென்று சில மூலிகைகளை எடுத்து என் அம்மாவிற்கு கொடுத்துவிட்டு மீண்டும் இங்கு வந்து சேருகிறேன். பின்னர் உங்கள் இஷ்டப்படி என்னைக் கொன்று சாப்பிடுங்கள்" என்றது மான்.

“மூலிகையா? அது ஏன், அதுவும் உன் அம்மாவுக்கு, உன் அம்மாவுக்கு என்ன ஆச்சு” என்றது அனகோண்டன்.

“என் தாயார் இரண்டு நாட்களுக்கு முன்பு என்னை காப்பாற்ற ஒரு கழுதைப்புலியிடம் மோதியது, அதில் சரியான காயம், என் அம்மாவால் எழுந்து நடக்க முடியவில்லை, கபீஷ் மாமா தான், அந்த மூலிகையைப் பற்றி சொன்னார், அது சாப்பிட்டால் காயம் எல்லாம் விரைவில் குணமடையுமாம், அதான் அந்த மூலிகையைத் தேடி வந்தேன், உங்களிடம் மாட்டிக் கொண்டேன்”

"சரி, நான் உன்னை விடுவித்தால் நீ மீண்டும் என்னிடம் திரும்பி வருவாய் என்பதற்கு என்ன உத்திரவாதம்?" அனகோண்டன்.

"நான் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் நீங்க என் கூடவே வாங்க.. மூலிகைகளை பறித்து என் தாயிடம் சேர்த்ததும் நீங்க என்னைக் கொன்று சாப்பிடுங்க"

"உன்னை விட்டால் என்னால் பிடிக்கமுடியாது? உன் வேகம் என்ன, என் வேகம் என்ன?" என்றது அனகோண்டன்.

"என் மீது நம்பிக்கை இல்லை என்றால் நீங்க என்ன சொல்கிறீர்களோ அதற்கு நான் கட்டுப்படுகிறேன்"

"நான் உன் உடலை சுற்றியபடியே இருப்பேன். என்னை சுமந்த படியே செல்ல வேண்டும்" என்று சொன்னது அனகோண்டன். அது அதற்கு ஒத்துக் கொண்டது. அனகோண்டனன சுமந்தபடியே சென்றது மான்.

மொட்டச்சி அம்மன் பாறைக்குச் சென்றது. கபீஷ் சொன்ன மூலிகைகளை சேகரித்துக் கொண்டது. மலைப்பாம்பு தன் உடலைச் சுற்றியிருக்க, அந்த பாரம் கூட தெரியாமல், மூலிகை கிடைத்த உற்சாகத்துடன் ஊர்மிளா மான் நடந்தது. தன் உயிர் போகும் முன்னர் தன்னை கஷ்டப்பட்டு வளர்த்த அம்மாவுக்கு உதவுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது அதற்கு சந்தோஷமாக இருந்தது.

மான் தன் இருப்பிடத்திற்கு அருகாமையில் வந்தது. தன் இருப்பிடத்தையும் படுத்துக்கிடக்கும் அம்மாவையும் காட்டியது. அனகோண்டன் அதன் உடம்பிலிருந்து மெல்ல இறங்கியது.

"மூலிகைகளை பழங்களைக் கொடுத்துவிட்டு தப்பிக்கலாம் என்று நினைத்தால்.... அப்புறம் நோய் வாய்ப்பட்டிருக்கும் உனது அம்மா எனக்கு உணவாக நேரிடும்" என்றது அனகோண்டன்.

"நீங்க செய்த உதவியை ஒரு நாளும் மறக்க மாட்டேன். என் வார்த்தையை மீறமாட்டேன்" என்று சொல்லிவிட்டு துள்ளி ஓடியது ஊர்மிளா மான் குட்டி. அனகோண்டன் மெல்ல ஊர்ந்து மரங்களின் ஊடே மறைந்து கொண்டது. அங்கு அதற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு பதினைந்து இருபது மான்கள் உடல் நலம் விசாரித்தபடி இருந்தன.

அதில் இரண்டு மூன்று மான்கள் ஒன்று சேர்ந்தால் கூட அவற்றின் கொம்புகளால் தனது தலையைக் குத்திக் கிழித்து விட முடியும். இப்படித்தான் சென்ற வாரம் ஒரு மலைப்பாம்பை இரண்டு பெரிய மான்கள் கொம்பினால் நசுக்கி எடுத்துவிட்டன. அந்த மாலைப் பாம்பு அங்கேயே உயிரை விட்டது.

அதை நினைத்து பார்த்த பின்பு, பயம் என்றால் என்னவென்று தெரியாத அனகோண்டன்க்குக் கூட கொஞ்சம் நடுக்கமாக இருந்தது.

"கையில் கிடைத்ததை விட்டு விட்டோமோ?" என்று கூட ஆதங்கமாக இருந்தது.

எதற்கும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. அனகோண்டன் பெரிய தனது உடலை வளைத்து நெளிந்தபடி மறைவிடம் நோக்கி நகர ஏதோ அரவம் கேட்டது.

அதே ஊர்மிளா மான்குட்டி தனியாக வந்தது.

"என் கடமை முடிந்தது... எனது வார்த்தையை நான் காப்பாற்றி விட்டேன்.....உங்களுக்கு எனது நன்றிகள்" என்று சொன்னவாறு அனகோண்டனின் முன்னால் வந்து நின்றது மான்குட்டி.

அனகோண்டனின் முரட்டுத் தோலையும் மீறி அதன் உடல் புல்லரித்தது.

"என்னைப் பற்றி அங்கே இருக்கும் மான்களிம் ஏதாவது சொன்னாய்" என்றது அனகோண்டன்

"இல்லை எனக்கு உதவி செய்த உங்களை காட்டிக் கொடுக்க மாட்டேன்."

"உன்னை கொன்று தின்னப் போகும் நான் எப்படி உனக்கு உதவியவன் ஆவேன்?"

"நீங்க உதவாவிட்டால் என் அம்மாவைக் காப்பாற்ற முடியாது போயிருக்கும். பெற்றோருக்காக தனது உயிரைத் தருவதைவிட பெருமை தரக்கூடிய விஷயம் உலகத்தில் வேறு என்ன இருக்க முடியும்?"

அனகோண்டன் தனது தலையை மெல்ல உயர்த்தி மான்குட்டியின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தது.

"சொன்ன வாக்கை காப்பாற்றிய, தாய்க்காக தனது உயிரை தரத்துணிந்த உன்னை வணங்கினாலே ....எனக்குப் பெருமை, உன்னை உன் தாயாரோடு போய் இருக்கவே விரும்புகிறேன், இனிமேல் உனக்கு எந்த ஆபத்து வந்தாலும் நான் காப்பாற்றுவேன், நாம் இருவரும் நண்பர்கள்" என்று உறுதி கூறியது அனகோண்டன்.

ஊர்மிளா மான்குட்டி அனகோண்டனை ஆச்சரியமாகப் பார்த்துது. ஊர்மிளாவை வாழ்த்தி விட்டு, மரக்கிளைகளில் தவழ அதன் உடம்பின் கரும்புள்ளிகள் வைரமாக மின்னின.

0 மறுமொழிகள்:

Post a Comment

<<=முகப்பு